அமெரிக்காவில் ஒரு ஆண்டில் வழங்கப்படும் மொத்த க்ரீன் கார்ட் எண்ணிக்கையில் 7% மட்டுமே ஒரு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அந்த சட்டத்தை இப்போது அமெரிக்காவில் இருக்கும் Accenture, Microsoft, Oracle போன்ற பெரிய பெரிய ஐடி நிறுவனங்களே லாபி செய்து ரத்த செய்யச் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு சார்பாக (Indian IT employees). இது தான் செய்தி. இதற்குக் காரணம் என்ன, ஏன் இத்தனை பெரிய விஷயத்தை ஐடி நிறுவனங்கள் செய்கிறது..? அதுவும் அமெரிக்க அதிபரையே எதிர்த்துச் செய்கிறது..?
Immigration and Nationality Act (INA) என்கிற சட்டம் தான் வெளிநாட்டு மக்களுக்கு க்ரீன் கார்ட் (Green card) வழங்குவது தொடர்பான சரத்துக்களைச் சொல்கிறது. க்ரீன் கார்ட் (Green card)-ஐ சட்ட ரீதியான சொல்லாக எழுத வேண்டும் என்றால் Legal Permanent Residency (LPR) எனலாம். இந்த Legal Permanent Residency (LPR) வாங்குவது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. இதை வாங்கி விட்டால் கிட்டதட்ட அவர் ஒரு அமெரிக்க குடிமகனாகி விடுவார்.
ஒருவர் எப்போது இந்த Legal Permanent Residency (LPR) அமெரிக்காவில் வாங்கி விடுகிறாரோ அப்போதில் இருந்து அவருக்கு சர்வதேச அளவில் அமெரிக்க குடிமகனுக்கு இணையான அங்கீகாரம் கிடைத்துவிடும். (இப்போது வரை அவர் அமெரிக்க குடிமகன் கிடையாது என்பது அடிக் கோடிட்டுக் கொள்ளவும்). அந்த நபருக்கு சர்வதேச அளவில் ஒரு உதவியா, பிரச்னையா, தன்னுடைய சொத்து பத்து சந்பந்தப்பட்ட பிரச்னைகளா..? இனி எல்லாவற்றுக்கும் அமெரிக்கா முன் வந்து நிற்கும். என்னயா என் நாட்டு மக்களுக்கு குடச்சல் கொடுக்கிற என தன் பெரியண்ணன் தனத்தால் மிரட்டும்.
இந்த Legal Permanent Residency (LPR) வாங்கி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, ஒழுக்கமான பின் புலத்தோடு இருந்தாலே போதும், எளிதில் விண்ணப்பித்து அமெரிக்க குடிமகன் ஆகிவிடலாம். ஆனால் இந்த Legal Permanent Residency (LPR) இல்லாமால் ஒரு வெளிநாட்டவரால் அமெரிக்க குடிமகன் ஆவது கடினம்.
உலகின் வழிநடத்தியாகவே (அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும்) திகழும் அமெரிக்காவில் இது போல் இன்னும் பல சலுகைகள் உண்டு. அதற்கு மற்றும் ஒரு உதாரணம் வேலை வாய்ப்பு. ஒரு அமெரிக்க குடிமகனுக்கு இந்த வாரம் வேலை இல்லை என்றால் அரசே அவனுக்கான வேலையை தேடித் தரும். இப்படி மூன்று முதல் ஐந்து வேலை வாய்ப்புகளை தேடித் தந்து தன் குடிமகனை பொருளாதார ரீதியாக பாதுகாக்கும். அந்த வேலை தேடும் காலத்தில் தன் குடிமகனுக்கான உணவு செலவு முழுக்க அரசுடையது. சரி விஷயத்துக்கு வருவோம்.
