மாத சம்பளத்திற்காக வேலை செய்யும் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு வேலையைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படிப் புதிய வேலை தேடும் அனைவரும் கவனிக்கவேண்டு ஒன்று உள்ளது. ஆம் சம்பளம். புதிதாக வேலைக்குச் சேர நேர்முகத் தேர்வோ, தொலைப்பேசி அல்லது வீடியோ கான்பெரென்சிங் முறையில் இன்டர்வியூவ் நடக்கும். இதில் உங்களுக்கான சம்பளத்தையும் நீங்கள் கேட்பது என்பது எளியக் காரியம் இல்லை. பலருக்கும் இந்த முயற்சியில் தோல்வி மட்டுமே கிடைத்திருக்கிறது.
நீங்கள் கேட்கும் சம்பளத்தை நிறுவனம் உடனடியாக உங்களுக்கு அளிக்க வேண்டுமெனில் அதற்கு நீங்கள் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை நீங்கள் வார்த்தை ஜாலம், நம்பிக்கையை விதைப்பது என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.
இத்தகைய 5 தந்திரங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
உங்களுடைய மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள்..
தற்போது இருப்பதை விடவும் அதிகமாகவும், நல்ல சம்பளம் வேண்டுமெனில், உங்கள் நிறுவனத்தில் உங்களின் மதிப்பையும் சந்தையில் உங்களின் மதிப்பையும் முதலில் கணக்கிடுங்கள்.
உங்களது கல்வி, அனுபவம், புதிய திறன் மேம்பாடு, பணியில் எதிர்கொண்ட சவால்கள், நிறுவனத்தில் வாங்கிப் பாராட்டுகள் என அனைத்தையும் மதிப்பீடாக மாற்றிக் கணக்கிடுங்கள்.
நிதியைத் திட்டமிடுங்கள்
புதிய நிறுவனத்திடம் உங்களுக்கான சம்பளத்தைக் கேட்கும் முன், உங்களின் நிதி செலவுகளைக் கணக்கிடுங்கள், வீட்டு வாடகை, இன்சூரன்ஸ், ஈஎம்ஐ, வீட்டுச் செலவுகள், மின்சாரம், குடிநீர் கட்டணங்கள், சேமிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்..
அனைத்தையும் தாண்டி எதிர்காலத் தேவையையும் கணக்கிட்டுக் கொண்டு புதிய நிறுவனத்திடம் உங்களுக்கான தேவையைக் கோரவும்.
இதை நீங்கள் கணக்கிடாமல் புதிய நிறுவனத்தில் அளிக்கப்படும் சம்பளம் போதவில்லை என்பது பின் நாளில் தெரிந்தால் தொடர்ந்து நிதி நெருக்கடியுடன் வாழவேண்டியது தான்.
ஆய்வு
ஒரு நிறுவனத்தில் இருந்து இன்டர்வியூவ்-க்காக உங்களை அழைத்தால், அங்குப் போகும் முன்னர் இந்த நிறுவனம் சராசரியாக எவ்வளவு சம்பளம் அளிக்கிறது.
உங்களின் அனுபவத்திற்கு அங்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை முதலில் ஆய்வு செய்யுள்ளங்கள். இதைச் செய்தாலே பாதி வெற்றி கிடைத்து விட்டமாதிரிதான்
வாயைத் திறக்க வேண்டாம்..
இதுவே முக்கியமான தந்திரம்: இன்டர்வியூவில் சம்பளத்தைப் பற்றி நீங்கள் வாயைத் திறக்க வேண்டாம், அவர்களாகவே முதலில் துவங்க காத்திருங்கள், அவர்கள் துவங்கினாலும் உங்களின் தேவையை முதலில் சொல்ல வேண்டாம்.
உங்களின் திறனை ஆய்வு செய்த அவர்கள் ஒரு தொகை நிர்ணயம் செய்துவைத்திருப்பார்கள், அதனைத் தெரிந்துகொண்ட பின் அடுத்த விஷயத்தைப் பேசவும்.
காரணம்.. நிறுவனம் கூறும் சம்பளம் உங்கள் கணிப்புகளை விடவும் அதிகமாக இருந்தால் அது உங்களுக்குத் தானே லாபம். குறைவாக இருந்தால் உங்கள் பக்கம் இருக்கும் கருத்துக்களை முன்வைத்து அதிகச் சம்பளத்தைக் கோர முடியும்.
பிற நிறுவனங்கள்
மேலும் உங்களுடைய பணிக்கும், திறனுக்கும் பிற நிறுவனங்களின் என்ன சம்பளம் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. புதிய நிறுவனத்தில் அதிகமாகக் கிடைத்தால் செல்வோம் இல்லையெனில் நம்முடைய கனவு நிறுவனத்தை நோக்கிய பயணம் செய்வோம்.