நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கைகளே காரணம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் குற்றம்சாட்டியிருப்பது, அருவருக்கத்தக்கதாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது
ஏற்கனவே ஒருமுறை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார மந்தம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்த ராஜீவ் குமார், வராக்கடனை வசூலிப்பதில் கையாண்ட அணுகுமுறையே காரணம் எனப் புகார் தெரிவித்திருந்தார்.
வீழ்ச்சி
குற்றச்சாட்டுக்களைக் கடுமையாகச் சாடியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜூவாலா, அடுத்தவர் மீது புகாரை சுமத்தி உண்மையை மறைப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம் முடியும் போது வராக்கடன் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தாகச் சுட்டிக்காட்டினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 4 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மோடி அரசு தெரிவித்ததாக நினைவு கூர்ந்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததாகவும், இதனால் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சுர்ஜூவாலா கூறினார்.