2017-ம் ஆண்டு, அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற 11 லட்சம் பேருக்கு அனுமதி அளித்தது அமெரிக்க குடியுரிமை ஆணையம். அப்போது 1.4 லட்சம் பேருக்கு பணி அடிப்படையில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கியது. அந்த 1.4 லட்சம் பேரில் ஏழு சதவிகிதம் (9,800 பேருக்கு) அமெரிக்க நிரந்தர குடிமகனாக வாழ அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவில் பணி சார்ந்து நிரந்தரமாக குடியேற விரும்பி விண்ணப்பித்து விட்டு காத்திருப்பில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அன்று (2017-ல்) எவ்வளவு தெரியுமா..? சுமார் 2.26 லட்சம் பேர். ஏப்ரல் 2018 நிலவரப் படி பணி சார்ந்த அமெரிக்க குடியுரிமைக்காக 3,95,025 பேர் காத்திருக்கிறார்கள். அதில் 3,06,601 பேர் இந்தியர்கள் என அமெரிக்க குடியுரிமை ஆணையத்தின் அறிக்கைகள் சொல்கின்றன.
1990-களில் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் (9/11 தாக்குதல் போது அதிபராக இருந்தவரின் அப்பா) திட்டமிட்டு கொண்டு வந்த சட்டம் இது. இந்த சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களோ, பிராந்தியப் பகுதியைச் சேர்ந்தவர்களோ அதிகமாக குடியேறி எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடக் கூடாது என முன் கூட்டியே யோசித்து இயற்றப்பட்ட சட்டம். இந்த சட்டப்படி ஒரு ஆண்டில் அமெரிக்காவில் நிரந்தர குடிமகன்களுக்கு அனுமதி அளிக்கும் போது ஒரு நாட்டுக்கு மொத்த அனுமதியில் வெறும் 7% அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும். சுருக்கமாக, 14 நாடுகளைச் சேர்ந்த 100 பேருக்கு அனுமதி வழங்க இருக்கிறார்கள் என்றால், ஒரு நாட்டைச் சார்ந்த 7 பேருக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
அமெரிக்காவில் இருக்கும் பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னை குறித்து பேசி இருக்கிறார்களாம். இந்தியர்கள் மற்றும் சீனர்களைப் போல டெக்னாலஜி உலகில் குறைந்த ஊதியத்துக்கு நிறைவாக உழைப்பவர்கள் கிடையாது. அதே வேலையை அமெரிக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1.5 மடங்கு கூடுதல் செலவாகும். கூடுதல் செலவு நிறுவனத்தின் லாபத்தைக் குறைக்கும். ஆக இந்தியர்கள் மற்றும் சீனர்களை வேலைக்கு எடுப்பது தான் ஒரே வழி என முடிவு செய்துவிட்டார்கள்.
H1-B விசா எடுத்து அமெரிக்கா வந்தவர்கள் மூன்று வருடத்துக்கு அமெரிக்காவில் வேலை பாக்கலாம். அதற்குப் பின் அமெரிக்க குடியுரிமை அலுவலகமான US Citizenship and Immigration Services (USCIS),-யிடம் விசா கால நீடிப்பு கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விசா கால நீட்டிப்பு கேட்டு வருகிறவர்களுக்கு நேரடியாக 3 வருடம் தான் கால நீட்டிப்பு கொடுப்பார்கள். இல்லை என்றால் "ஸாரி பாஸ் உங்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது" என அமெரிக்க குடியுரிமை அலுவலகம் மறுத்துவிடும்.
இப்படி அதிகபட்சம் ஒரு நபர் H1-B விசா மூலம் (இரண்டு முறை) 6 வருஷம் மட்டும் தான் அமெரிக்காவில் இருக்க / வேலை பார்க்க முடியும். ஆக ஒரு முறை H1-B விசா வாங்கிவிட்டு மூன்று வருடம் முடிந்தால் திரும்ப ஒரு முறை விசா கால நீட்டிப்பு விண்ணப்பித்து அடுத்த 3 வருடம் வேலை பார்த்து விட்டு அவரவர் ஊருக்கு சென்று விடுவார்கள். இல்லையா... Legal Permanent Residency (LPR)-க்கு விண்ணப்பிப்பார்கள்.
