1.4 பில்லியன் டாலரில் சீனாவை தோற்கடித்த இந்தியா..! காப்பாற்றப்பட்ட Maldives...!

1.4 பில்லியன் டாலரை மாலத் தீவுகளுக்கு (Maldives) மத்திய அரசு கொடுத்ததாக ஒரு செய்தியை படித்திருப்பீர்கள்...? இந்தியாவின் எத்தனை பேரிடர்கள் நடந்திருக்கின்றன. கேரள வெள்ளம், தமிழகத்தில் கஜா புயலின் கோர தாண்டவம் என எத்தனையோ சம்பவங்களுக்கு செலவழிக்காமல் ஏன் மத்திய அரசு மாலத் தீவை குறி வைக்கிறது தெரியுமா...? சீனாவைக் கட்டுப் படுத்த. இந்தியாவை பாதுகாத்துக் கொள்ள. நம்பமுடியவில்லையா...? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

Advertisement

மாலத் தீவுகள்

1790 வரை சிற்றரச சுல்தான்களால் ஆளபட்டு வந்த 1200 சிறிய பெரிய தீவுகள், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மதராஸ் மாகாணத்தோடு இணைக்கப்படுகிறது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் இங்கிலாந்தின் பிடியிலேயே இருந்தது, 1965 -ல் தான் ஒரு சுதந்திர நாடாக உருவாகிறது. வெறும் 298 சதுர கிலோமீட்டரில் 4.4 லட்சம் பேர் வாழும் சிறிய நாடு. சென்னையை விட பரப்பளவில் சிறியது.

Advertisement
பொருளாதாரம்

மாலத் தீவுகளில் கடலைச் சார்ந்த மீன் பிடித் தொழில்கள் தான் பொருளாதாரத்தின் அச்சானியாக இருந்தது. 1972 வரை. 1972-ல் ஒரு உல்லாச ரிசார்ட் கட்டி புதிய சுற்றுலா பொருளாதாரத்துக்கு வழிவகுத்தார்கள். இன்று மொத்த மாலத் தீவின் பொருளாதாரத்தின் 28% சுற்றுலாத் துறையை நம்பி இருக்கிறது. அதன் பிறகு தான் மீன் பிடித் தொழில்கள் எல்லாம்.

Geopolitical

இந்த சொல்லை அடிக்கடி டிவி விவாதங்களிலோ அல்லது ஆங்கில பத்திரிகைகளிலோ கேள்விப்பட்டிருப்பீர்கள். புவியியல் அமைப்பு சார்ந்து நடக்கு அரசியலுக்கு இந்த பதத்தை பயனப்டுத்துவார்கள். அதற்கு மாலத் தீவுகளே சிறந்த உதாரணம். இந்தியாவின் தெற்குப் பகுதியின் லட்சத் தீவுகளுக்குக் கீழ் தனியாக இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு குட்டி தேசம்.

எல்லாம் நாம தான்

இப்போது மாலத் தீவுக்கு மிக அருகில் இருக்கும் பெரிய நாடே இந்தியா தான். அதை விட்டால் இலங்கை. ஆக என்ன பிரச்னை என்றாலும் மாலத் தீவுகளுக்கு முதலில் உதவ வேண்டியது இந்தியா தான். அதற்கு வலுவான காரணமும் மாலத் தீவின் நில அமைப்பு தான். சரி இந்திய மாலத் தீவு உறவுக்கு வருவோம்.

விடுதலைப் புலிகள் உட்பூசல்

இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாகி வலு பெற்று வந்த காலத்தில் அன்றைய விடுதலைப் புலிகளின் பெருந்தலைகளான உமா மகேஷ்வரன் மற்றும் பிரபாகரனுக்கு இடையில் கருத்து வேறுபாடு வலுத்தது. அதனைத் தொடர்ந்து உமா மகேஷ்வரன் LTTE - Liberation Tigers of Tamil Eelam அமைப்பில் இருந்து பிரிந்து பொய் தனியாக PLOTE - People Liberation Organisation of Tamil Eelam என்கிற அமைப்பை தொடங்கினார்.

PLOTE தாக்குதல்

1988 வாக்கில் PLOTE அமைப்பின் 80 ஆயுதம் தாங்கிய போராளிகள் திடீரென மாலத் தீவுகளின் தலைநகரான மாலேவில் உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றினார்கள். காரனம் அமைப்பை வலுப்படுத்தவும், ஒரு நிலையான ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டு இயங்கவும் இந்த தாக்குதலை நடத்தினார்கள்.

