சென்னை: இன்றைய வேகமயமான உலகில் வங்கிகளுக்குச் சென்று, வரிசையில் நின்று வரவு-செலவு செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இதற்காகவே, இணைய வழி மற்றும் செல்போன் வழியாக வங்கி சேவைகள் அதிகமாக நடக்கத் தொடங்கியுள்ளன. எங்கே பணப்புழக்கம் அதிகமாக உள்ளதோ அங்கே பிரச்னைகளும் அதிகமாகும் என்பது இயற்கையின் நீதி! இப்படியாக இருக்கும் போது இணைய வழி வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமல்லவா!
இணைய வழி வங்கி சேவை பயன்பாடு, அட்டைகள் மற்றும் செல்போன் சேவைகள் ஆகியவை தான் இன்று வங்கி சேவைகளை எளிமையாக பயன்படுத்துவதற்கான கருவிகளாக உள்ளன. எனினும், நீங்கள் பயன்படுத்தும் இந்த விர்ச்சுவல் வங்கி சேவைகளை தனிமைப்படுத்தி வைப்பதும், தகவல்களை பாதுகாப்பதும் அவசியமானதாக இருக்கிறது. இதில் உங்கள் டெபிட் கார்டு PIN, இணைய வழி உட்செல்லும் பெயர் (Log in ID), உட்செல்வதற்கான கடவுச்சொல் (Log in Password), வரவு-செலவிற்கான கடவுச் சொல், CVV (அட்டையை சரிபார்ப்பதற்கான எண்), டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளின் எண்கள், பிறந்த தேதி, மொபைல் எண், போன்றவை அடங்கும்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டால், தனது கார்டு தொலைந்ததை உடனடியாக வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் வரையிலும் எந்தவிதமான மோசடியான வரவு- செலவுகளுக்கும் வங்கிகள் பொறுப்பாவதில்லை என்ற நிலைதான் நிலவி வருகிறது. கார்டு வைத்திருப்பவர் தகவல் அளித்து விட்டால் அதன் பின்னர் அவர் பொறுப்பாக மாட்டார். தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கார்டுகளைக் கொண்டு பொருட்களை வாங்குதல், பிஷ்ஷிங் என்று சொல்லப்படும் இணைய வழி மோசடிகள், அடையாளத்தை திருடுதல் போன்றவை கார்டுகளைக் கொண்டு நடக்கும் குற்றங்களாக உள்ளன.
மோசடியாளர்கள் உங்களுடைய கணக்கை பயன்படுத்தவும் மற்றும் அடையாளத்தை திருடவும் கூட செய்வார்கள். திருடப்பட்ட தகவல்களை கொண்டு டெபிட் அல்லது கிரடிட் கார்டுகளை நேரடியாக காட்ட தேவையற்றதாக இருக்கும் இணைய வழியில் பொருட்களை வாங்க மோசடியாளர்கள் பயன்படுத்துவார்கள்.
நீங்கள் இணைய வழியில் வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு:
உறுதியான கடவுச்சொற்கள்
வங்கி கணக்கில் உள்ள நிதிக்கு இட்டுச் செல்லும் திறவுகோலாக கடவுச் சொல் உள்ளது. எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டும், எளிதில் யூகிக்க முடியாததாகவும் இருக்கும் உறுதியான கடவுச் சொற்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். அதே போல, இந்த கடவுச் சொற்களை பிறர் பார்க்கும் வகையிலான இடங்களில் வைக்காமல் இருப்பதும் அவசியம்.
தகவல் பாதுகாப்பு
இணையம் அல்லது சமூக வலைத்தலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, உங்களைப் பற்றி அதிகப்படியான தகவல்களை கொடுக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில், மோசடியாளர்கள் இந்த தகவல்களை இணைய வழி வங்கி சேவைகளில் தவறாக பயன்படுத்துவார்கள்.
செல்போன்களை கவனிக்கவும்
நீங்கள் மொபைல் வங்கி சேவைகளை பயன்படுத்தும் உங்களுடைய செல்போன்களை முறையற்ற வகையில் பிறர் பயன்படுத்துவதை தவிர்க்க, எப்பொழுதும் அவற்றை லாக்-செய்து வைக்க வேண்டும். இதன் மூலம், உங்களுடைய வங்கி கணக்கு முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது.
