தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் கீழ் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் தோறும் அதில் பணம் வரவு வைக்கப்படுகிறது. தற்போது பிஎஃப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு 15,000 ரூபாயாக இருக்கும் நிலையில் இதனை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

Advertisement

ஈபிஎஃப்ஓ அமைப்பின் கீழ் வரும் மாதாந்திர சம்பள வரம்பை (Wage Ceiling), தற்போதுள்ள 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிடுவதாகவும் அது தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாகவும் சொல்லப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த முடிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஏற்கனவே மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ள நிலையில் பிஎஃப் சம்பள வரம்பையும் உயர்த்தினால் நிறுவனங்களுக்கு மேலும் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் அரசு தற்காலிகமாக இந்த முடிவினை தள்ளி வைத்திருப்பதாக மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது.

இப்போதைக்கு EPF திட்டம் 2026-இன் கீழ், சம்பள வரம்பு இன்னும் பழையபடியே 15,000 ரூபாயாகவே தொடர்கிறது. அரசு இந்த சம்பள வரம்பை உயர்த்தவில்லை, தற்போதைக்கு உயர்த்தும் திட்டத்திலும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

தற்போது நீங்கள் 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் வாங்கினாலும், பிஎஃப் பங்களிப்புக்கு உங்களின் சம்பளம் 15,000 ரூபாய் என்ற வரம்பிற்கு உட்பட்டே கணக்கிடப்படுகிறது. அதாவது 15,000 ரூபாயில் 12% பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே தொகையை நிறுவனமும் உங்கள் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கிறது. உங்கள் சம்பளத்தில் 1800 ரூபாய், நிறுவனம் சார்பாக 1800 ரூபாய் என 3,600 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

ஒரு வேளை பிஎஃப் அமைப்பு இந்த சம்பள வரம்பை 25,000 ரூபாய் என உயர்த்தினால் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் குறையும். அதாவது மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகை 3000 ரூபாய் என உயரும். அதே தொகையான 3000 ரூபாயை நிறுவனங்களும் உங்கள் பிஎஃப் கணக்கில் வரவு வைக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் மாதம் வரவு வைக்கப்படும் தொகை 6000 ரூபாயாக அதிகரிக்கும்.

Advertisement

இதனால் தான் அரசு அண்மையில் நடைமுறைப்படுத்திய புதிய EPF திட்டத்தில், சம்பள வரம்பை உயர்த்துவதற்கு பதிலாக, டிஜிட்டல் முறைப்படுத்துதல், பணத்தை எடுப்பதை எளிமையாகுவது, தன்னார்வ பங்களிப்புக்கான விதிகளில் மாற்றம் போன்றவற்றை கொண்டு வந்ததாம்.

EPFO சம்பள வரம்பை உயர்த்த வேண்டும் என நீண்ட கால கோரிக்கை இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் நம் கைக்கு வரும் சம்பளம் குறையும் ஆனால் ஓய்வுகாலத்தில் நமக்கு பெரிய நிதி தொகுப்பு கிடைக்கும். ஏனெனில் பிஎஃப் கணக்கில் சேரும் பணத்திற்கு அரசு ஆண்டு தோறும் 8.25% வட்டியை வழங்கி வருகிறது . இது காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைகிறது.