சென்னையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு இடம் பள்ளிக்கரணை. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பள்ளிக்கரணை வேறு அப்போது ஆங்காங்கே சில வீடுகளும் சதுப்பு நிலங்களும் ,பறவைகளுமாக காட்சி தந்தது. ஆனால் இப்போது ஐடி நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை பள்ளிக்கரணையின் அடையாளமாக மாறி வருகின்றன.
சென்னை நகர விரிவாக்கம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப பள்ளிக்கரணையும் மாற்றமடைந்துள்ளது. ஆனால் இது அங்கே இருக்கும் சதுப்பு நிலத்திற்கு உகந்தது அல்ல, சதுப்பு நிலத்தை அழித்தால் பின்னாளில் பெரும் வெள்ள பெருக்கை இந்த பகுதி சந்திக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி 2007-ம் ஆண்டு முதல் வனச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அப்போது 698 ஹெக்டேர் பரப்பளவு தான் பாதுகாக்கப்பட்ட பகுதி. அந்த வகையில் அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் வீடு, அலுவலகங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பிளாட் போட்டு விற்பனை செய்தன. இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் இது 'ராம்சர்' தளமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, கூடுதலாக 550 ஹெக்டேர் நிலங்கள் இதனுடன் இணைக்கப்பட்டன.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்கும் உலகம் முழுவதும் குறிப்பிட்ட பகுதிகள் ராம்சர் தளங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த தளத்தில் சுற்றுசூழலை தக்க வைக்க எந்த ஒரு கட்டுமானத்திற்கும் அனுமதி வழங்க கூடாது. இது உலக அளவில் பல நாடுகளால் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம். அந்த வகையில் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராம்சர் தளமாக அறிவித்தனர்.
இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ராம்சர் தளத்தை சுற்றி 1 கி.மீ சுற்றளவு பகுதியை Zone of Influence என அறிவித்துள்ளது. எனவே இங்கே புதிய கட்டுமான அனுமதி மற்றும் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் பெரிய சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. இந்த பகுதியில் ஏற்கனவே இடம் வாங்கி பட்டா வைத்திருக்கும் சுமார் 1 லட்சம் பேர், தங்கள் நிலங்களில் வீடுகள் கட்டவோ அல்லது மறுவடிவமைப்பு செய்யவோ முடியாமல் தவிக்கின்றனர்.
கட்டுமான அனுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வங்கிகள் வீட்டுக்கடன் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான கடன்களை வழங்குவதை நிறுத்திவிட்டன. இதனால் பாதியில் நின்ற கட்டுமானங்களைக் கூட நிறைவு செய்ய முடியாமல் மக்களும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த 1 கி.மீ சுற்றளவுக்குள் மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவையும் இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. ராம்சர் தளத்தை சுற்றி 1 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதியில் எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டதால் ரியல் எஸ்டேட் மற்றும் அது சார்ந்த துறைகளில் சுமார் 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் மதிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்த பகுதியில் 9 மாதங்களாக ரியல் எஸ்டேட் பணிகள் முடங்கியுள்ளதாக கூறும் கிரெடாய் தலைவர் மெகுல் டோஷி, இந்த தடையால் 51,735 கோடி ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் இழப்பு, அரசுக்கு பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் 10,996 கோடி ரூபாய் வருவாய் இழப்பு, மறைமுகமாக மற்ற தொழில்களுக்கு 8,795 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என மொத்தம் 72,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கிறார்.
தன்னிச்சையாக 1 கி.மீ சுற்றளவை தீர்மானிக்காமல், ஹைட்ராலஜி, வடிகால் அமைப்பு மற்றும் நிலப்பரப்பு ஆய்வு ஆகியவற்றை மேற்கொண்டு, அறிவியல் பூர்வமாக எல்லைகளை தீர்மானிக்க வேண்டும் என கிரெடாய் அமைப்பு கேட்டு கொண்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
எல்லைகள் அறிவியல் பூர்வமாக வரையறுக்கப்படும் வரை, ஏற்கனவே உள்ள திட்டங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் மற்றும் கட்டுமான அனுமதி வழங்குவதை நிறுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநில ஈரநில ஆணையம் (State Wetland Authority) தரப்பில் கூறுகையில், இந்த எல்லைகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், நில அளவீடு, சரிபார்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் போன்ற பணிகள் முடிந்த பின்னரே இறுதி எல்லைகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கிரெடாய் தொடர்ந்த வழக்கு 10ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் சிஎம்டிஏ விதித்த தடை நீக்கப்படுமா, 1லட்சம் நில உரிமையாளர்களின் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பது தெரிய வரும்.
More Articles
- இடம் உங்களோடது தான் ஆனா வீடு கட்ட முடியாது.. விழிபிதுங்கி நிற்கும் பள்ளிக்கரணை மக்கள்..!!
- போரூர் + செங்கல்பட்டு.. லட்டு மாதிரி வந்த ரூ.1000 கோடி.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய விஷயம்!
- சென்னையின் அடுத்த பிரம்மாண்டம் ஒரகடத்தில்.. 14000 பேர் ஒரே இடத்தில்.. பாக்ஸ்கானின் புது தொழிற்சாலை!
- திருச்சி எக்ஸ்பிரஸ்வே இருக்கட்டும்.. விஜய் சார்.. கோயம்புத்தூர்-க்கு எப்போ? ஒரு நாளுக்கு 46000 பேர்!
- விஜய் உடன் நடந்த மீட்டிங்.. 12 மாவட்டங்கள் ஹேப்பி! சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய பிரச்சனை
- விஜயின் உண்மையான 'வாத்தி ரெய்டு'.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி?