ஸ்டாக்ஹோல்ம்: தொலைத்தொடர்பு துறையைச் சார்ந்த பல்வேறு உபகரணங்களைத் தயாரிக்கும் எரிக்சன் நிறுவனம், சந்தையில் தனது வர்த்தகம் சரிந்துள்ளதால் 4,000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய செலவின குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.
இதனால் உலக நாடுகளில் இருக்கும் எரிக்சன் கிளைகளில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
லாபமும்.. விற்பனையும்..
கடந்த ஏப்ரல் மாதம் எரிக்சன் நிறுவனம் அறிவித்த மோசமான லாப மற்றும் விற்பனை நிலை அறிக்கைகள் நிர்வாகத்தை மிகப்பெரிய கவலையிலும் நெருக்கடியிலும் தள்ளியுள்ளது.
இதனைத் தொடர்ந்து எரிக்சன் நிர்வாகம் ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்கப் பகுதி சார்ந்த வர்த்தகத்தில் கடுமையான செலவின குறைப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தது.
ஆசிய சந்தை
இதன்படி ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்கப் பகுதிகளில் செலவின குறைப்புகள் அதிகரிக்கும் நிலையில் ஆசிய மற்றும் பிற வர்த்தகச் சந்தையிலும் கணிசமான பதிப்பு தென்படுவது தவிர்க்க முடியாது.
4,000 ஊழியர்கள்
இத்திட்டத்தின் படி எரிக்சன் நிறுவனத்தில் 3000 - 4000 ஊழியர்களுக்குப் பணிநீக்கத்திற்காக ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என் ஸ்வீடன் நாட்டுப் பத்திரிக்கை Svenska Dagbladet தெரிவித்துள்ளது.
9 பில்லியன் கிரவ்னா
எரிக்சன் நிறுவனத்தின் இந்தச் செலவின குறைப்பு திட்டத்தின் மூலம் 2017ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் சுமார் 9 பில்லியன் கிரவ்னா சேமிக்க முடியும் என நம்புகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்புத் தற்போது 7,263 கோடி ரூபாயாகும்.
ஏப்ரல் 21
மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி எரிக்சன் நிர்வாகம் அறிவித்த பல்வேறு நிர்வாக மற்றும் செயல்முறை மாற்றங்களைப் படிப்படியாக அமலுக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக இந்த ஸ்வீடன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சரிவு...
பணிநீக்கம், வர்த்தகச் சரிவு ஆகியவற்றின் காரணமார ஐரோப்பிய 6000 டெக்னாலஜி குறியீட்டில் எரிக்சன் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 26 சதவீதம் சரிந்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
2016ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவில் எரிக்சன் நிறுவனத்தில் 1,15,300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு முடிவில் இதன் எண்ணிக்கை 1,16,300 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.