பிராவிடண்ட் ஃபண்ட் பல்வேறு வகைப்படும். இதை பணியிடத்துக்கு ஏற்றவாறு இவற்றில் ஒன்றை தேர்வு செய்து தவணைக் கட்டணம் செலுத்தி வரலாம். சந்தாதாரரின் விதிமுறைகள் மற்றும் இது தொடர்பான இதர தகவல்கள், நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடக்கூடும். பிராவிடண்ட் ஃபண்டின் வெவ்வேறு வகைகளுள் சில பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
அரசு பிராவிடண்ட் ஃபண்ட்கள்(Statutory provident funds )
அரசாங்க நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு பொருத்தமானவை. எனவே, மேற்கூறிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இவற்றில் சேரக்கூடிய தகுதி படைத்தவராவர்.
அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட்(Recognised provident fund )
பெரும்பாலான தனிநபர்கள் இவ்வகை பிராவிடண்ட் ஃபண்ட்களின் கீழ் பயனடைந்து வருகின்றனர். சுமார் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை உடைய நிறுவனத்துக்கே இவ்வகை ஃபண்ட் பொருந்தும். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட் திட்டங்களும் வருமான வரி ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
அங்கீகரிக்கப்படாத பிராவிடண்ட் ஃபண்ட்(Unrecognised Provident Fund )
இத்திட்டத்தில் ஒரு ஸ்தாபனத்தின் நிறுவனர் மற்றும் ஊழியர்கள் ஒன்றாகச் சேர்ந்து பிராவிடண்ட் ஃபண்டை துவங்குகின்றனர். எனினும், இவை வருமான வரி ஆணையரால் அங்கீகரிக்கப்படுவதில்லை; அதனால், இவற்றிற்கான வரி விதிப்பு, ஆர்பிஎஃப்களுடன் ஒப்பிடுகையில், வித்தியாசமான முறையில் கையாளப்படுகிறது.
பொது பிராவிடண்ட் ஃபண்ட்(Public Provident Fund)
இத்திட்டத்தில், தனிநபர்கள் தபால் நிலையத்திலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலோ ஒரு அக்கவுண்ட்டை தொடங்கி, ஒரு வருட காலத்தில் சுமார் 70,000 ரூபாயை மிகாத ஒரு தொகையை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பிபிஎஃப் திட்டம், பணி ஓய்வு பெற்ற பின் எவ்வித பென்ஷன் திட்டத்தின் கீழும் பயன் பெற இயலாதவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஒரு சிறந்த பணி ஓய்வுத் திட்டமாகும். பிபிஎஃப், 80சி பிரிவின் கீழ் வரிப்பயன் அளிக்கிறது. இத்திட்டத்திலிருந்து பெறக்கூடிய வட்டித்தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்கும் இத்திட்டம், சுமார் 15 வருட கால வரையறையுடன், குறிப்பிட்ட சில லாக்-இன் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்பட்டு வருகிறது.