சட்டப்படி இந்தியர்களும் ஒழுங்காக விசா காலம் முடிவதற்குள், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளிடம் விசா கால நீட்டிப்புக்கு போய் நின்றார்கள். விசா கால நீட்டிப்பும் ஒழுங்காக 3 வருடத்துக்கு வழங்கப்பட்டது. நம் ட்ரம்பு வந்தார். இந்தியர்கள் அதிகம் விண்ணப்பித்த ப்ரீமியம் அப்ளிகேஷன் சேவையை மூடினார். (ப்ரீமியம் அப்ளிகேஷன்-னா நம்ம ஊர் தட்கல் மாதிரி. கொஞ்சம் பைசா செலவாகும். வேலை வேகமா முடியும்.) "கண்ணுகளா இனி ப்ரீமியம் அப்ளிகேஷன் கிடையாது. எல்லாரும் நாட் கணக்கில் வரிசையில் நின்று தான் வேலை முடித்துக் கொள்ள வேண்டும்"என ட்ரம்பு அரசாங்கம் மிரட்டியது. இந்தியர்களும் வரிசையில் நின்ற படியே அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டும், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டும், விசா நீட்டிப்பு கேட்டனர்.
அதோடு கடந்த (ஜூன் - செப்டம்பர்) 2018-ல் நம் இந்தியர்கள் 100 பேர் H1-B விசா கால நீட்டிப்பு கேட்டால், அதில் 29 பேருக்கு தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பாக்கி உள்ள 71 பேருக்கும் போதிய ஆதாரம் இல்லை, H1-B விசா நீட்டிப்பை வாங்க தேவையான ஆதாரத்தோடு வரச் சொல்லி துரத்தி அடித்தது அமெரிக்க குடியுரிமை அலுவலகம். இந்தியாவுக்கு மட்டும் 71% ரிஜெக்சன். மத்த நாடுகளுக்கு 61% ரிஜெக்சன். ஆனால் அமெரிக்க ஐடிக்கு தேவையான ஆட்களோ இந்தியர்களும், சீனர்களும் தானே..! விடுவார்களா கார்ப்பரேட்கள்...?
அமெரிக்க கார்ப்பரேட்டுகள் மேலே சொன்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்குள், ட்ரம்பு அடுத்து ஒரு வேலையை பார்த்தார். பிப்ரவரி 2018-ல் அமெரிக்க குடியுரிமை அலுவலக விதிகளில் சில புதிய விதிகளைக் கொண்டு வந்தார். அந்த விதிகள் படி
1. அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் விசா கேட்டு வருபவர்களுக்கு மூன்று வருடம் தான் கால நீட்டிப்பு தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் கூட நீட்டிக்கலாம்.
2. அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள், H1-B விசா கால நீட்டிப்புக்கு வருபவர்களின் முதலாளி- தொழிலாளி உறவை நிரூபிக்க தேவையான தஸ்தாவேஜ்கள், வேலை ஒப்பந்தங்கள், சம்பள ஆதாரங்கள் கேட்கலாம். ஆங்கிலத்தில் Detailed Customer Contracts and Itineraries of Employees-எனச் சொல்கிறார்கள். இந்த மொத்த டாக்குமெண்டுகளும் நிறுவனm & ஊழியர்கள் சமேதமாக சமர்பிக்க வேண்டுமாம். இப்படி பல விதிகளை புதிதாகச் சேர்த்தார்கள்.புதிய இதிகளால் அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு 10 தலை வலி ஒன்றாக வந்து சேர்ந்தது.
