உங்கள் முதல் சம்பளம் உங்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தைத் தருவதோடு, உங்களுடைய சுய மரியாதையையும் தன்னம்பிக்கையையும் உயர்த்துகிறது. உங்கள் முதல் மாத சம்பளத்தை வாங்கியவுடன் வழக்கமாக நீங்கள் செய்ய நினைக்கும் முதல் விஷயம் உங்களுக்கு அல்லது உங்கள் பெற்றோர்களுக்குச் சில பரிசுகளை வாங்குவதாக இருக்கும் அல்லது நண்பர்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்வீர்கள்.
ஒரு வேலைக் கிடைத்து, உங்கள் முதல் மாத சம்பளத்தை வாங்கும்போது பொருளாதார ரீதியாக நிறைவடைந்த ஒரு வாழ்க்கையை நோக்கிய தொலைநோக்குக் கண்ணோட்டத்தையும் முதல் படிகளையும் எடுத்து வைக்க வேண்டிய காலமாகும். உங்கள் கனவுகளான சொந்தமாக ஒரு வீடு, கார், பைக் மற்றும் பலவற்றை வாங்குவதற்கான அடித்தளமிடுவதற்கு இது சரியான நேரமாகும்.
நீங்கள் முதல் மாத சம்பளத்தை வாங்கும்போது செய்யவேண்டிய ஐந்து விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒரு நிதி சார்ந்த சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
முதல் சம்பளம் என்பது நம் அனைவருக்குமே மிகவும் சிறப்பானது. முதல் சம்பளத்திலிருந்து பொழுதுபோக்குகளுக்காக நீங்கள் அதிக அளவு செலவழிக்கலாம். நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உங்களுக்குப் பிடித்தமான உணவுக் கூடங்கள் உங்கள் முதல் சம்பளத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் இதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். மேலும் வருங்காலத்திற்காகச் சேமிப்பதைத் தொடங்குங்கள். இதர விஷயங்களுக்குச் செலவழிப்பதற்கு முன் சேமிப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். இவை அனைத்திற்கும் முன்னால் ஒரு சேமிப்பு இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள்.
2.ஒரு பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்.
ஒரு வரவு செலவு திட்டமானது உங்கள் செலவுகளைத் திட்டமிடுவதற்கு உதவுகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெறும் சம்பளப் பணத்தைக் கணக்கிடுங்கள். அத்தியாவசிய செலவுகளான வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவுகள், உணவுக்கான செலவுகள் போன்ற அனைத்தையும் பட்டியலிடுங்கள்.
இந்தச் செயல் உங்களுடைய வருமானத்தையும் செலவுகளையும் நீங்கள் புரிந்து கொள்வதற்கு உதவிக்கரமாக இருக்கும். மேலும் இது தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்கு வாய்ப்பைத் தரும்.
3.உங்களுக்கு ஒரு காப்பீடு எடுங்கள்
முதலில் உங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். வேலைக் கிடைத்தவுடன் ஒரு நீண்ட காலத்திற்கான ஆயுள் காப்பீட்டை உடனடியாக வாங்குங்கள். இளம் வயதிலேயே காப்பீட்டுத் திட்டத்தை வாங்கினால், அது மலிவாகக் கிடைக்கும்.
காப்பீட்டுத் திட்டம் என்பது மிகப்பெரிய பொருளாதார அவசர நெருக்கடி நிலைகளான விபத்து, கடுமையான நோய்கள், அல்லது இறப்பு ஏற்பட்டாலும் கூட அவற்றின் செலவுகளைக் கவனித்துக் கொள்ளும். உங்களைக் காத்துக் கொள்ள மருத்துவக் காப்பீட்டை வாங்கலாம். மேலும் இது உங்களைச் சார்ந்திருப்பவர்களைப் பாதுகாக்கும் மற்றொரு வழியாகும்.
4.பங்கு சந்தைகளில் முதலீடு செய்யுங்கள்
நீங்கள் இப்பொழுதுதான் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய தொகையை ஒதுக்க முடியாது. தொடக்கக்கால முதலீட்டாளர்களுக்குப் பங்கு சந்தையில் முதலீடு செய்வது மிகவும் நல்லதாகும்.
சில மாதங்களுக்குப் பிறகு, பெருமளவுத் தொகையை உங்களால் சேமிக்க முடியும். எஸ்ஐபி திட்டத்தில் (முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம்) முதலீடு செய்யத் தொடங்குவது வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல பயன்களைத் தரும்.
5.ஓய்வுக் காலத்தைத் திட்டமிடுங்கள்
ஓய்வுக் காலத்திற்காக எவ்வளவு முன்னதாக நீங்கள் திட்டமிட தொடங்குகிறீர்களோ அவ்வளவு நற்பயன்களை வருங்காலத்தில் பெற முடியும். பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்கான பொது வைப்பு நிதி திட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
உங்கள் நிறுவனம் உங்களுக்கு வருங்கால வைப்பு நிதியை அளிக்கவில்லை என்றால் நீங்களே ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடங்கி விடலாம். உங்கள் வாழ்நாளில் சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வுக் காலத்திற்கான திட்டமிடுதலைத் தொடங்குதல், நீங்கள் எடுக்கும் சிறந்த நிதி சார்ந்த முடிவாக இருக்கும்.