உலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை..? பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..?

நாம் எப்போதும் வளர்ந்தவர்களை மட்டுமே பார்த்து சிலாகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு மிகப் பெரிய பணக்காரர் தன் பிசினஸ் நஷ்டங்களை சுதாரித்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

ஆக வெற்றி பெறுவது எப்படி என்பது மட்டுமே வாழ்கை அல்ல, தோல்விகளைக் கடப்பதும் தான். தோல்வியின் போது வாழ்கை எப்படி இருக்கிறது. அதை எப்படி பணக்காரர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சரிவு எத்தனை பலமாக இருக்கிறது போன்றவைகளை தொகுத்திருக்கிறோம்.

Advertisement

ஒரு மாறுதலுக்காக, சரிந்தவர்களின் கதைகளையும் கொஞ்சம் படிப்போமே..? அவர்களின் தோல்வியில் இருந்தும் கொஞ்சம் பாடம் கற்கலாமே..? வாருங்கள், ஒரு காலத்தில் பில்லியனர்களாக இருந்தவர்கள் இன்ரு நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக தங்கள் வெற்றிக்கு உழைப்பதைப் பார்ப்போம்

சியான் க்வின்

2008 - 09 ஆண்டுகளில் அயர்லாந்தின் நம்பர் 1 பணக்காரர். ஆனால் அடுத்த மூன்று வருடத்தில் மனிதர் தான் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை என கண்ணீர் விடுகிறார். சியான் க்வின் தான் க்வின் குழும நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர். அயர்லாந்தில் கொடி கட்டிப் பறக்கும் பிசினஸ் சாம்ராஜ்ஜியமாகத் தான் இருந்தது க்வின் குழுமம். அதுவும் 2008 பங்குச் சந்தை சரிவுகள் வரும் வரை. 2008-க்குப் பிறகு நம் க்வின்னுக்கு எல்லாமே சறுக்கள் தான். அதோடு ஏகப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை எல்லாம் ஒரே நேரத்தில் நெருக்கத் தொடங்கிவ்ட்டது அரசு. எனவே க்வின் குழுமம் சரிவில் இருந்து எழுந்திருக்கவே இல்லை.

ஜெயில்

இதற்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல 2012-ம் ஆண்டில் அயர்லாந்து நிதி அதிகாரிகளோடு ஒத்துழைக்காததால் 3 மாத சிறை வாசம் வேறு இருந்திருக்கிறார். இன்னும் க்வின் குழும நிறுவனத்தின் நிதி நிலைகளை முழுமையாக சீர்படுத்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார் சியான் க்வின். இத்தனை நடந்தும் க்வின் பிசினஸ் செய்வதை மட்டும் விடவில்லை. இப்போது புதிதாக ஆன்லைனில் சூது விளையாட ஒரு வலைதளத்தை நடத்தி வருகிறார். விட்டதைப் பிடிக்க விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.

Eike Batista - 7th richesr man 30 bn

2002-ல் சுமார் 30 பில்லியன் டாலரோடு உலகின் 7-வது பணக்காரர். இந்த பணக்காரர்கள் டூ சாமானியர்கள் பட்டியலில் அதிக உயரத்தில் இருந்து கீழே இறங்கியது இவராகத் தான் இருக்கும். EBX குழுமத்தின் தலைவராக இருந்து பிசினஸ் செய்துவந்தவர். ஆனால் 2014 மனிதரின் சொத்துக்கள் மைனஸில் தான் இருக்கிறதாம். இவரின் OGX என்கிற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் தான் லத்தின் அமெரிக்க கண்டத்திலேயே திவாலான மிகப் பெரிய நிறுவனமாம்.

வருத்தம்

ஒரு கட்டத்தில் தன் நிறுவனம் வாங்கிய கடன்களுக்காக விஜய் மல்லையா போல தன் சொகுசு வீடுகள், சொகுசுக் கப்பல்கள், தனி விமானங்கள், சொகுசு கார்கள் என அனைத்தையும் விற்று கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்னும் தான் வாங்கிய கடன் தொகையை முழுமையாக கொடுக்க முடியவில்லையாம். எனவே தான் பெற்ற கடனை தானே அடைத்துக் காட்டுவேன் என சவால்விட்டு கடனை அடைக்க முட்டி மோதிக் கொண்டிருக்கிறாராம். இன்று அவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா என்பது கூட தெரியவில்லை. சொத்துக்களை கொடுத்த சிவாஜி ரஜினி போல பொதுமக்கள் போக்குவரத்து வசதிகளையே பயன்படுத்துகிறாராம். சொகுசு கார்களில் பறந்தவருக்கு இன்று சொந்த கார் கூட இல்லையா..?

Bjorgolfur Gumundsson

ஜனவரி 2008-ல் இவரின் சொத்து மதிப்பு சுமார் 1.1 பில்லியன் டாலர் என வாழ்த்தியது ஃபோர்ப்ஸ் நிறுவனம். அந்த கணக்கீட்டின் படி உலகின் 1014-வது பணக்காரர். Landsbankinn என்கிற ஐஸ்லாந்து வங்கியின் பெரும்பாலான பங்குகளை கையில் வைத்துக் கொண்டு வங்கியின் உரிமையாளராகவும், தலைவராகவும் வலம் வந்தவர். இந்த Landsbankinn நிறுவனம் தான் ஐஸ்லாந்திலேயே இரண்டாவது மிகப் பெரிய வங்கி. 2008 பொருளாதாரப் பிரச்னை காரணமாக வங்கியே தடுமாறியது முழுமையாக சிதைந்துவிட்டது. பல்வேறு குற்றச்சாடுகள் புதிதாக எழுந்தது தான் மிச்சம்.

சரிவு

அதே 2018-ம் ஆண்டின் முடிவில் டிசம்பர் 31, 2008 கணக்குப்படி இவரின் சொத்து மதிப்பு 0 டாலர் என மறு கணிப்பு செய்து வெளியிட்டது ஃபோர்ப்ஸ். 2009 ஜூலை வாக்கில் "bjorgolfur Gumundsson-ன் வங்கிக்கு சுமார் 675 மில்லியன் கடன் இருக்கிறது. அதை சரியாக தர முடியாததால், இவரின் வங்கி திவாலானதாக அறிவிக்கப்படுகிறது. அதோடு இந்த வங்கியை இனி ஐஸ்லாந்து அரசு ஏற்று நடத்தும்" என்றது ஐஸ்லாந்து அரசு. ஒரே வருடத்தில் 1.1 பில்லியன் டாலர் சொத்தில் இருந்து 675 மில்லியன் டாலர் கடனுக்கு தள்ளப்பட்டார். ஐஸ்லாந்தின் இரண்டாவது பில்லியனராக வலம் வந்தவர். இன்று எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை.

Allen stanford

2008-ம் ஆண்டில் தான் முதல் முறையாக இந்த ஆலன் ஸ்டான்ஃபோர்ட் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் 400 பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார். 2.2 பில்லியன் டாலரோடு மகிழ்ச்சியில் மிதக்கிறார். ஸ்டான்ஃபோர்ட் ஃபைனான்ஷியல் குரூப் என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தார். மனிதர் அமெரிக்காவிலேயே நல்ல கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைக் காட்டி சுமார் 7 பில்லியன் டாலர் வரை தேற்றியவர். தன்னால் முடிந்த வரை லாபத்தை பெருக்க முயன்று தோற்றவர். வந்த பணத்தில் அத்தனை சொகுசாக வாழ்ந்திருக்கிறார். சொகுசு கார்கள், தனி விமானம், ஊரிலேயே விலை உயர்ந்த பிரமாண்ட மாளிகை என கொண்டாடியவர் இப்போது 110 ஆண்டு சிறை தண்டனையை கழித்துக் கொண்டிருக்கிறார்.

