கோலாலம்பூர்: வர்த்தக ரீதியில் செயல் இழந்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிலையை சீர்படுத்தவும், மேம்படுத்தவும், இந்நிறுவனம் புதிய ஜெரமன் நாட்டை சேர்ந்த கிரிஸ்டோப் முல்லர் அவர்களை சீஇஓ-வாக நியமனம் செய்தது.
கிரிஸ்டோப் தலைமையிலான மலேசிய ஏர்லைன்ஸ் தற்போது 6,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்கியுள்ளது. இதனால் மலேசிய நிறுவனத்தின் செலவீணம் அதிகளவில் குறையும் எனவும் நிதி நிலை மேம்படும் எனவும் இந்நிறுவனம் நம்புகிறது.
மே 1
இந்நிறுவனத்தில் முல்லர் கடந்த மே 1ஆம் தேதி புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டப் பின் முதல் முறையாக தனது திட்டங்களை செய்தியாளர்கள் முன்னர் தெரிவித்தார்.
முக்கிய முடிவுகள்
6000 பணியாளர்களின் பணி நீக்கம் மட்டும் அல்லாமல், விமான இயங்கு தளத்தை குறைக்கவும், நிறுவனத்தின் பெயர் நம்பிக்கை உடையதாக மாற்றவும், நிறுவனத்தின் செயல் திறன் மற்றும் செயல் முறையை மேம்படுத்தவும் உள்ளதாக கிரிஸ்டோப் முல்லர் தெரிவித்தார்.
2 விமானங்கள்
கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய விமானமான எம்ஹெச் 370 239 பயணிகளுடன் காணாமல் போனது, எம்ஹெச் 17 298 பயணிகளுடன் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது போன்ற காரணங்களால் இந்நிறுவனத்தின் நம்பிக்கை சந்தையில் முழுவதும் பறிபோனது.
20,000 பணியாளர்கள்
திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் 20,000 பணியாளர்களுக்கு பணி நிக்க ஆணையை அறிவித்து, பின்னர் 14,000 பணியாளர்களுக்கு புதிய பணி நியமன ஆணையை அளித்துள்ளது மலேசிய ஏர்லையன்ஸ்.
இதன் மூலம் மலேசிய ஏர்லைன்ஸ் சுமார் 6,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
தி ரெமினேட்டர்
இதற்கு முன்னர் கிரிஸ்டோப் முல்லர் அயர்லாந்து நாட்டின் ஏர் லிங்கஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டின் சபானா நிறுவனத்தில் பணியாளர்கள் குறைப்பில் மிகப்பெரிய பங்காற்றினார். வர்த்தக உலகில் கிரிஸ்டோப் முல்லர் அவர்களை தி டெர்மினேட்டர் என்று தான் அழைக்கின்றனர்.