சென்னை: பொதுவாக, மக்கள் பயணகாப்பீட்டில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை, இது ஒரு பயனற்ற, வீணான முதலீடு என நினைக்கிறார்கள். ஆனால், பயணம் செய்வது உங்களுக்கு பிடித்தமான ஒரு செயலாக இருந்தால் அல்லது அடிக்கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், கண்டிப்பாக பயணக்காப்பீடு பற்றி சிந்திப்பது அவசியம். பயணத்தின் போது சில சூழ்நிலை காரணமாக நமக்கு, நமது உடமைகளுக்கு அல்லது நமது பணத்துக்கு ஆபத்து ஏற்படலாம், அந்த நேரத்தில் பயணக்காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உறுதி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணம் ஆகிய இரண்டுக்குமே பயணக்காப்பீட்டு வசதி உண்டு. இருப்பினும், உள்நாட்டு பயணக்காப்பீடு சரியான முறையில் எடுபடவில்லை என்பதே உண்மை. இரண்டு வகையான பயணகாப்பீடுகள் உள்ளன, ஒன்று சாதாரண வெளிநாட்டு மருத்துவக்காப்பீடு, இன்னுமொன்று முழுமையான (காம்ப்ரஹென்சிவ்) பயணகாப்பீடு. விடுமுறைக்கு சுற்றுலா செல்பவர்கள் மற்றும் வியாபார வேலையாக பயணம் செய்பவர்கள் ஆகியோர் இந்த இரண்டு வகையான காப்பீட்டு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த பயணக்காப்பீட்டின் மூலமாக, பயணத்தின் போது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளை குறைத்துக்கொள்ள முடியும். நிதி இழப்பு தொகைகேற்ப, இழப்புத்தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளுதல் அல்லது பலநாடுகளுடன் இணைக்கப்பட்ட பணமற்ற பரிமாற்ற முறை அல்லது பணத்தை பரிமாற்றம் செய்தல் ஆகிய வழிகள் மூலமாக இழப்பீடு செய்துகொள்ள முடியும்.
அதிகமாக பயணக்காப்பீடுகள் 7 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வழங்கப்படுகின்றன. ஒரு வியாபரப் பயணயர் அல்லது ஒரு மாணவன், 360 நாட்கள் வரை இதை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். 30 நாட்களுக்கு அதிகமான பயணக்காலத்தைக் கொண்ட, ஒரு முறைப்பயணம் அல்லது பல்முறை பயணங்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படும். பிசினஸ் ஸ்டாடெட்டின் கிரன் டெலாங் அறிக்கையின் படி, பயணக்காப்பிட்டில் உள்ள சில முக்கிய காப்பீட்டு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
சுகாதாரம்
பயணக்காப்பீடு பெற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணம், மருத்துவ அவசரத் தேவையின் போது பாதுகாப்பு கிடைக்கும் என்பதே. பயணத்தின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எல்லா மருத்துவச் செலவுகளும் பயணக்காப்பீட்டில் அடங்கிவிடும்.
நீங்கள் இந்தியாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், உங்கள் பயணகாப்பீட்டை பயன்படுத்தலாம் என்பதோ அல்லது பயணத்தின் போது நீங்கள் வெளிநாட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உங்கள் சுகாதாரக்காப்பீட்டைப் பயன்படுத்தலாம் என்பதோ அர்த்தமில்லை. பயணகாப்பீடு மற்றும் சுகாதாரக்காப்பீடு இரண்டுமே வேறுபட்ட காப்பீடுகளாகும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மரணம்
பயணத்தின் போது, வெளிநாட்டில் எதிர்பாரதவிதமாக மரணம் ஏற்பட்டால், தாய்நாட்டுக்கு மீண்டும் அனுப்பி வைத்தல் என்பது ஒரு கடினமான, அதிக செலவு ஏற்படக்கூடிய காரியம் ஆகும். எனவே பயணகாப்பீடு வழங்கும் போது இது ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
பயணம் செய்பவரின் உடமைகள்
பயணத்தின் போது உங்களுடைய உடமைகள் தாமதமாக கிடைப்பதற்கோ அல்லது உடமைகள் காணாமல் போவதற்கோ வாய்ப்புகள் உண்டு. இவ்வாறான சூழ்நிலை ஏற்படுகையில், வெளிநாட்டில் தங்கும் போது உங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளும் பயணக்காப்பீட்டில் அடங்கிவிடும்.
நீங்கள் வேறுநாட்டில் தரையிறங்கி, 6 மணி நேரத்திற்குள் உங்களுடைய உடமைகள் கிடைக்காவிட்டால், அது தொலைந்து விட்டதாக கருதப்பட்டு, அந்த நாட்டில் உங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளும் ஈடுசெய்யப்படும்.
பாஸ்போர்ட் இழப்பு
பாஸ்போர்ட் தொலைந்து போவது என்பது பயணம் செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பயங்கரம். பாஸ்போர்ட் வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்கு மிக முக்கியமான அடையாள ஆவணம், அன்னிய நாட்டில் இது தொலைந்துவிட்டால், நீங்கள் மிகபெரிய பிரச்சனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். ஆனால், உங்களிடம் பயணக்காப்பீடு இருந்தால், பயண ஆவணங்களை மீண்டும் பெற்று, பயணத்தை முடித்துக்கொண்டு உங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு காப்பீடு உதவியாக இருக்கும்.
களவு/ கொள்ளை/ பண இழப்பு
களவு, கொள்ளை அல்லது கவனக்குறைவு காரணமாக, பணத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பயணகாப்பீட்டின் மூலம் உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இவ்வாறான துரதிஷ்டவசமான சூழ்நிலையில், பயணகாப்பீட்டு நிறுவனம் அதன் சர்வதேச தொடர்புகள் மூலமாக உங்களுக்கு பண உதவி வழங்கும். மேலும் உங்களுக்கு அவசர பணத்தேவை ஏற்படும் போதும் இந்த பயணக்காப்பீடு உங்களை பாதுகாக்கும்.
தங்குதல்
சில சந்தர்ப்பங்களில், உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தாலோ அல்லது இயற்கை சீற்றங்கள் காரணமாகவோ, சில நாட்கள் தொடர்ந்து அங்கே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் பயணக்காப்பீடு மூலம் மேலதிகமான செலவுகளை ஈடுசெய்ய முடியும்.