பிஷ்ஷிங்
வங்கிகளிலிருந்து வருவதாக தோன்றும் மின்னஞ்சல்களில் சற்றே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுடைய பாதுகாப்பு தொடர்பான விபரங்களை கேட்கும் எந்தவிதமான லிங்க்-களிலும் (Link) எப்பொழுதும் கிளிக் செய்து விடாதீர்கள். உங்களுக்கே நினைவில்லாத பரிசை வெற்றி பெற்தாகவோ அல்லது போட்டியில் வெற்றி பெற்றதாகவோ சொல்லும் மின்னஞ்சல்களுக்கோ அல்லது உங்களுக்கு பணம் தர வேண்டியுள்ளது என்று பெயர் தெரியாதவர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ எப்பொழுதும் பதில் தரவேண்டாம்.
பிரௌசிங் சென்டர்!!
பிரௌசிங் சென்டர்களில் இணைய வழி வங்கி சேவைகள் அல்லது கட்டணங்களை செலுத்துவதை முடிந்த வரையிலும் தவிர்க்கவும். ஏனெனில், தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் அங்கே எப்பொழுதும் அதிகம்!
முகவரி, செல்போன் எண்ணை புதுப்பித்தல்
முகவரி மற்றும் செல்போன் எண்களை அவ்வப்போது நிகழும் மாற்றங்களுக்கேற்ப புதுப்பித்துக் கொள்வது முக்கியமானதாகும். உங்களுடைய கணக்கில் நிகழும் வரவு-செலவுகளைப் பற்றி, பெரும்பாலான வங்கிகள் குறுந்தகவல்களை அனுப்புகின்றன.
ஸ்கிம்மிங் அல்லது பிரதியெடுத்தல் (குளோனிங்)
வெளியிடங்கள் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, நீங்கள் சற்றே அதிக கவனமாக இருப்பது நல்லது. இதில், உங்களுடைய அட்டையை நீங்கள் தேய்க்கும் (ஸ்வைப்) போது, அதில் உள்ள காந்த பட்டையில் உள்ள தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்த தகவல்களை வைத்து அதே போன்ற டூப்ளிகேட்களை உருவாக்க முடியும். இது பெட்ரோல் பங்க் அல்லது உணவு விடுதி என எங்கு வேண்டுமானாலும் நிகழும். எனவே, உங்களுக்கு எதிரிலேயே கார்டு தேய்க்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.
பிற முன்னெச்சரிக்கைகள்
உங்களுடைய வீட்டுக்கு திடீரென தொலைபேசியில் அழைப்பவர்களையும் மற்றும் வங்கி தொடர்பான தகவல்கள் அல்லது உங்களைப் பற்றிய தகவல்களை அல்லது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை யாராவது கேட்டால் சற்றே சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும். உங்களுடைய அடையாளம் திருடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, நீங்கள் அவ்வப்போது உங்களுடைய கிரெடிட் அறிக்கை கவனமாக பார்க்க வேண்டியது அவசியம்.
வங்கி கணக்கு
உங்களுடைய கணக்கில் முறையற்ற அல்லது தவறான வரவு-செலவுகள் இல்லாமல் இருக்கிறதா என உங்களுடைய வங்கி கணக்கு அறிக்கையில் முறையாக கவனித்து வரவும். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், உடனடியாக உங்களுடைய வங்கிக்கு தகவல் சொல்லி அது முறையானதா அல்லது மோசடி வேலையா என்பதை அறியவும்.
குறைகளை மேல்முறையீடு செய்தல்
உங்களுடைய வங்கி திருப்திப்படுத்தும் வகையில் செயல்பட்டு பதில் அளிக்காவிடில், அந்த புகார்களை விசாரிக்கும் வகையில் ஓம்புட்ஸ்மான் (ombudsman) என்ற கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நீங்கள் புகார் அளித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள், உங்களுடைய வங்கி பதில் அளிக்க வேண்டும். தவறான பில்லிங் தொடர்பான விஷயமாக இருந்தால், அந்த கார்டுக்கான நிறுவனம் அது தொடர்பான ஆவண வடிவிலான சான்றினை 60 நாட்களுக்குள் தர வேண்டும். இதில் திருப்தி ஏற்படாவிடில், கார்டு வைத்திருப்பவர் ஓம்புட்ஸ்மானிடம் செல்லலாம்.