தமிழ்நாட்டில் தற்போது டவுன் பஸ் மற்றும் மாநகரங்களில் வெள்ளை போர்டு கொண்ட சாதாரண பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்கின்றனர். கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பேருந்து பயணம் திட்டம் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது.
சட்டமன்ற தேர்தலின் போது விஜய் தலைமையிலான தவெக, தங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டு பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு முன்னெடுத்துள்ளது.
தற்போது சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் மட்டும் நடைமுறையில் உள்ள இந்த இலவச பயண வசதியை, எக்ஸ்பிரஸ் , டீலக்ஸ் மற்றும் நெடுந்தூர பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த விஜய் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், தினமும் கூடுதலாக சுமார் 28 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலவச பேருந்து பயண திட்டத்தின் ஒட்டுமொத்த பயனாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1.59 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தான், கர்நாடக அரசு இதே போன்ற சக்தி என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனை உதாரணமாக கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
கர்நாடகாவில் ஏசி, சொகுசு மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. மொத்தம் 26,000 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதே போன்ற ஒரு முறையை தமிழ்நாட்டிலும் கொண்டு வருவது குறித்து விஜய் அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 7,300 பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்க முடிகிறது. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யும் போது மொத்தம் 15,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும்.
அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள் வாரியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது என கூறுகின்றனர் அதிகாரிகள். இந்தத் திட்டத்தின் முழுமையான செயல்பாடு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் தொடக்கத்தில் 2021ஆம் ஆண்டு மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் நாள்தோறும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் வேலைவாய்ப்பில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில் விரைவில் ஏசி, ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், பிரீமியம் பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 1000 ரூபாய்க்கு மேல் பெண்களால் மிச்சப்படுத்த முடியும். தமிழக அரசு தற்போது ஆண்டுதோறும் 5,380 கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்குகிறது, இதில் 3,600 கோடி ரூபாய் இலவச பேருந்து பயண திட்டத்திற்காகவே செல்கிறது. அரசு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போது கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
More Articles
- தமிழ்நாட்டிலேயே திருச்சி தான் நம்பர் 1: சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியிலும் சாதித்த திருச்சி..!!
- முதலமைச்சர் அலுவலகத்தை இடம் மாற்றும் விஜய்..!! இனி முதலமைச்சரை பார்க்க இங்க தான் போகனும்..!!
- பெண்களுக்கு சம்பளத்துடன் லீவ்..? விஜய் அரசுக்கு மதுரை நீதிமன்றம் கொடுத்த ஆலோசனை!
- ரூ.2500 மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவாரா விஜய்? – ஆகஸ்ட் 5இல் பட்ஜெட் தாக்கல்..!!
- பரந்தூர் விமான நிலையம்: விஜய் அரசின் நிலைப்பாடு தான் என்ன? மத்திய அரசு வேற இப்படி சொல்லுதே?
- விஜய்-இன் ஜனநாயகன் ரிலீஸில் இருக்கும் ரூ.200 கோடி சிக்கல்..!! இது புது கணக்கா இருக்கே?