இன்றைய நாள் வரை வரிச் சலுகை, வரி ஏய்ப்புக்கு ஏதுவான கருவிகள் மூலம் பல கருப்புப் புள்ளிகள் துபாயில் தங்களது பணத்தை மறைமுகமாக மறைத்து வைத்து ஜாலியாகச் சுற்றி வந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் துபாயில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள தங்களது பணத்தையும், சொத்துகளை விற்கவும் மறைக்கவும் பல அதிரிபுதிரி வேலைகளைச் செய்து வருகின்றனர்.
அப்படித் துபாய் அரசு என்ன செய்யப்போகிறது.???
இந்தியா - துபாய்
துபாய் மற்றும் பிற ஐக்கிய அரபு நாடுகளில் பல வழிகளில் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி வந்த நிலையில், இந்நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு குறித்த விபரங்கள் அனைத்தையும் இந்திய அரசுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
ஜனவரி 2018
ஐக்கிய அரபு நாடுகள் ஜனவரி 2018 முதல் வங்கி கணக்குக் குறித்த தரவுகள் அனைத்தையும் இந்திய அரசிடம் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காகக் கணக்காளர்களிடம் முக்கிய ஆவணங்களைச் சேகரிக்க UAE வங்கிகள் முடிவு செய்து அதற்கான பணிகளைத் தற்போது செய்து வருகிறது.
இந்தியர்கள்
இதுவரை வெளிநாட்டு வங்கி கணக்குக் குறித்த தகவல்களை அளிக்காதவர்கள், நிறுவன தலைவர்கள், பெரும் பணக்காரர்கள் எனப் பல தரப்பில் இருக்கும் இந்தியர்கள் இதில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
அதுமட்டும் அல்லாமல் இதில் பிடிபடும் அனைவருக்கும் வரி விதிப்பு, அபராதம், வழக்கு எனப் பல சிக்கல்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட உள்ளது.
புதிய விதிமுறைகள்
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வங்கிகள் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதால் துபாய் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களிடம் தங்களது நாட்டின் வரி அடையாள எண், பாஸ்போர்ட்-இன் நகல், எனப் பல ஆதாரங்களைக் கேட்டு வருகிறது.
வங்கி கணக்காளர்களின் ஆதாரங்களைத் திரட்டும் பணியில் வங்கி நிர்வாகங்கள் முழ்கியுள்ள காரணத்தால், துபாய் வங்கிகளில் புதிதாகக் கணக்கை துவங்க 1 மாத காலம் தேவைப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பு வெறும் 3-4 நாட்களில் இப்பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்சூரன்ஸ் திட்டங்கள்
மேலும் இத்தகைய வங்கி கணக்குகளின் வாயிலாக இன்சூரன்ஸ் திட்டங்களைக் கொண்டு பல மோசடிகள் நடந்து வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது.
வங்கியில் கணக்கை திறக்கும் ஒருவர், அவரோ அல்லது கணக்கின் நாமினியோ இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மிகப்பெரிய தொகையைக் கணக்கின் உரிமையாளருக்கு வந்து சேரும். அல்லது கணக்காளர் இறந்து விட்டால் அந்தத் தொகை நாமினியாக நியமிக்கப்பட்டுள்ள நபருக்கு வந்து சேரும்.
இதனைத் தவறாகப் பயன்படுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வங்கிகள் தெரிவித்துள்ளது.
கருப்புப் பணம்
இதுவே பல சமயங்களில் கருப்ப பணத்தை மறைத்து வைக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.
இதனை முழுமையாகக் குறைக்கவும் அனைத்து பணமும் கணக்கில் கொண்டு வருவதற்காகவும் இந்திய அரசும், ஐக்கிய அரபு அமீரகமும் கைகோர்த்துள்ளது.