மும்பை: ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையில் ராணுவ தாக்குதல் நடந்து வருவதால் கச்சா எண்ணெயின் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
சவுதி மற்றும் ஏமன் நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளின் விலை உயர உள்ளது.
ஏமனில் மூண்டுள்ள உள்நாட்டுக் கலவரம் உக்கிரமடைந்துள்ளதால் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் நாட்டிற்கு ஆதரவாக, சவுதி அரேபியாவுடன் 8 அரபு நாடுகள் இணைந்து படைகளை திரட்டி விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
விலை உயர்வு
இத்தகைய நிலையில் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.39 டாலர் உயர்ந்து 59 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெயின் விலையும் 2.18 டாலர் உயர்ந்து 51.39 டாலராகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
எண்ணெய் ஏற்றுமதி
இக்கலவரத்தால் முதலீட்டாளர்கள், மத்திய கிழக்கு நாட்டுகளில் இருந்து செய்யப்படும் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு
இந்தியா போன்று அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இப்பிரச்சனைகளால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு சந்தையை அதிகளவில் பாதிக்கும்.
விமான தாக்குதல்
ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ஹவுதி எனப்படும் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா விமான படை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் எண்ணெய் ஏற்றுமதி தளங்களுக்கு அதிகளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.