ஐடி நிறுவனங்களுக்கு ஜட்டி கிளிந்துவிட்டது. ஒரு ஊழியருக்காக மணிக் கணக்கில் அமெரிக்க குடியுரிமை அலுவலகத்துக்கு அலைந்து நீட்டிப்பு வாங்குவதை எல்லாம் கொடுமையிலும் கொடுமையாகவே பார்த்தது. ஒவ்வொரு H1-B விசா ஊழியருக்கும், அவர்கள் வேலை பார்க்கின்ற கம்பெனிக்கும், Client கம்பெனிக்கும் மெயில் மீது மெயில், போன் மீது போன் போட்டு இந்த பிரச்னைகளை தீர்க்க முத்தரப்புத் தொடர் போல ஒருவர் மாறி ஒருவர் டாக்குமெண்டுகளை வாங்க வேண்டி இருக்கிறதாம். விசா பிரச்னைக்காகவே தனியாக ஒரு மனித வள மேம்பாட்டுக் குழு (HR Team) அமைத்து வேலை பார்க்கும் அளவுக்கு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் டென்ஷன் கொடுப்பதை வெளிப்படையாக புலம்புகிறார்களாம் அமெரிக்க ஐடி நிறுவன ஹெச்ஆர்-கள்.
1. H1-B விசாகாரர்களின் டிகிரி சான்றிதழ் 2. சம்பள கணக்கு ரசீது (Pay slip) 3. Work contract, appointment letter 4. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்குற தொழிலாளி இன்னொரு Client கம்பெனிக்கு வேலை பார்ப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என ஒரு NOC கடிதம்... என சுத்தி சுத்தி அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் டாக்குமெண்டு கேட்டு டார்சர் செய்தார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அமெரிக்க குடியுரிமை அலுவலகம் USCIS கொண்டு வந்தது "சட்ட திருத்தம் கிடையாது" வெறும் விதிகள்.
இதெல்லாம் போக இன்னொரு சனிக் கொடுமை இந்த Work contract-ஐ சமர்பிக்கச் சொல்வது. அதில் சொல்லப்பட்டிருக்கும் வேலை எத்தனை மாதம் இருக்கிறதோ... அத்தனை மாதத்துக்கு மட்டும் கச்சிதமாக விசா கொடுக்கத் தொடங்கினார்கள். உதாரணமாக ஒருவருக்கு 20 மாதம் தான் வேலை என்றால், அவருக்கு 20 மாதம் மட்டும் விசா அனுமதி காலம் கொடுக்கிறார்களாம். முன்பு போல 36 மாதம் எல்லாம் தர மறுக்கிறார்களாம். இது எல்லாம் விதி 2-ன் படி நடந்த பிரச்னைகள். இதுவும் ஐடி நிறுவனங்களுக்கு கடுப்பில் கண்ணீர் வர வைத்தது.
ஒரு இந்திய ஐடி ஊழியர் விசா கால நீட்டிப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட கால நீட்டிப்பு எவ்வளவு தெரியுமா..? 12 நாட்கள்.
இன்னொரு இந்திய ஐடி ஊழியருக்கு 56 நாட்கள். 56 நாட்கள்... பிரச்னை தீர்க்க போதாதா என கேட்குறீர்களா...? ஜூன் 15, 2018 விசா காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அமெரிக்க குடியுரிமை அலுவலகம் வழங்கிய கால நீட்டிப்பான 56 நாட்கள் ஜூன் 15, 2018 முதல் தொடங்குகிறது. ஆனால் அவருக்கு கால நீட்டிப்பு கொடுக்கப்பட்ட தேதி ஆகஸ்டு 29, 2018. அதாவது ஜூன் 15, 2018-ல் இருந்து ஆகஸ்டு 10, 2018 வரை அமெரிக்காவில் அந்த இந்தியர் இருந்தது சட்டப் படி சரி என ஆகஸ்டு 29, 2018-ம் தேதி அனுமதி அளித்திருக்கிறார்கள். இவரோடு அமெரிக்க ஐடி நிறுவன ஹெச்.ஆர்-களும் அலைந்திருக்கிறார்கள் என்பதால் மேலும் மண்டை சூடாகி இருக்கிறது அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு.
சமீபத்தில் தான் H1-B விசா கோட்டா மாற்றப்பட்டது. பழைய கோட்டா முறைப் படி முதலில் H-1B visaவுக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவர்களுக்கு என்று ஒரு தனி கோட்டா இருக்கிறது. இந்த கோட்டாவின் கீழ் முதலில் 20,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பிறகு தான் பொது கோட்டாவின் கீழ் 65,000 பேருக்கு H-1B visa வழங்கப்படும். ஆக முதலில் அமெரிக்காவிலேயே உயர் படிப்பு படித்தவர்களுக்கான 20,000 பேர் கோட்டா நிரப்பப்படும், அதன் பிறகு பொதுக் கோட்டாவில் 65,000 பேருக்கான இடம் நிரப்பப்படும்.