அபயக் குரல்

அன்றைய மாலத் தீவின் அதிபர் மமூன் அப்துல் கயோம் தில்லிக்கு ஓடிப் போய் உதவி கேட்டார். அன்று இந்தியாவின் பிரதமர் ராஜிவ் காந்தி. நம் இளம் பிரதமரும் உடனடியாக Operation Cactus என்கிற பெயரில் 1600 ராணுவத்தினரை அனுப்பி 80 PLOTE அமைப்பினரையும் விரட்டி அடித்தார்கள். 19 போராளிகள் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 12 மணி நேரத்தில் மாலத் தீவை மீட்டு எடுத்து மமூனிடமே கொடுத்தார் ராஜிவ் காந்தி.

சர்வதேச அங்கீகாரம்

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளே இந்தியாவின் தில்லைப் பார்த்துப் பாராட்டினார்கள். நேபாளம், வங்காள தேசமும் கூட இந்தியாவை பக்கம் பக்கமாக பாராட்டித் தள்ளியது. மாலத் தீவுகளுக்கும் இந்தியாவுக்குமான நெருக்கம் இந்த கட்டத்தில் தான் நல்ல நட்பாகிறது.

வெடிகுண்டு

2005-ம் ஆண்டு Booz Allen Hamilton Inc. என்கிற ஐடி ஆலோசனை நிறுவனம் சீனாவின் பரம ரகசிய திட்டத்தை வெளியிட்டது. அந்த திட்டத்தின் பெயர் ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ் (String of pearls). மொத்த தெற்காசியாவையும் வளைத்துப் போட்டு ஒரு வலுவான கோட்டை கட்ட வேண்டும் என்பது தான் திட்டம். அதில் மாலத் தீவுகள் தான் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விலை மதிப்பில்லாது முத்து. அதற்குத் தான் குறி வைக்கிறது சீனா.

உஷாரான இந்தியா

இந்த செய்தியை கேள்விப்பட்ட உடனேயே இந்திய கடற்படையினர் இந்த String of Pearls திட்டத்தின் சாத்தியங்களை ஆராய்ந்தனர். இறுதியில் மாலத் தீவுகளை கைப்பற்றினால் நிச்சயமாக சீனா இந்தியாவை சுற்றி வளைத்தது போல் ஆகிவிடும் என மத்திய அரசை எச்சரித்தனர். ஆகையால் என்ன செய்தாவது மாலத் தீவை இந்தியா பக்கம் இழுத்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது இந்தியா.

தொடர்ந்த கவனிப்பு

String of pearls செய்தி கேட்ட இந்தியா ஏப்ரல் 2006-ல் இந்தியா Trinkat ரக விரைந்து தாக்கும் கப்பலை மாலத் தீவுகளுக்கு பரிசலிக்கிறது. மாலத் தீவுகளின் முக்கியமான 26 தீவுகளுக்கு ரேடார் கருவிகளைப் பொருத்துவது, இரண்டு ஹெலிகாப்டர்களை எப்போதும் கண்காணிப்புப் பணிகளுக்கு நிறுத்துவது, இந்திய கடலோரக் காவல் படை மாலத் தீவுகளுக்கும் ரோந்து சென்று அவ்வப் போது பாதுகாப்பை உறுதி செய்வது, மாலத் தீவு ராணுவத்தினருக்கு அந்தமான் தீவுகளில் ராணுவப் பயிற்சி அளிப்பது என இந்தியா தன் நிலப் பகுதிகளை பாதுகாப்பது போல மாலத் தீவை பாதுகாத்தது. மாலத் தீவுகள் சீனாவுடன் அதீத நட்பு பாராட்டுவதால் பரிசாக தந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும் திரும்பத் தருமாறு கேட்டது இந்தியா. இப்போது சொலிஹ் பதவி ஏற்ற பின், அட நமக்குள்ள என்னயா, ஹெலிகாப்டர நீயே வெச்சுக்க என கொஞ்சி விளையாடுகிறது இந்தியா.

Ekuverin

இந்தியா எப்போதும் இரண்டு கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் மாலத் தீவுகள் இணைந்து நடத்தும் ராணுவப் பயிற்சியின் பெயர் தான் இந்த Ekuverin. இந்தியா மற்றும் மாலத் தீவு ராணுவத்தினர் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது தான் Ekuverin பயிற்சியின் நோக்கம். இதுவும் சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.

