இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. இந்தப் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து பிறகு இன்று வரை அவை சேதமானால் அல்லது அழுக்கானால் மாற்ற முடியாத நிலை இருந்து வந்தது.
எனவே சென்ற வாரம் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ வங்கியான ஆர்பிஐ இரண்டும் இணைந்து 5,10, 20, 50, 100, 500 மற்றும் மதிப்பு நீக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இருந்து வந்த விதிகளைப் புதிய 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைச் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
விரைவில் இதற்கான சட்ட திருத்தம் செய்யப்பட்டு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மாற்ற விதி 2009-ன் கீழ் மாற்ற அனுமதி வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்த மாற்றத்தினைச் செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும் தற்போது ஆர்பிஐ ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி வரும் நாட்களில் 200 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்பிஐ போர்டு அனுமதி அளிக்கும் என்று தெரியவந்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் சாயம் போவதாகப் புகார் எழுந்ததை அடுத்து ஆர்பிஐ இந்த முடிவினை எடுத்துள்ளது.
இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றப் பழைய ரூபாய் நோட்டுகள் போன்று இல்லாமல் ஆர்பிஐ புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.