சென்னை: நாம் அனைவருமே கண்டிப்பாக அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போம். அதை என்ன செய்வது என்று தெரியாததால் நாம் அதைப் பற்றி யோசிப்பதே இல்லை.
அதைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் என்றால் என்ன என்பதைக் காணலாம்.
அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள்:
அழுக்கு படிந்து, சிறிது கிழிந்து காணப்படும் நோட்டுகளே இந்த வகையில் வருகின்றன. இரண்டு ஓரங்களிலும் எண்கள் கொண்ட, அதாவது பத்து ரூபாய்க்கு மேற்பட்ட ரூபாய் நோட்டுகள் இரண்டாக கிழிந்திருந்தாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
என்ன செய்யலாம்?
இந்த வகை நோட்டுகளை மாற்றிக்கொள்ள இயலும். அரசு வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டர்கள், தனியார் வங்கிகளின் நாணயமாற்று கிளைகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் போன்றவற்றில் இவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதற்கென படிவம் ஏதும் இல்லை.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகள்:
துண்டு துண்டாகிப் போன நோட்டுகள், முக்கியமான பகுதிகள் இல்லாமல் போன நோட்டுகள் ஆகியவற்றையும் கூட மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டின் முக்கியமான பகுதிகள் எனப்படுவது உறுதிமொழி, உத்தரவாதம், கையெழுத்து, அசோக தூண் சின்னம், மகாத்மா காந்தியின் உருவம், நீர்க்குறியீடு ஆகியன. இருப்பினும் இந்த நோட்டுகளுக்கு திரும்பத் தரப்படும் பணம் மத்திய ரிசர்வ் வங்கி விதிகளின் படி கணக்கிடப்படுகிறது.
இந்த நோட்டுகளையும் அரசு வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டர்கள், தனியார் வங்கிகளின் நாணயமாற்று கிளைகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் போன்றவற்றில் எந்தப் படிவங்களும் இன்றி மாற்றிக் கொள்ளலாம்.
மிகவும் சிதிலமடைந்த, எரிந்துபோன நோட்டுகள் என்னவாகின்றன?
மிகவும் சிதிலமடைந்த, எரிந்துபோன நோட்டுகள் சாதாரண முறைப்படி மாற்றித் தரப்படுவதில்லை. இவற்றை மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள இயலும். இந்த வகை நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் கிளெய்ம்ஸ் பிரிவில் உள்ள பொறுப்பு அதிகாரியை அணுக வேண்டும்.