ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் எல்லாம் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்தல், பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குதல், அசையா சொத்துப் பரிவர்த்தனை விவரங்கள், டெர்ம் டெபாசிட்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை போன்ற பல விவரங்கள் இதில் அடங்கும்.
இது போன்ற தகவல்களைப் பெறுவதற்காகவே வருமான வரித் துறையினர் படிவம் 61ஏ என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது. தனி நபர்கள் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் எல்லாம் செய்யும் போது அதனைத் தவறாமல் வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட வேண்டும்.
ஒருவேலை வரி தாக்கலின் போது பின் வரும் விவரங்களை எல்லாம் நீங்கள் குறிப்பிட மறந்தால் வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டிஸ் பெற வாய்ப்புள்ளது.
அசையா சொத்து
30 லட்சத்துக்கும் அதிகமான விலையில் அசையா சொத்துக்கள் ஏதேனும் வாங்கும் போது இந்தத் தகவல்கள் வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். எனவே வரி தாக்கலின் போது இப்படி ஏதேனும் பரிவர்த்தனை செய்தால் கண்டிப்பாகக் கணக்கு காண்பிக்க வேண்டும்.
வல்லுநர்கள்
தனிநபர் வல்லுநர்கள் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஏதேனும் பணப் பரிவர்த்தனை, பொருள் வாங்குவது, சேவைப் பெறும் போது அந்தத் தகவல்களை வரி தாக்கலின் போது குறிப்பிட வேண்டும்.
கேஷ் டெபாசிட்
10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஒரு நிதி ஆண்டில் பணப் பரிவர்த்தனை செய்திருந்தால் அவர்கள் விவரங்களை வங்கிகள் வருமான வரித் துறைக்கு அளித்து விடும்.
நடப்பு கணக்கு டெபாசிட்
ஒரு நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையைப் பண டெபாசிட்டாகவோ, பணம் எடுப்பது போன்றவற்றை நடப்புக் கணக்குகளில் செய்யும் போது அந்தக் கணக்கு விவரங்களும் வருமான வரித் துறைக்குச் சென்றுவிடும்.
வங்கி டிராப்ட்டுகள்
10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஏதேனும் பரிவர்த்தனையை வங்கி டிராப்ட்டுகள் மூலம் செய்யும் போது அந்தப் பரிவர்த்தனை விவரங்களை வங்கிகள் வருமான வரித் துறைக்கு அனுப்பிவிடும்.
நிதி பத்திரங்கள்
தனிநபர் ஒருவர் பங்குச் சந்தை, பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்திருந்தால் நிறுவனங்கள் முதலீட்டாளரின் விவரங்களை வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்டுவிடும்.
கிரெடிட் கார்டு பேமெண்ட்
எந்த ஒரு கிரெடிட் கார்டு பேமெண்ட்களும் 2 லட்சத்திற்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்யும் போது வருமான வரித் துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.
கோல்ட் இடிஎஃப்
தங்கம் மீதான ஃபண்டுகளில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் செய்யப்பட்டு இருந்தால் வருமான வரித் துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்
முதலீட்டாளர் ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் செய்யும் போது இந்த விவரங்களும் வருமான வரித் துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.
பங்குச் சந்தை முதலீடுகள்
1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டாளர் ஒருவர் முதலீடு செய்யும் போது வருமான வரித் துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.