அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்படும் நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் 171 பொருட்கள் மீதான தேவை அதிகமாகியுள்ளது என்றும் இதனால் இந்த ஆண்டு 63,966 கோடி ரூபாய் வரை கூடுதலாக வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 சதவீதம் வரை வரியினை உயர்த்தியுள்ளனர். இது இந்தியாவிற்குச் சாதமாக முடிந்துள்ளது.
முதல் முறையாகச் சீன 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா வரியை உயர்த்திய போது இந்தியாவின் ஏற்றுமதி 2.1 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.
அதே போன்று இரண்டாம் முறை வரியை உயர்த்திய போது 5 பில்லியன் டாலர் வரை இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்தது. இந்திய பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் 48 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
என்ன தான் இந்திய பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்று கூறினாலும் நம்மை விடக் குறைந்த விலைக்குப் பல சீன பொருட்கள் அங்குக் கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.
சீனா மீது அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தகப் போரினால் 7,000 பொருட்கள் மீதான வரி உயர்வினை சீனா எதிர்கொண்டு வருகிறது.
வர்த்தகப் போரினால் எஃகு, இரும்பு பொருட்கள், ஆடைகள், சர்க்கரை மூட்டுகள், எண்ணெய், கரிம சேர்மங்கள், சில பிளாஸ்டிக், தோல், ரப்பர், சாம்பல், இறால்கள், நூல், துணிகள் போன்ற பல பொருட்களின் இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ரூபாய் மதிப்புச் சரிவு, காச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஏற்றுமதி உயர்வு என்பது நல்ல மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.