இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேன் இன் இந்தியா அமெரிக்கச் சந்தையிலும் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் புதிய வாசகத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிய டொனால்டு டிரம்ப் அமெரிக்கர்களையும், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களைக் காப்பாற்ற 'Buy American-hire American' என்ற முழக்கத்தைத் தனது தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது டிரம்ப் அதிகாரத்திற்கு வந்த நிலையில் அவரது 'Buy American-hire American' கண்ணோட்டம் எப்படியெல்லாம் இந்திய நிறுவனங்களைப் பாதிக்கப்பட உள்ளது, அதனைச் சமாளிக்க இந்திய அரசு என்ன செய்கிறது..?
150 பில்லியன் டாலர்
இன்றைய நிலையில் டொனால்டு டிரம்ப்-இன் 'Buy American-hire American' கண்ணோட்டம் 150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்ட இந்திய ஐடித்துறையை மிகப்பெரிய கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசு, அவுட்சோர்சிங் மற்றும் திறன்வாய்ந்த ஊழியர்களின் பணிக்கான புதிய சட்டத்தை எப்படித் தயாரிக்கப் போகிறது, அதன் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளது.
ரவி சங்கர் பிரசாத்
டொனால்டு டிரம்ப்-இன் பதவியேற்பு மற்றும் பை அமெரிக்கன்- ஹையர் அமெரிக்கன் என்ற கண்ணோட்டம் இதனைச் சார்ந்துள்ள பிரச்சனைகளை உணர்ந்த எலக்ட்ரானிக் மற்றும் ஐடி துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், இந்தியா அமெரிக்கா உடன் அர்த்தமுள்ள வர்த்தகத் தொடர்பை வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இரு நாடுகள் மத்தியில் தற்போது இருக்கும் வர்த்தகத் தொடர்பில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.
60 சதவீத வர்த்தகம்
இந்திய வர்த்தகச் சந்தையில் அதிகளவில் அவுட்சேர்சிங் செய்து வருவதும் ஐடி நிறுவனங்கள்தான். 2016ஆம் ஆண்டு வரை, இந்திய ஐடி நிறுவனங்கள் 60 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்கச் சந்தையை மட்டுமே சார்ந்துள்ளது.
மத்திய அரசு
இந்திய ஐடி நிறுவனங்கள் 80 நாடுகளில் 200 நகரங்களில் உள்ளது. அமெரிக்க வர்த்தகச் சந்தையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், வரி வருமானம் அளிப்பதிலும் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் ஒரு வருடத்திற்குப் பல பில்லியன் டாலர்களை வரியாக மட்டுமே செலுத்திய வருகிறது. எனவே இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தைக்கு மிக முக்கியமானது என்று ரவி சங்கர் பிரசாத் பிடிஐ செய்தியாளர்களிடம் கூறினார்.
பேச்சுவார்த்தை
மேலும் அமெரிக்க இந்தியா வர்த்தகத் தொடர்புகள், அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசிடம் மத்திய அரசு விவரித்துள்ளது என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வர்த்தகத் தொடர்பில் தொய்வு இருக்காது என நம்புகிறார் ரவி சங்கர் பிரசாத்.
நாஸ்காம்
இந்திய ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம்-இன் தலைவர் ஆர். சந்திரசேகரன் கூறுகையில், டொனால்டு டிரம்ப் ஆரம்பம் முதலே இந்தியாவிற்கு எதிராக உள்ளார். மேலும் அவர் ஒரு தொழிலதிபராக உள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் வர்த்தகத் தொடர்பை எளிதாகப் பூரிந்துக்கொண்டார்.
இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் களைய அவர் களமிறங்கியுள்ளார். இது இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பாதிப்பாக அமையலாம் என்று தெரிவித்துள்ளது.
சந்திப்பு
அவுட்சோர்சிங் மற்றும் திறன்வாய்ந்த பணியாளர்களைப் பணியில் அமர்த்துவதில் நிலவும் பிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நாஸ்காம் அமைப்பின் குழு அமெரிக்க அரசு அதிகாரிகளைச் சந்திக்க உள்ளது.
பை அமெரிக்கன்- ஹையர் அமெரிக்கன்
டொனால்டு டிரம்ப் பதவியேற்பு பேச்சிலும் பை அமெரிக்கன்- ஹையர் அமெரிக்கன் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்தார். இந்நிலையில் ஏற்கனவே சரிவில் தத்தளிக்கும் ஐடி நிறுவனங்களுக்கு டிரம்ப்-இன் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா.. அமெரிக்கா..
அனைத்திற்கும் மேலாகப் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசும்போது, அமெரிக்கா பர்ஸ்ட், அமெரிக்கன் ஹேண்ட்ஸ் என்று அமெரிக்க ஆதிக்க வார்த்தைகளை அதிகளவில் பயன்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.