சென்னை: நாட்டிற்கு அடிக்கடி வருகை தரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு வரும்போது கார் இருந்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணுவார்கள். ஆனால் நினைத்தவுடன் கார் வாங்குமளவு பணம் கையில் இருப்பது சாத்தியமில்லை.
நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக(என்.ஆர்.ஐ.) இருந்து கார் கடன் பெற வேண்டும் என்று விரும்பினால் அது சற்று கடினமான காரியம் தான். விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடுவதோடு கடன் பெறுவதும் எளிதான விஷயம் கிடையாது.
அப்படியும் எப்படி கார் கடன் பெறுவது என்று பார்ப்போம்?
எஸ்.பி.ஐ.
உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) வெளிநாடு வாழ் இந்தியர்களை உத்தரவாதம் கொடுப்பவராகக் கொண்டு இந்தியாவில் வசிப்பவர்களை கடன் கோரி விண்ணப்பிக்கச் செய்கிறது. இதன் மூலம் கடன் இந்தியாவில் வசிப்பவரின் பெயரிலேயே எடுக்க வேண்டும் என்பதும் வண்டியும் அவர் பெயரிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் தெளிவாக விளங்குகிறது.
இருப்பினும் உத்தரவாதம் தருபவர் 65 வயதை அடையும் முன் கடன் திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்பது எஸ்.பி.ஐ.யின் விதிமுறையாகும்.
திருவிதாங்கூர் ஸ்டேட் வங்கி
கார் கடன் எடுக்கும் விஷயத்தில் திருவிதாங்கூர் ஸ்டேட் வங்கியின் நடைமுறைகள் இருப்பதிலேயே எளிமையானதாகும். ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு குறையாமல் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது அவர்களின் துணைவரின் பெயரில் வங்கிகள் கடன் தருகின்றன. கடன் தொகை கிட்டத்தட்ட ஆண்டு வருமானத்தில் இருந்து நான்கு மடங்கு. கடன் என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ கணக்கிலிருந்து திரும்ப செலுத்தப் பட வேண்டும்.
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கியின் கார் லோன் திட்டம் புகழ் பெற்றது. ஏனெனில் இந்த வங்கியின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே. இந்தியாவில் வசிப்பவர்களுக்கான வட்டி விகிதமே இவர்களுக்கும் விதிக்கப்படுகிறது.