முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) இந்த நாட்களில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டன. பரஸ்பர நிதி திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு SIP மூலம் செய்யப்படும் முதலீடுகள் பற்றிய பல்வேறு விளக்கங்களை விதைத்துள்ளது.
சுருங்கச் சொன்னால் பரஸ்பர நிதித் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு ஆசானாக இருந்து SIP திட்டங்களைப் பற்றிய அறிவைப் போதித்துள்ளன. இந்தத் திட்டத்தில் உள்ள சூட்சுமம் என்னவெனில், நாம் நம்முடைய மாதாந்திர வருவாயிலிருந்து, இந்தத் திட்டங்களில் மாதந்தோறும் முதலீடு செய்யலாம்.
நிதி ஆய்வாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி மேற்கோள் காட்டும் ஒரு முக்கிய நன்மை யாதெனில், நீங்கள் மாதந்தோறும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுடைய முதலீட்டு மதிப்பு சராசரி மதிப்பாக மாறி விடும், அதன் மூலம் சரிந்து வரும் சந்தையில் முதலீட்டுச் செலவுகளைக் கட்டுப் படுத்தி, உங்களுடைய ஆபத்துக்களை எளிதாகக் குறைக்க முடியும்.
இந்தத் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள் இருந்த போதிலும், முதலீட்டாளர்கள் சந்தையில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பொழுது பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோமா.
சிக்கல்
முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் சில நேரங்களில் போதுமான நிதியில்லாமல் கஷ்டப்பட நேரிடும். அதாவது இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர் முன் தேதியிட்ட காசோலை அல்லது இசிஎஸ் மூலம் மாதந்தோறும் பணம் வழங்க அறிவுறுத்தியிருக்கலாம். அத்தகைய தேதிகளில், முதலீட்டாளருடைய வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் சாசோலை அல்லது இசிஎஸ் திரும்பி வர நேரிடலாம்.
இது முதலீட்டாளர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கிவிடும். எனவே குறிப்ப்ட தேதிகளில், முதலீட்டாளர் தன்னுடைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இருப்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது.
நினைவூட்டுதல் சேவை அவசியம்
முதலீட்டு நிறுவனங்கள் வங்கிக் கையிருப்பில் போதுமான பணத்தை வைத்திருக்க முதலீட்டாளர்களை நினைவு படுத்தும் சேவையை அளிக்குமானால், முதலீட்டாளர்கள் அந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில், முதலீட்டு நிறுவனத்தை முதலீட்டாளர், தற்பொழுது காசோலையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தலாம்.
முதலீட்டு நிறுவனம் சார்ந்த பிரச்சனை
முதலீட்டு நிறுவனங்களில் இது அடிக்கடி நடப்பதில்லை எனினும் இது ஒரு பிரச்சனையாக விளங்குகின்றது. முதலீட்டாளர் வழங்கிய பின்தேதியிட்ட காசோலைகளை, நிதி நிறுவனம் முதலீடு செய்யச் சில நேரங்களில் தாமதிக்கும். இது முதலீட்டு மதிப்பில் பெரிய மாற்றத்தைத் தரலாம்.
குறைபாடு
SIP திட்டம் என்பது ஒரு சராசரி அடிப்படையிலான முதலீட்டுத் திட்டம் ஆகும். இங்கே உள்ள ஒரு குறைபாடு என்னெவெனில், நீங்கள் விற்ற பின்னர் அந்த முதலீட்டிற்கு லாபம் கிடைக்கலாம். சில நேரங்களில் சராசரி முதலீடு லாபம் ஈட்டாமலும் போகலாம். இதன் காரணமாக முதலீட்டாளர் விரக்தி அடைய நேரிடலாம்.
உதாரணம்
இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் மிக எளிதாக விளக்கலாம். நீங்கள் கடந்த ஒரு வருடமாக SIP திட்டத்தின் மூலமாக முதலீடு செய்து வருகின்றீர்கள். நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு மாதமும் சந்தை அதனுடைய உச்சத்தில் இருந்தது. அதன் காரணமாக உங்களுடைய சராசரி முதலீட்டின் அளவும் மிக அதிகமாக இருக்கும். எனினும் கடந்த சில மாதமாகச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. தற்பொழுது உங்களுடைய முதலீட்டுச் சந்தை மதிப்பு கண்டிப்பாகக் குறைந்து விடும். எனினும் உங்களுடைய சராசரி முதலீட்டு மதிப்பு மிக அதிகம். அதாவது தற்போதைய உண்மையான சந்தை மதிப்பை விட மிக அதிகம். இவ்வாறு இருந்தால் நீங்கள் விரக்தியின் உச்சத்திற்குச் செல்வீர்களா மாட்டீர்களா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தாரக மந்திரம்
நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில் சந்தையின் போக்கைக் கண்டிப்பாகப் புறந்தள்ளக் கூடாது. இது ஒருவேளை பணம் சம்பாதித்துத் தரக்கூடிய ஒற்றைத் தாரக மந்திரமாகக் கூட இருக்கலாம். உதாரணமாக, ஜனவரி 1, 2015 அன்று சந்தை சுமார் 27.507 புள்ளிகளில் இருந்தது. அதே ஆண்டின் இறுதியில் சந்தை சுமார் 25.191 புள்ளிகளாகச் சரிந்தது. இந்தக் காலகட்டத்தில், நீங்கள் SIP முறையில் கண்டிப்பாக அதிகச் சராசரி விலையில் முதலீடு செய்திருப்பீர்கள். எனினும் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுடைய முதலீட்டு அளவு மிகவும் குறைவாக இருக்கலாம். ஏனெனில் அந்த மாதத்தில்தான் சந்தை சரிவைச் சந்தித்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தின் இறுதியில் உங்களுடைய முதலீட்டின் பெரும் பகுதி காணாமல் போயிருக்கும். உங்களுடைய நஷ்டத்தை ஈடு கட்ட சந்தை மேலே வரும் வரையில் நீங்கள் காத்திருக்க வேண்டும். எனவே சராசரியான முதலீட்டின் மூலம் எப்பொழுதும் லாபம் ஈட்ட முடியும் என்பது தவறாகப் போய்விட்டது. சந்தைத் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தால், நீங்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்திப்பீர்கள்.
இது ஒருவேளை SIP நிதி திட்டத்தின் மிகப்பெரிய தீமைகளில் ஒன்றாகக் கூட இருக்கலாம்.