Bernie madoff

இவரை 2009-ம் ஆண்டில் கைது செய்யும் போது கூட17 பில்லியன் டாலர் சொத்து வைத்திருந்தார். இந்த நொடிந்த பணக்காரர்கள் பட்டியலில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர். மனிதர் அமெரிக்காவிலேயே பெரும் பணக்காரர்களை குறி வைத்து சந்தித்து என்னிடம் செம முதலீட்டுத் திட்டம் இருக்கு, வேண்டும் என்றால் சேர்ந்து கொள்ளுங்கள் என திறமையாகப் பேசியே மயக்கி சுமார் 65 பில்லியன் டாலரை வளைத்துப் போட்டவர். அமெரிக்க அரசு இவரைக் கண்டு பிடித்த போது அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு போலி முதலீட்டுத் திட்டங்களை நடத்தியவர் என்கிற சாதனை தெரிய வருகிறது. அதோடு இது தான் அமெரிக்க சரித்திரத்திலேயே மிகப் பெரிய பண மோசடி வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது. 150 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. 17 பில்லியன் டாலர் சொத்துக்கள் அமெரிக்க அரசு பறிமுதல் செய்துவிட்டது.

Elizabeth homes

2015-ம் ஆண்டில் Theranos-ன் மதிப்பு ஒரு பில்லியன் டாலராக அதிகரித்ததால் இவரும் ஒரு பில்லியனராக பட்டியலிடப்பட்டார். சுயமாக முன்னேறிய பணக்காரர்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டில் டாப்பில் இருந்தார். அப்போது Theranos நிறுவனத்தின் மதிப்பு சுமார் 4 பில்லியன் டாலர். அடுத்த ஆண்டே Theranos நிறுவனத்தின் மதிப்பு 0-க்கு வந்து நின்றது.

காரணம்

Theranos நிறுவனம் ஒரு மருத்துவ டெக்னாலஜி நிறுவனம். ஒரு சொட்டு ரத்தம் போதும், ஒட்டு மொத்த நோய்களையும் புட்டு புட்டு வைப்போம் எனச் சொன்னது. 2015-ம் ஆண்டுகளில் ஓரளவுக்கு நம்பி சோதனை மேற்கொண்டவர்களுக்கு சரியான முடிவுகள் காட்டப்படவில்லை. எனவே 2016-ம் ஆண்டில் இது ஒன்றுக்கும் உதவாத நிறுவனம் என மதிப்பீடுகளை குறைத்துக் கொண்டே வந்து கடைசியில் வாங்க ஆளில்லாமல் இருக்கிறது.

Alberto vilar

2004 - 05 காலங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் சொத்துக்களோடு அமெரிக்காவின் 327-வது பெரும்பணக்காரராக வலம் வந்தார். Amerindo Investment Advisors என்கிற நிறுவனத்தை நடத்தி நன்றாக சம்பாதித்தும் வந்தார். 2008-ல் சொத்துக்கள் கரைந்தது. காரணம் பங்குச் சந்தை. முழுக்க முழுக்க பங்குச் சந்தை காரணமாகவே மனிதர் தன் முழு சொத்துக்களையும் இழந்தார். அதோடு ஏகப்பட்ட மோசடி வழக்குகள் இவர் மீது போடப்பட்டது. பங்குச் சந்தை மோசடி, பணச் சலவை மோசடி என ஒரு வழக்கை முடித்து வெளியே வரும் போது அடுத்த வழக்கு காத்திருக்கும். அப்படி போட்டு கசக்கிவிட்டது அமெரிக்க அரசு. வழக்கின் தீர்ப்பில் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. கடைசியில் நீதிமன்றத்துக்கு கட்ட வேண்டிய அபராதத் தொகையைக் கூட கட்ட முடியாமல் அதற்கு பதிலாகவும் சிறையில் இருக்க சம்மதித்ததாக சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Manoj bhargava

இந்த பட்டியலில் இந்தியர்களே இல்லையா..? என நீங்கள் கேட்பது தெரிகிறது இதோ.. வந்துவிட்டாரே..! 2012 - 13 காலங்களில் இவர் சொத்து மதிப்பு சுமார் 4 பில்லியன் டாலர் என கணித்திருக்கிறார்கள். இவர் 2003-ம் ஆண்டு 5 மணி நேர எனர்ஜி என ஒரு பானத்தைக் கொண்டு வருகிறார். 2012-ம் ஆண்டு வாக்கில் இந்த பானம் ஒரே வருடத்தில் 100 கோடி பாட்டில்கள் விற்பனை ஆகி ஒரு உலக சாதனை படைத்தது. 2003-ல் இவர் இந்த பானத்தை அமெரிக்க சந்தைகளில் கொண்டு வந்தது முதல் 2014 வரை சுமார் 100 வழக்குகள் இவர் மீதும், இவர் பானத்தின் மீதும் போடப்பட்டது. அவைகளில் 91 வழக்குகள் தீர்க்கப்பட்டிருக்கிறதாம்.

