பெப்சிகோ (PepsiCo) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இந்திரா நூயி. இந்தியாவை சேர்ந்தவரான இந்திரா நூயி பல்வேறு தொழில்முனைவோர் குறிப்பாக பெண்களுக்கு எல்லாம் ஒரு முன் உதாரணமாக இருப்பவர். பெண்கள் முன்னேற்றம், தொழில் புரிவது, தைரியம், தலைமை பண்பு ஆகியவற்றுக்கு எல்லாம் இந்திரா நூயியை தான் உதாரணமாக எடுத்து கொள்கின்றனர். அந்த இந்திரா நூயி பேட்டிகள் உலகம் முழுவதும் கவனம் பெறும்.

Advertisement

அண்மையில் இந்திரா நூயி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேலை சூழல் மற்றும் வாய்ப்புகள் குறித்து அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஹூவர் இன்ஸ்டிடியூஷனுடன நடத்திய கலந்துரையாடலில், இந்திரா நூயி தனது வாழ்க்கை பயணத்தை பற்றி பேசினார். அப்போது அமெரிக்காவில் ஒருவரின் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தான் பதவி வழங்கப்படுகிறது, அதனால் தான் நான் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர முடிந்தது என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒரு வேளை நான் இந்தியாவிலேயே இருந்திருந்தால், பெப்சிகோ போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது என இந்திரா நூயி அதில் கூறியுள்ளார். அமெரிக்காவின் வேலை சூழல், திறமைக்கு முன்னுரிமை அளிப்பதால்தான் ஒரு வெளிநாட்டவர் வெறும் கையில் வந்து, ஒரு மாபெரும் நிறுவனத்தின் தலைவராக முடிகிறது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் சீனா அதிக ஒழுக்கத்துடனும், சீரான கட்டமைப்பைக் கொண்ட நாடாகவும் இருப்பதாக கூறிய அவர் சுற்றுலாப் பயணிகள் தூய்மையையும் ஒழுக்கமான சூழலையும் விரும்புபவர்கள் என்றால், அவர்களுக்கு சீனாவில் பயணம் செய்வது எளிது என தெரிவித்தார். மாறாக, இந்தியாவை பொறுத்தவரை, சாலைகளில் நெரிசல் மற்றும் கூட்டம் ஆகியவை நாட்டின் அடையாளமாகிவிட்டது என்றார். இந்தியர்கள் இந்த சூழலோடு பழகிவிட்டதால், அவர்களுக்கு இது பெரிய சவாலாக தெரிவதில்லை என அவர் கூறியுள்ளார்.

Advertisement

சீனா தனது மக்களை வறுமையிலிருந்து மீட்டு, குறுகிய காலத்தில் பெரிய பொருளாதார நாடாக மாறியதற்கு அந்த நாட்டின் நிர்வாக முறைதான் காரணம் என குறிப்பிட்ட அவர் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் அதன் வளர்ச்சி சற்று மெதுவாக இருக்கிறது இருந்தாலும், அந்த ஜனநாயகத்தை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்தார்.

இந்திரா நூயி திறமைக்கு மதிப்பளிக்கும் அமெரிக்க முறையை பாராட்டுவதை நெட்டிசன்கள் பலர் வரவேற்றுள்ளனர். அதே வேளையில் அவர் இவ்வளவு பெரிய நிலையை அடைந்ததற்கு இந்தியக் கல்வி முறை மற்றும் கலாச்சாரம் காரணமில்லையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்தியாவைப் பற்றிய அவரது கருத்து மிகவும் பொதுப்படையானதாக இருப்பதாகச் சிலர் விமர்சித்துள்ளனர்.சிலர் இதுவரை ஒரு பெண் அதிபர் கூட இல்லாத நாட்டை பற்றி இந்திரா நூயி பெருமையாக பேசுகிறாரே என கண்டனம் தெரிவித்துள்ளனர்.