சீனாவின் ராஜ தந்திரம்

இந்தியா, சீனாவின் காலரைப் பிடித்து String of pearls பற்றி கேட்பதற்குள் 2013-ல் "One Belt & One Road Initiative" என ஒரு சொடுக்கு பால் போட்டது. இது என்ன புது கதை என்று வாயைப் பிளப்பதற்குள்... உலகச் சந்தைகளை இணைக்க, வணிகம் செழிக்க, அறிவைப் பகிர்ந்து கொள்ள, கலாச்சார பரிமாற்றங்களை வரவேற்கத் சீனாவின் போக்குவரத்து திட்டம் தான் இந்த "One Belt & One Road Initiative"என மீடியா முழுக்க பேச வைத்தது. சீன அரசு பத்திரிகையான பீபிள் டெய்லியில் பக்கம் பக்கமாக இந்த திட்டத்தின் நன்மைகளை வெவ்வேறு வார்த்தைகளில் எழுதியது. இந்த திட்டத்தின் பெயரைத் தான் 2016-ல் "Belt & Road Initiative"என பெயர் மாற்றப்பட்டது.

அசந்து போன சர்வதேசம்

இது சீனாவின் String of pearls திட்டத்தின் மறைமுக பெயர் என உலகத்துக்கே தெரியும். ஆனால் என்ன தான் மிரட்டினாலும், யார் வந்து மிரட்டினாலும் சீனா இது சர்வதேச நன்மைக்கு என அமெரிக்காவைப் போலவே நாடகமாடியது. ஆனால் மறைமுகமாக தான் யோசித்த வைத்த முத்துக்களை எல்லாம் முதலீடுகள் மூலமாகவோ அல்லது ராணுவ தளம் அமைத்தோ தன் கனவுத் திட்டமான String of pearls-ஐ இந்த மேற்பூச்சுப் பெயரில் செயல்படுத்தியது. முதலில் Djibouti-ல் தன் ராணுவ முகாமை அமைத்து உன்னால் ஆனதைப் பார் என இந்தியாவுக்கு புளிப்பு காட்டியது.

சீன வரவு

String of pearls-க்காக காத்திருந்த சீனா 2011-ல் திடீரென சீனா மாலத்தீவுகள் மீது அன்பு காட்டியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ வு பங்கோ (Wu Bungoo) மாலத் தீவுகளுக்கு எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து அக்டோபர் 2012-ல் லி சங்சுன் (Li changchun) வந்து மாலத் தீவின் அன்றைய அதிபர் முகமது வகீது ஹசன் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாலத் தீவுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்கு எப்போதும் சீனா உதவும் என கை குளுக்கினார். இந்தியா உஷாரானது. அதன் பின் 2014 சீன அதிபர் ஜி ஜின்பிங்கே (Xi jinping) மாலத் தீவு அதிபரைச் சந்தித்தார்.

கடல் வழி ஆதிக்கம்

தெற்காசியாவை நில வழியில் ஐரோப்பிய நாடுகள் வரை சாலைகளை அமைத்தோ, பிசினஸ் முதலீடுகளின் மூலமாகவோ பிடித்தாகிவிட்டது. இனி கடற்கரை மட்டும் தான் பாக்கி . ஆக கடலை எப்படி ஆள்வது... முதலில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும். அந்த இடம் மாலத் தீவுகள். மாலத் தீவுகளைக் கைப் பற்றிவிட்டால் ஹோமுராஸ் ஜலசக்தி, லோம்பாக் ஜல சந்தி, மலாக்கா ஜலசந்தி, மந்தெப் ஜல சந்தி போன்ற முக்கியமான நான்கு இடங்களில் இந்தியாவை முழுமையாக முற்றுகை இடலாம்.

காத்திருப்பு

இதற்குத் தான் சீனா மாலத் தீவுகள் மீது அதீத அன்பு காட்டி வந்தது. வருகிறது. ஆனால் மாலத் தீவுகளின் அரசியல் தலைவர்களில் பலரும் சீனாவுக்கு ஒத்து வரவில்லை. மாலத் தீவுகள் தனி நாடாக உருவான பின் இப்ராகிம் நஸீர் 1978 வரை அதிபராக இருந்தார். அவருக்குப் பின் மமூன் அப்துல் கயோம். கயோம் காலத்தில் தான் இந்தியா Operation Cactus நடத்தி மாலத் தீவுகளைக் காப்பாற்றியது இந்தியா. ஆக அந்த அன்பும், நட்பும், விஸ்வாசமும் 2008 வரை கயோம் காட்டினார். அதன் பின் முகமது நசித். நசித்தும் கயோமைப் போலத் தான்.