தானம்

2015-ம் ஆண்டில் எல்லா வழக்குகளுக்கு மேல் ஒரு பெரிய வழக்கைத் தொடுத்தார்கள். மனோஜ் பார்கவாவின் பானத்தை குடிப்பவர்களுக்கு மாரடைப்பு நோய் வந்து இறக்கிறார்கள் என ஒரு தலையங்கச் செய்தி வெளியானது. பங்குச் சந்தைகளில் இந்த செய்தியைக் கேட்ட உடன் Innovations Ventures LLC பங்குகளின் விலை சரசரவென சரியத் தொடங்கியது. சுமார் 4 பில்லியன் டாலராக இருந்த சந்தை மதிப்பு ஒரு சில தினங்களிலேயே வெறும் 800 மில்லியனுக்கு வந்துவிட்டது. இந்த இறக்கத்துக்கு நடுவிலேயே தன் 99% சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வதாக அறிவித்து பிரச்னையை அழகாக டீல் செய்தார் மனோஜ் பார்கவா. இன்னும் இவரின் 5 மணி நேர எனர்ஜி டிரிங்க் அமேஸானில் கிடைக்கிறது. ஒரு பாட்டிலின் விலை சுமார் 4500 ரூபாய்.

Femi otedola

2009-ம் ஆண்டில் நைஜீரியாவின் இரண்டாவது பணக்காரரான இவரிடம் 1.8 பில்லியன் டாலர் சொத்து இருந்ததாம். இந்த சொத்துக்களை வைத்துக் கொண்டு பல நல்ல பிசினஸ் செய்தும் வந்தார். ஆனால் மனிதரின் ஆசைக்கு 2016 - 17-ல் செம அடி விழுந்தது. ஒரு எண்ணெய் நிறுவனத்தில் சுமார் 79 சதவிகித பங்குகளை வாங்கிக் குவித்துவிட்டார். நிச்சயம் அதிகரிக்கும் என்கிற ஒரு ஒரு அதீத் நம்பிக்கை தான். ஆனால் நேர்மாறாக சரிந்தது. சுமார் 85 சதவிகிதத்துக்கு கீழ் அவர் முதலீடு செய்த பங்கின் விலை சரிந்தது. இப்போது கையில் சுமார் 500 மில்லியன் டாலரோடு தன் வேலையை மட்டும் ஒழுங்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். பங்குச் சந்தை பக்கம் அதிகம் போவதில்லையாம்.

Adolf merckle

2006-ம் ஆண்டில் உலகின் 36-வது பெரிய பணக்காரராகவும், ஜெர்மனியின் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது அவரின் சொத்து மதிப்பு சுமார் 12.8 பில்லியன் டாலர். 2008 உலக பொருளாதார பிரச்னையால் தன் பெரும் பகுதி சொத்துக்கள் காணாமல் போனது. அந்த ஒரு பிரச்னையால் 2008-ம் ஆண்டு முடிவில் அடால்ஃபின் VEM குழும நிறுவனங்களின் கடன் சுமார் 6 பில்லியன் டாலராக அதிகரித்தது. ஒரே வருடத்தில் 18 பில்லியன் டாலர் நஷ்டம். நிறுவனத்தைக் காப்பாற்ற பங்குச் சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டார். முதலீடுகள் எதிர்பார்த்ததை விட பன் மடங்கு நஷ்டத்தைக் கொடுத்தது. மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் 2009-ல் தற்கொலை செய்து கொண்டார்.


இனி பிசினஸ் செய்பவர்கள், அதிதமாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், கொஞ்சம் இந்த சரிவுக் கதைகளையும் காதில் வாங்கிக் கொண்டு பயணித்தால் நன்றாக இருக்கும்.

English Summary

world 36th richest man kill himself by jumping in front of the train
Advertisement