தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 2 மாதங்கள் முடிய போகின்றன. விஜய் தலைமையிலான அரசு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை பின்பற்றி ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து ஆலோசனை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டவர். அவர் தலைமையில் கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்செம்மொழி மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
கோவை தமிழ் செம்மொழி மாநாடு கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ஒரு நிகழ்வு என கூறலாம். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றிணையும் ஒரு நிகழ்வாகவும் தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கே உணர்த்தும் ஒரு நிகழ்வாகவும் இது அமைந்தது. அதன் பின்னர் ஒரு பிரம்மாண்ட தமிழ் மொழி மாநாடு விரைவில் நடக்க உள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் முதலமைச்சர் விஜயின் ஒப்புதலுடன் தொடங்கிவிட்டன என இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிடும் செய்தி குறிப்பிடுகிறது. இந்த மாநாட்டை ஒரே இடத்தில் மட்டும் நடத்தாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தொடர் அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகத் தமிழர்களை இணைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து அரசு தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், உலகளாவிய தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை பெறக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மாநாட்டில் உலகளாவிய தமிழ் சமூகத்தினரின் பரவலான பங்களிப்பை உறுதி செய்ய அரசு முடிவு செய்திருக்கிறதாம். இந்த மாநாட்டில் தமிழ் மொழி குறித்த கருத்தரங்குகள், புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கலாச்சார பரிமாற்றம், அறிவுப் பகிர்வுக்கான அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.
1966ஆம் ஆண்டு கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. 1968ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணா தலைமையில் சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டு உலக கவனம் பெற்றது. அதே போல 1981ஆம் ஆண்டு மதுரையிலும், 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும் மாநில அரசு சார்பாக தமிழ் மொழி மாநாடு நடந்தது. தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டதை அடுத்து 2010ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி பிரம்மாண்டமாக உலகத் தமிழ்செம்மொழி மாநாட்டை நடத்தினார்.
More Articles
- தமிழ்நாட்டிலேயே திருச்சி தான் நம்பர் 1: சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியிலும் சாதித்த திருச்சி..!!
- முதலமைச்சர் அலுவலகத்தை இடம் மாற்றும் விஜய்..!! இனி முதலமைச்சரை பார்க்க இங்க தான் போகனும்..!!
- பெண்களுக்கு சம்பளத்துடன் லீவ்..? விஜய் அரசுக்கு மதுரை நீதிமன்றம் கொடுத்த ஆலோசனை!
- ரூ.2500 மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவாரா விஜய்? – ஆகஸ்ட் 5இல் பட்ஜெட் தாக்கல்..!!
- பரந்தூர் விமான நிலையம்: விஜய் அரசின் நிலைப்பாடு தான் என்ன? மத்திய அரசு வேற இப்படி சொல்லுதே?
- விஜய்-இன் ஜனநாயகன் ரிலீஸில் இருக்கும் ரூ.200 கோடி சிக்கல்..!! இது புது கணக்கா இருக்கே?