மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ஆகியன ஓய்வு காலத்தில் மாதாந்திர வருமானத்தை ஈட்டும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளாகும். பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா திட்டமும் மாதாந்திர வருமானத்தை வழங்குகிறது. இது மே மாதம் 2017 இல் தொடங்கப்பட்டது. இந்த ஒவ்வொரு திட்டத்திலும் முதலீட்டாளர்கள் பெருந்தொகையை முதலீடு செய்யலாம் மற்றும் அதிலிருந்து ஒரு வழக்கமான வருமானத்தை ஈட்டலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய ஒருவர் 60 வயதை அடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தத் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்காகச் செயல்படுகிறது. ஆனால் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டங்களில் முதலீடு செய்ய அத்தகைய வரையறைகள் எதுவுமில்லை.
எல்ஐசி-ல் இருந்து பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா (பிஎம்விவிஒய்)
எல்ஐசி அல்லது ஆயுள் காப்பீட்டு கார்ப்பரேஷன் நிறுவனம் அரசாங்கத்தின் 8 சதவிகித மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இயக்குகிறது. இது பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா என்றழைக்கப்படுகிறது(பிஎம்விவிஒய்). எல்ஐசி இந்தத் திட்டத்தை மே மாதம் 4 ஆம் தேதி 2017 முதல் வழங்கத் தொடங்கியுள்ளது மேலும் இந்தத் திட்டம் மே மாதம் 3 ஆம் தேதி 2018 வரை திறந்திருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 10 வருடங்களுக்கு 8 சதவிகித வட்டி விகிதம் உறுதியளிக்கப்படுகிறது. பிஎம்விவிஒய் திட்டத்தின் கீழ் சந்தாதாரர் தேர்ந்தெடுத்த கால வரிசையின் படி - மாதாந்திர/காலாண்டு/அரையாண்டு/வருடாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. மாதாந்திர முறையில் ஓய்வூதியம் ஈட்ட குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.5 இலட்சம் ஆகும். இது மாதத்திற்கு ரூ. 1000 ஓய்வூதியத்தை ஈட்டித் தரும். அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச முதலீடு ரூ. 7.5 இலட்சம் ஆகும். இது மாதத்திற்கு ரூ. 5,000 ஈட்டித்தரும்.
பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யக் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரையறை இருக்கிறது. இந்தத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய முறையைப் பொறுத்து வேறுபடுகிறது. உதாரணமாக, வருடாந்திர ஓய்வூதிய முறையின் கீழ், முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூ. 1,44,578 மற்றும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 7,22,892 ஆகும். மாதாந்திர முறைமையில், முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ. 1,50,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ. 7,50,000 ஆகும்.
பாலிசி காலமான 10 ஆண்டுகளின் முடிவில், ஓய்வூதியம் பெறுபவர் பாலிசியை வாங்கிய தொகையுடன் (ஓய்வூதியம் ஈட்ட முதலீடு செய்யப்பட்ட தொகை) இறுதி ஓய்வூதிய தவணையையும் பெறுவார். பாலிசி காலமான 10 வருடங்களுக்குள் ஓய்வூதியம் பெறுபவர் இறக்க நேரிட்டால், பாலிசி வாங்கிய தொகை பயனாளருக்குச் செலுத்தப்படும். (பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா திட்டத்தைப் பற்றி மேலும் படிக்கவும்).
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்
ஒரு வைப்புதாரர் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் (பிஓஎம்ஐஎஸ்) ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். இது உச்ச வரம்பு அதிகபட்ச தொகைக்கு உட்பட்டது. இது தனித்த அல்லது இணை கணக்காக முதலீடு செய்யலாம். ஒற்றைக் கணக்குகளுக்கு ஒட்டுமொத்த தொகைக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 4.5 இலட்சம் மற்றும் இணை கணக்குகளுக்கு அதிகபட்ச முதலீட்டுத் தொகை வரம்பு ரூ. 9 இலட்சமும் ஆகும். அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து வருடங்களாகும்.
கருத்துக்கள்
இந்தத் திட்டத்தை ஒரு வருடத்திற்குப் பிறகு முதிர்வு காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளலாம். கணக்கைத் தொடங்கிய ஒரு வருடம் மற்றும் மூன்று வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் கணக்கை முடித்துக் கொள்வதாக இருந்தால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 2 சதவிகித கழிவு வைப்புதாரருக்குப் பொருந்தும். கழித்தது போக மீதித் தொகை டெபாசிட் செய்தவருக்குச் செலுத்தப்படும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
இந்தியா போஸ்ட் இணையத்தளம் தெரிவிக்கும் தகவல்களின் படி 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்கள் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட கணக்கைத் திறக்கலாம். மேலும் இந்தக் கணக்கை ஓய்வூதியப் பயன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும் மற்றும் தொகையானது ஓய்வுபெற்ற நன்மைகளைத் தாண்டக்கூடாது என்கிற நிபந்தனைக்குட்பட்டு, 55 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 60 வயதிற்குக் குறைந்த அகவை முதிர்வில் ஓய்வுபெற்ற அல்லது தன்னார்வமாக ஓய்வு பெறும் வயதிற்கு முன்னதாகவே ஓய்வு பெற்ற தனிநபர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று இந்தியா போஸ்ட் இணையத்தளம் தெரிவிக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒரு வைப்புதாரர் தனிநபர் திறனாக அல்லது வாழ்க்கைத் துணைவருடன் (கணவன்/மனைவி) இணையாக ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி இன் கீழ் பயன்களைப் பெற தகுதியுடையதாகிறது. வட்டித் தொகை வருடத்திற்கு ரூ. 10,000 க்கும் மேல் இருந்தால் வட்டி ஆதாயத்தின் மீது டிடிஎஸ் எனப்படும் ஆதாய வரி கழிக்கப்படுகிறது. தற்சமயம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 8.3 சதவிகித வட்டியை வழங்குகிறது.