கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து போயுள்ளது. டெல்லியில் தொடங்கிய இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவதால் நாடு முழுவதும் போராட்டம் பரவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனற் கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த அவரை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையே நேற்று முன் தினம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களை தடுக்க தடியடி நடத்தப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்தது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரதமர் இல்லம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.

இன்றைய தினமும் டெல்லியில் போராட்டம் தொடர்கிறது. இதனை அடுத்து டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படை கம்பெனிகளை பாதுகாப்புக்காக குவித்துள்ளது. ஒரு படையில் சுமார் 100 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்ட விடுங்க.. தல தோனியோட புது பிஸ்னஸ் என்ன தெரியுமா? ஒரு பிளானோட தான் இருக்காரு..!!

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவை இதில் அடங்கும். சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல அணி அணியாக இளைஞர்கள் மாணவர்கள் மாணவிகள் டெல்லி ஜந்தர் மந்தருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். போராட்டக்காரர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

PF ஓய்வூதிய தொகை ரூ.7,500ஆக உயர்கிறதா? மக்களவையில் மத்திய அரசு விளக்கம்..!!

டெல்லி மட்டுமில்லாமல் சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல கொச்சியிலும் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.காங்கிரஸ், திமுக, விசிக , ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்திலும் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதற்கிடையே மத்திய அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறியுள்ளார். 20ஆம் தேதி நடந்த போராட்டம் ஒரு டிரெய்லர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.