இல்லினாய்ஸ்: கட்டுமானம் மற்றும் சுரங்கத்துறை உபகரணங்களைத் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் 2018ஆம் ஆண்டுக்குள் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூன் மாதக் கணக்கின் படி இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 1,26,800 ஆகும். தற்போது அறிவித்துள்ள ஊழியர்கள் பணிநீக்கத்தின் அளவு 8 சதவீதமாகும்.
10,000 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள இந்நிறுவன கிளையில் இருந்து வெளியான அறிவிப்பில், 2015ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் சுமார் 5000 ஊழியர்களை மேலாண்மை பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டள்ளதாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தளங்களில் பணியாற்றி வரும் 5000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முக்கியத் துறைகள் பாதிப்பு
இந்நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம் மற்றும் ரயில்வே போக்குவரத்து துறைகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதாகப் பொருள்.
லாபத்தில் பாதிப்பு
2015ஆம் ஆண்டுக்கான லாப இலக்குகளை இந்நிறுவனம் வெளியிடாவிட்டாலும், நிறுவனத்தின் மந்தமான விற்பனை மற்றும் அதிகளவிலான மறுசீரமைப்புச் செலவுகள் ஆகியவற்றின் காரணமாக இந்நிறுவனத்தின் லாப அளவு அதிகளவில் பாதிக்கப்படும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளது.
1.5 பில்லியன் டாலர் சேமிப்பு
இப்பணிநீக்கத்தின் மூலம் இந்நிறுவன செலவீணத்தில் சுமார் 1.5 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும் எனக் கேட்டர்பில்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 31,000 பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது கேட்டர்பில்லர் நிர்வாகம்.
பங்குச்சந்தை
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் கேட்டர்பில்லர் நிறுவனப் பங்குகள் சுமார் 6.2 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.