நம்மில் பலர் அடிக்கடி வங்கியில் கடன் பெறுபவர்களாக இருப்பார்கள். முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்கச் சென்றால் நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள அனைத்து வங்கிகளிலும் தடை இல்லாச் சான்று வாங்கி வரச் சொல்வார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு கேட்பதில்லை. வங்கி மேலாளர் உடனே கணினியை தட்டி உங்கள் கடன் குறியீட்டெண் என்ன என்று பார்த்து விட்டு உங்களுக்குக் கடன் வழங்குவது குறித்து முடிவெடுப்பார். இதை எப்படிச் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் விபரங்கள்
ஒருவர் வங்கியில் கடன் பெற்று அதனை எவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளார் என்பது குறித்த விவரங்களை வைத்து உங்களுக்கு ஒரு குறியீட்டெண் கொடுக்கப்படுகிறது.
அந்த எண் தரவரிசையை வைத்து உங்களுக்கு வங்கிக் கடன் வழங்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து வங்கி முடிவு செய்கிறது.
கடன் செயலகங்கள்
இதற்கென்று சில கடன் மதிப்பீட்டு முகவர்கள் சில கடன் செயலகங்களின் கீழ் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வங்கிகளும், கடன் தரும் நிறுவனங்களும் அவர்களிடம் கடன் பெற்றோர் விவரங்களைக் கொடுத்து மதிப்பீடுகளை ஆன்லைனில் பெற்று முடிவெடுக்கிறார்கள்.
இப்படிதான் நடக்கிறது..
உதராணமாக, நீங்கள் ஏதாவதொரு வங்கியில் கார் வாங்கக் கடன் பெற்றீர்கள் என்றால், உங்களின் கடன் திருப்பிச் செலுத்தும் சக்தி, கடனைத் தவணை தவறாமல் செலுத்திய விவரம், கடன் குறித்த விவரங்கள் ஆகியவற்றை அந்த வங்கி இந்தக் கடன் செயலகத்திற்கு வழங்கும்.
அவர்கள் இதற்கான கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு குறியீட்டெண் வழங்குவார்கள். நீங்கள் தவணை தவறாமல் செலுத்தியிருந்தால், உங்கள் கடன் குறியீடு நல்ல நிலையைக் காட்டும். அதே நேரத்தில், உங்கள் தவணை செலுத்தியதில் ஏதாவது குறைகள் இருந்தால், உங்கள் கடந்த கால நிலை குறித்து உங்கள் கடன் குறியீடு சற்று மதிப்பு குறைந்து காட்டும். உங்கள் கடன் வரலாறு குறித்த விவரங்கள் இல்லையென்றாலும் உங்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகள் சுணக்கம் காட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
கண்காணிப்பு
கடன் செயலகங்கள் உங்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதை மட்டும் ஆராய்வதில்லை. வங்கிகளில் கடந்த காலங்களில் நீங்கள் காலம் தாழ்த்தி தொகை செலுத்திய நிகழ்வுகள், கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய நிகழ்வுகள் பிற கடன் திட்டங்கள் அதாவது நகைக்கடன் கல்விக்கடன், தனிக்கடன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வங்கிகளிடமிருந்து பெற்று உங்களைப் பற்றி மதிப்பிட்டு உங்களுக்குக் குறியீட்டெண் வழங்குகிறது.
அந்த எண் குறித்த விவரங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இந்த விவரங்கள் தேவைப்படும் வங்கிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்படுகிறது.
மதிப்பெண்கள்
உங்கள் கடன் குறியீடு 300 முதல் 600 வரை இருந்தால் நீங்கள் கடன் பெற முடியாத அபாய எல்லைக்குள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கடன் குறியீடு 700 மற்றும் அதற்கும் மேலிருந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கக் கூடும்.
நாணயமும், நேர்மையும்
உங்கள் நாணயமும், நேர்மையும் மூன்றாவது நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டு உங்களுக்குக் கடன் வழங்கப்படுவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.
நீங்கள் கடன் வாங்க விரும்பும் வங்கியில் மட்டுமல்ல உங்கள் பகுதியில் மட்டுமல்ல, நாட்டின் எந்த மூலையில் எந்த நிறுவனத்திடம் நீங்கள் கடன் வாங்கியிருந்தாலும் அந்த விவரங்கள் இவ்வாறான ஆய்விற்குட் படுத்தப்படுகின்றன.
கேள்வி
அதெல்லாம் சரி, இந்த மதிப்பீடுகள் எல்லாம் என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு மட்டும்தானா?
அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், மல்லைய்யாக்களுக்கும் இல்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் மட்டும் விழுந்து பயனில்லை. அரசாங்கத்தின் காதுகளிலும், நீதிமன்றத்தின் காதுகளிலும் கூட விழவேண்டும்தானே.