தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ரேஷனில் கிடைக்கும் பொருட்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு ஆதாரமாக இருக்கிறது. மத்திய ,மாநில அரசுகள் சார்பாக இலவச அரிசி, மானிய விலையில் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

Advertisement

மத்திய அரசு அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியங்களை ( அரிசி மற்றும் கோதுமை) இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் தானியங்கள் தொடர்பாக மத்திய அரசு முன்வைத்துள்ள புதிய வரைவு மசோதா, நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில், ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அந்த குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய வரைவு மசோதாவின்படி, இந்த முறை மாற்றப்பட்டு, ஒரு நபருக்கு 7 கிலோ என்ற அடிப்படையில் ரேஷன் வழங்கப்பட உள்ளது. அதே சமயம், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் மொத்த அளவு 35 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற உச்சவரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தற்போதைய முறையில், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு கிடைக்கும் உணவு தானியம் என கணக்கிட்டால் சிறிய குடும்பங்கள் அதிகப்படியான தானியத்தை பெறுகின்றன, அதே நேரத்தில் பெரிய குடும்பங்கள் தலா ஒருவருக்கு என கணக்கிடும்போது குறைவான தானியத்தையே பெறுகின்றன. இந்த முரண்பாட்டை சரிசெய்யவே புதிய முறை கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இது இன்னும் சட்டமாக மாறவில்லை ஒரு வரைவு மசோதாவாக தான் இருக்கிறது. ஒரு வேளை இது சட்டமானால் பல ஏழைக்குடும்பங்கள் பாதிக்கப்படும். 1 முதல் 3 நபர்கள் வரை மட்டுமே உள்ள ஏழை குடும்பங்களுக்கு தற்போது கிடைத்துவரும் 35 கிலோ அரிசி, புதிய முறையின்படி 7 முதல் 21 கிலோவாக குறைந்துவிடும். அதாவது ஒரு நபர் மட்டுமே இருக்கும் AAY கார்டு எனில் இனி 35 கிலோ ரேஷன் அரிசிக்கு பதில் 7 கிலோ மட்டுமே கிடைக்கும். இதுவே 2 பேர் என்றால் 14 கிலோ, 3 பேர் என்றால் 21 கிலோ மட்டுமே கிடைக்கும்.

Advertisement

ஆனால் இந்த கணக்கே முரணாக இருக்கிறது என பலரும் கூறுகின்றனர். ஒரு நபருக்கு 7 கிலோ வீதம் கணக்கிடப்படும் ஆனால் பெரிய குடும்பமாக இருந்தாலும் அதிக பட்சம் 35 கிலோவுக்கு மேல் இலவச உணவு தானியம் கிடைக்காது என்பது முரண்பாடாக இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் அதில் 7 பேர் இருந்தால் அவர்களுக்கும் 35 கிலோ வரை மட்டுமே அரிசி கிடைக்கும் என்றால் ஒரு நபருக்கு தலா 5 கிலோ தானே கிடைக்கிறது. இதனால் இந்த வரைவு மசோதாவை சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்க்கின்றனர். இது, தலா நபருக்கு உணவு தானியம் என்ற அரசின் ஃபார்முலாவே அடிபட்டு போகிறது என்கின்றனர்.

Advertisement

இந்த வரைவு மசோதா குறித்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்கும் நடைமுறை முடிந்துவிட்டது. இனி இதனை மேம்படுத்தி அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னரே இது அமலுக்கு வரும். அதுவரை தற்போது கிடைக்கும் 35 கிலோ இலவச அரிசி, கோதுமை தவறாமல் கிடைக்கும்.