இப்போது அமெரிக்காவில் படித்தவர்களோ, சாதாரண மக்களோ, யாராக இருந்தாலும் முதலில் 65,000 பேருக்கான பொதுக் கோட்டா நிரப்பப்படும். அதன் பிறகு தான் 20,000 பேருக்கான அமெரிக்காவிலேயே உயர் படிப்பு படித்தவர்களுக்கான கோட்டா நிரப்பப்படும். இதனால் அமெரிக்காவிலேயே படித்தவர்களுக்கு அந்த 65,000 பேருக்கான பொது கோட்டாவும் பயன்படுவதால் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக H1-B விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
மேலே சொன்ன பிரச்னைகளை ஊழியர்கள் மட்டுமின்றி நிறுவனமும் சேர்ந்து எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இந்த அலைச்சல் காலங்களில் ஊழியர்களிடம் இருந்து சரியாக வேலை வாங்க முடியாததால், ப்ராஜெக்டுகள் தாமதமாவது, ப்ராஜெக்டுகள் தாமதத்தால் நிறுவன வருவாய் குறைவு, லாப குறைவு என அமெரிக்க ஐடி கார்ப்பரேட்டுகள் பெரிய பிரச்னை பட்டியலையே வாசித்துவிட்டார்கள். கடைசியாக “எனக்கு நல்ல திறமையான ஊழியர்கள் வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் அமெரிக்க ஐடி நிறுவனங்கள்.
அமெரிக்கா ஒரு ஆண்டில் வழங்கும் மொத்த Legal Permanent Residency (LPR)-ல் ஒரு நாட்டுக்கு 7% மட்டும் எனும் சட்டத்தை ஒழித்தால் காத்திருப்பில் இருக்கும் 3.06 லட்சம் இந்தியர்களில் எத்தனையோ திறமையான ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்குவார்கள். மீண்டும் இந்தியாவில் இருந்து ஐடி திறமைசாலிகளை அமெரிக்கா கொண்டு வர மாதக் கணக்கில் குடியுரிமை அதிகாரிகளோடு மல்லுகட்டத் தேவை இல்லை. ஒரு முறை Legal Permanent Residency (LPR) வாங்கிவிட்டால் அந்த வெளிநாட்டுக்காரர், எத்தனை ஐடி நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். இதனால் அமெரிக்க ஐடி பொருளாதாரம் நல்ல வளர்ச்சி காணும் என அழுத்தமாக கணித்திருக்கிறார்கள் அமெரிக்க ஐடி நிறுவனத்தினர்கள். அதற்கு அழுத்தம் கொடுத்து தான் இப்போது நாடு கோட்டாவையே நீர்த்துப் போகவும் செய்திருக்கிறார்கள்.
ஆக... ட்ரம்ப் இந்தியர்களை அடி மனதில் இருந்து வெறுத்தாலும் சரி, எதிர்த்து நின்ரு எச்சில் துப்பினாலும் சரி... ஒரிஜினல் அமெரிக்க முகமான பிசினஸும், லாப வெறியும் இப்போது இந்தியர்களுக்கு அமெரிக்க நீலச் சிவப்புக் கம்பளத்தை அதிபர் எதிர்ப்புடனேயே கார்ப்பரேட்டுகள் விரித்திருக்கிறது. ஆம் அமெரிக்காவுக்கு கொள்கைகளை விட கோடிகளும், இன வெறியைவிட இன்பம் தரும் பொருட்களும் தான் முக்கியம். அந்த கோட்பாட்டை மீறி அமெரிக்காவை எதிர்ப்பது அதன் அதிபராகவே இருந்தாலும் சரி, ஓரம் கட்டப்படுவார். அதற்கு ட்ரம்பு ஒரு உதாரணம்.