பிஎப் என்றாலே ஊழியர்களுக்கான ஓய்வு காலச் சேமிப்பு திட்டம் என்று கூறலாம். நிதி வல்லுநர்கள் எப்போதும் இடையில் பிஎப் பணத்தை எடுக்க பரிந்துரைக்க மாட்டார்கள்.
பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த இரண்டு மாதத்தில் பிஎப் பணத்தை திரும்பப் பெற இயலும்.
இதற்கான படிவங்களை பிஎப் அலுவலகம் அல்லது தான் பணிபுரிந்த நிறுவனத்தில் பூர்த்தி செய்து அளிப்பதன் மூலம் பெற இயலும்.
எனவே பிஎப் பணத்தை திரும்பப்பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம்.
வரி விலக்கு
நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை.
இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை.
5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..?
ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும்.
நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி
பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும்.
பிரிவு 80 சி
பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும்.
டிடிஎஸ்(TDS)
தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும்.
இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.