இந்தியாவில் வங்கி கணக்கே இல்லாத நபர் இல்லை என கூறும் அளவுக்கு கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர். இப்படி வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் இருந்து வங்கிகள் பெரிய தொகையை வசூல் செய்து வருவாய் பார்த்துள்ளன. பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு பணம் நம் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது என்பதே தெரிவதில்லை.

Advertisement

நம் நாட்டில் பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் மாதம் தோறும் ஒரு குறைந்த பட்ச தொகையை மினிமம் பேலன்ஸாக வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. மினிமம் பேலன்ஸ் தொகையை (Minimum Average Balance - MAB) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, வங்கிகள் அபராதம் வசூல் செய்கின்றன. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 26,170 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராத தொகையை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். இதன்படி 2025-26 நிதியாண்டில் மட்டும், வங்கிகள் சுமார் 7,086.63 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளன. இதில் தனியார் வங்கிகள் 4,948.71 கோடி ரூபாயும் பொதுத்துறை வங்கிகள் 2,137.92 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளன. தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை விட இரு மடங்கு அதிகமாக அபராத தொகையை வசூல் செய்திருப்பது தெரிய வருகிறது.

மதிய உணவு திட்டத்தில் சிக்கன் பிரியாணி!! அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!!
Advertisement

தனியார் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்காக அபராதம் வசூல் செய்ததில் ஹெச்டிஎஃப்சி வங்கி முதலிடத்தில் உள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்த வங்கி 1,798.14 கோடி ரூபாயும், ஆக்சிஸ் வங்கி 1,081.33 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளன. இந்த இரு வங்கிகள் மட்டுமே தனியார் வங்கிகளின் மொத்த அபராத வசூலில் சுமார் 58% பங்கை கொண்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 477.27 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இருப்பினும், இது நடப்பு கணக்குகளில் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில், எஸ்பிஐ வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கு மார்ச் 2020 முதலே அபராத தொகையை ரத்து செய்துவிட்டது. பொதுத்துறை வங்கிகள் பட்டியலில் பேங்க் ஆஃப் பரோடா ,இந்தியன் வங்கி ஆகியவையும் அதிக அபராத தொகையை வசூல் செய்துள்ளன.

Advertisement

அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (BSBDA) மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு இந்த மினிமம் பேலன்ஸ் அபராதம் விதிக்கப்படுவதில்லை. தற்போது சுமார் 73 கோடிக்கும் அதிகமான இத்தகைய கணக்குகள் அபராதத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளன.

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்: பயணிகளே ஆகஸ்ட் 1 முதல் புதிய முறை அமல்..!!

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில், 10 வங்கிகள் தற்போது சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் அபராத தொகையை முழுமையாக ரத்து செய்துவிட்டன என அரசு தெரிவிக்கிறது. எனவே உங்களிடம் நடப்பு கணக்கு இருக்கிறது அல்லது தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அந்த தொகையை பராமரித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தண்டமாக வங்கிக்கு தான் நம் பணம் அபராதமாக செல்லும்.