அமெரிக்கா இந்த ஆண்டு இறுதியில் செய்யத்திட்டமிட்டுள்ளதாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கிடையில் "ஹெலிகாப்டர் மணி" எனப்படும் சொல் மிகப் பிரபலமாக நிதி சார்ந்த செய்திகளில் வலம் வருகிறது.
ஹெலிகாப்டர் மணியின் அர்த்தம் என்ன என்பதைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
ஹெலிகாப்டர் மணி (பணம்) என்றால் என்ன?
இந்த ஒரு சொல் பொருளாதார வல்லுனரான மில்டன் ஃப்ரீட்மென் என்பவரால் முதலில் உபயோகிக்கப்பட்டது. திடீரென ஹெலிகாப்டரிலிருந்து யாராவது பணத்தை வானத்திலிருந்து கீழே வீசினால் எப்படியிருக்குமோ அதைக் குறிக்கும் வகையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது பொதுவாக வழக்கத்திற்கு மாறான மதிப்பிட முடியாத அளவிற்கு பணத்தை அச்சடித்து அதனை மக்களிடம் புழக்கத்தில் விட்டு அதன் மூலம் மங்கியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியைக் குறிக்கும். மந்தமான சூழலில் அவ்வாறு செய்வது பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏன் இந்த ஹெலிகாப்டர் பணம் குறித்த கருத்து தற்போது முக்கியத்துவம் பெறுகிறது?
வளர்ச்சியடைந்த உலக சந்தைகள் குறிப்பாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் தங்கள் பொருளாதாரத்தை மிகவும் தளர்வான கொள்கைகள் மற்றும் வட்டிவிகிதங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஊக்குவிக்க படாதபாடு பட்டுவருகின்றன.
இதன் காரணமாக ஜப்பானில் தொடங்கி பிற உலக நிதிச் சந்தைகள் தங்களுடைய மத்திய வங்கிகள் மூலம் இந்த ஹெலிகாப்டர் பணக் கொள்கையை பின்பற்றத் திட்டமிட்டு தேவையை அதிகரிக்கவும் பணவீக்கத்தை உருவாக்கவும் முயன்று வருகின்றன.
பணவீக்கத்தை அதிகரிக்கவேண்டுமா? ஏங்க?
பணவீக்கக் குறைவு அல்லது விலைவாசி வீழ்ச்சி பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கக் கூடியது. எனவே விலைவாசி குறையும்போது நுகர்வோர் அல்லது வர்த்தகர்கள் தாம் வாங்கும் பொருள் மேலும் விலை குறையும் எனக் கருதி செலவு செய்யத் தயங்குவர்.
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதனை தற்போது அனுபவித்து வருகின்றன. எனவே ஜப்பான் வங்கியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் இந்த நிலையை மாற்ற பல்வேறு உக்திகளைக் கையாண்டு வருகின்றன.
அப்ப பணத்தை அச்சடித்து விட்டு பணவீக்கத்தை உருவாக்க வேண்டியதுதானே?
பண்ணலாம். ஆனால் அதற்கே உண்டான மிகக் கடுமையான விளைவுகளைக் கொண்டது. இது கட்டுக்கடங்காத நிலையை ஒரு அரசிற்கு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும். ஏனென்றால் பணவீக்கம் ஏற்பட்டால், அங்கே வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போக்கும் அதனால் கடன் மீதான செலவுகளும் அதிகரிக்கும்.. எனவே பணம் அதன் மதிப்பினை இழந்து வர்த்தகம் நிலைகுலைய நேரிடும்.
புள்ளிகளைத் தளர்த்துவதும் ஹெலிகாப்டர் பண முறையும் ஒன்றா?
குவான்டிடேடிவ் ஈசிங் அல்லது நிதிப் புள்ளிகளைத் தளர்த்தும் முறை மூலம் பணத்தை அச்சடித்து அதன் மூலம் அரசின் பத்திரங்களை வாங்குவதாகும். பெரும்பாலும் அரசின் நிதி நெருக்கடிகளை சரிக்கட்ட பணத்தை இவ்வாறு அச்சடித்தாலும் இதனை ஒரு ஹெலிகாப்டர் பண முறையாக அனைவரும் ஏற்பதில்லை.
இந்த முறையில் மத்திய வங்கி சில சொத்துக்களை வாங்கினாலும் அரசு அதற்குரிய தொகையை திருப்பிச் செலுத்தக் கடமை பட்டுள்ளது. எனினும் சில வல்லுனர்கள் ஹெலிகாப்டர் பணக் கொள்கையை ஜப்பான் போன்ற பணத்தொய்வுகளோடு போராடிவரும் நாடுகளின் கொள்கைகளோடு ஒப்பிடுகின்றனர்.