சென்னை: இன்னறைய வாழ்க்கை முறையில் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான, அவசியமான, தேவையான ஒன்றாகும். யாருக்கு, எப்போது, என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது நிலையில் உள்ளோம்.
திடீரென விபத்து ஏற்படலாம். ஏதாவது நோயால் தாக்கப்படலாம். அப்போது மருத்துவக் காப்பீடு ஒருவருக்கு மிகவும் துணையாக இருக்கும். சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒரே ஒரு போன் செய்தால் போதும். நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நீங்கள் பெரும்பாலும் ஒரு செலவும் இல்லாமல் அனைத்து சிகிச்சைகளையும் முடித்துக் கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பலாம்.
ஒரு சாதாரண மனிதனுக்கே மருத்துவக் காப்பீடு இவ்வளவு உதவும்போது முதியவர்களுக்கான காப்பீடு வசதிகள் பற்றி சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் நம் பெற்றோர்களுக்கு இது குறித்த விவரங்கள் தெரிந்திருக்காது. ஏனென்றால் அவர்கள் காலத்தில் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் அனைவருக்கும் கிடைத்ததில்லை.
ஆனால் தற்போது ஏராளமான நிறுவனங்கள் பொதுமக்களுக்கும் முதியவர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதிகளை அளித்து வருகின்றன. குறிப்பாக, முதியவர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் நிறைய உள்ளன. யுனைட்டட் ஹெல்த், அப்போல்லோ, பஜாஜ் அலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதியவர்களுக்காக காப்பீட்டுத் திட்டங்களை அளித்து வருகின்றன.
இந்த முதியவர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களின் சில முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்:
மருத்துவ சோதனைகள்
ஒரு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொள்வதற்கு முன், அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளை நீங்கள் செய்து கொள்வது அவசியம். அதற்கான செலவுகளை நீங்கள்தான் செய்ய வேண்டும். பாலிசி எடுத்த பின்னர், அந்தக் காப்பீட்டு நிறுவனம் அந்தத் தொகையை உங்களுக்குத் திருப்பி அளித்துவிடும்.
கோ-பேமண்ட்
சில காப்பீட்டு நிறுவனங்கள் 'கோ-பேமண்ட்' என்ற நிபந்தனையை வைத்துள்ளன. அதன்படி, நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அந்தக் காப்பீட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட செலவை மட்டும் ஏற்றுக் கொள்ளும். சிகிச்சைக்கான மீதத் தொகையை நீங்கள்தான் கட்ட நேரிடும். பாலிசி எடுப்பதற்கு முன் இது குறித்த விவரங்களை நீங்கள் அந்த நிறுவனத்திடம் கேட்டறிந்து கொள்வது அவசியம்.
தனிக் காப்பீடு
பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் பொதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்துள்ளன. ஆனால், நம் வீட்டுப் பெரியவர்களுக்கு முதியவர்களுக்கென்றே தனியாக அளிக்கப்படும் மருத்துவ பாலிசிகளை மட்டும் எடுப்பது நல்லது. அப்போதுதான் அதன் மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அவர்கள் மட்டுமே அனுபவிப்பதற்கு வசதியாக இருக்கும்.
டி.பி.ஏ. (TPA)
பாலிசி எடுப்பதற்கு முன், Third Party Administrator (TPA) குறித்து முழுவதுமாக அறிந்து கொள்வது நல்லது. அந்தப் பாலிசியை உபயோகித்து நாம் மருத்துவ சிகிச்சைக்கான தொகையைக் கேட்டு விண்ணப்பிக்கும்போது TPAதான் முழுப் பொறுப்பாகும்.
செலவில்லா சிகிச்சை
எந்தெந்த மருத்துவமனைகளில் இந்த நன்மையை உங்கள் காப்பீட்டு நிறுவனம் வைத்துள்ளது என்பதை உங்கள் TPA மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டால் உங்களுக்கு அலைச்சலும் நேரமும் நிறைய மிச்சமாகும்.
புதுப்பித்தல்
ஒவ்வொரு ஆண்டும் எந்தத் தேதியில் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது முக்கியம். குறிப்பிட்ட தேதிக்குள் புத்துப்பித்தால்தான் அவசரத்திற்கு பாலிசியின் பலன்களை முழுவதும் அனுபவிக்க முடியும். மருத்துவ சிகிச்சை எடுத்த தேதியில் பாலிசி கவராகாமல் இருந்தால் சிக்கல் ஏற்படும். உஷார்!!