கடன்

கடந்த 2013-ல் அப்துல்லா யாமீன் வந்த போது தான் சீனாவுக்கு ஜாக்பாட் அடித்தது. மாலத் தீவுகளை நல்ல நிலைக்கு கொண்டு வர அடிப்படைக் கட்டுமானங்கள் தேவை என சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வசதிகளைக் கொடுத்தது. ஆனால் இன்று மாலத் தீவின் மொத்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 25 சதவிகித வருமானத்தை சீனாவுக்கு வட்டியாக மட்டுமே கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சீன வெறுப்பு

சமீபத்தில் மாலத் தீவுகளின் முன்னால் அதிபர் நசீத் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் "சீனா மாலத் தீவை கடன் மூலம் சூழ்ச்சி வலை விரித்து பிடித்து விட்டது. இன்று அதில் இருந்து மாலத் திவுகள் மீளவும் முடியாமல், தனக்கு தோன்றியதைக் கூட செய்ய முடியாமல் , மாலத் தீவு மக்களுக்கு நல்லவைகளைக் கூட சீனாவிடம் கேட்டு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது" என தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

இந்தியா அதிரடி

கடந்த 17 நவம்பர் 2018-ல் முகமது சொலிஹ் மாலத் தீவுகளின் அதிபராக பதவி ஏற்றார். இவர் கொஞ்சம் இந்தியா பிரதிபலன் பாராமல் செய்த உதவிகளை மனதில் கொண்டவர். இவருடைய பதவி ஏற்பு விழாவுக்குக் கூட இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்தவர். ஆக இந்தியா தனக்கு சாதகமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு தற்போது 1.4 பில்லியன் டாலர் தொகையை கொடுத்திருக்கிறது. இப்போது சீனாவிடம் இருந்து முழுமையாக மாலத் தீவுகள் விடுபடும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்தியாவின் இந்த நன்கொடையால் சீனாவுக்கு மூக்கு உடைந்தது போல் ஆகிவிடும். இனி சீனாவுக்கு மாலத் தீவுகள் தலையசைக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்பதாலேயே இந்தியா மீதான கோபம் சீனாவுக்கு அதிகரிக்கும்.

நேரடிப் போர்

சீனா, மாலத் தீவுக்குக் கொடுத்த 1.3 பில்லியன் டாலர் கடனை வைத்து மறைமுகமாக மிரட்டி தனக்கு தேவையானதை செய்து வந்தது. அந்த கடன் பிரச்னையை இந்தியா ஒரு செக்கில் கையெழுத்து போட்டு தீர்த்துவிட்டது. இது சீனாவை நேரடியாக வம்புக்கு இழுப்பதற்குச் சமம். மாலத் தீவுகள் இல்லை என்றாலும் சீனாவுக்கு இலங்கை ஒரு அழுத்தமான ராணுவத் தளமாக இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம் எனவும் போர் வல்லுநர்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அணு ஆயுதம்

இந்தியா மற்றும் சீனா இன்று உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடு. மிகப் பெரிய பொருளாதாரம், அதை விட மிகப் பெரிய நுகர்வோர் சந்தை கொண்ட நாடு. இவர்களுக்கு இடையில் போர் வந்தால் அணு ஆயுதம் கூட பயன்படுத்துவார்கள், மொத்த உலக வரை படமே மாற்றி அமைக்கப்படலாம், உலக பொருளாதாரமே நலிவடைந்து போகலாம் என சர்வதேச போர் வல்லுநர்கள் பயப்படுகிறார்கள்.

புன் சிரிப்பில் இந்தியா

இந்தியா எப்போதும் தன் அக்கம் பக்கத்து நாடுகளை வாழ வைக்க, நல்லுறவைப் பேன நேரு காலத்தில் இருந்து முயல்கிறது. இது தான் இந்தியாவின் முதல் மற்றும் அடிப்படை வெளி உறவுக் கொள்கை. இதை Neighbourhood First என்கிறார்கள். இந்த முறையில் தான் மாலத் தீவுக்கும் உதவிகள் செய்திருக்கிறோம் என வன்மப் புன் முறுவலுடன் இந்தியா சிரிக்கிறது. ஆக 1988-ல் உதவியதுக்கு 2008 வரை நன்றி கட்டிய மாலத் தீவு அதிபர்கள், இந்த 1.4 பில்லியன் டாலருக்கும் அந்த நன்றியைக் காட்டும் என இந்தியா எதிர் பார்க்கிறது. ஆனால் சொலிஹ் "சீனாவுடனா உறவும் தொடரும்" என தெளிவாகச் சொல்லிவிட்டார்.

எது எப்படியோ... சீனாவை எதிர்க்கவோ அல்லது சீனாவின் ராணுவ வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவோ இந்தியாவிடம் நல்ல திட்டம் இருந்தால் சரி தான்.

 

Topics: india, china

English Summary

Why india donate 1.4 billion dollar to maldives and why india saving maldives from china
Advertisement