கடன் வாங்க அலைந்து திரிந்து ஆவணங்களைச் சேகரித்து வங்கிகளில் விண்ணப்பித்துப் பலர் காத்திருப்பார்கள். நீண்ட நாட்கள் கழித்துக் கடன் வழங்க அனுமதி கிடைக்கவில்லை என்று வங்கி மேலாளர் கூறுவதைக் கேட்டு பலருக்கும் அதிர்ச்சி ஏற்படும். அனுமதி கிடைக்காததற்குக் காரணம் என்ன? என்று நாம் கேட்கும் போது 'சிபில் ஸ்கோர்' உங்களுக்குச் சரியில்லை என்று கூறுவார்கள்.
நாம் கடன் பெறும் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் இந்தச் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? அது குறித்த விபரம் இங்கே அறிவோம்
சிபில் மதிப்பெண்
இந்தியாவில் தனிநபர் கடன் என்பது ‘சிபில்' என்று அழைக்கப்படும் இந்திய கடன் தகவல் பணியாக நிறுவனத்தின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனம் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கடன் செயல்பாடு தொடர்பான பதிவேடுகளைப் பராமரித்துத் தகவல்களை அளித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நுகர்வோர் கடன் அறிக்கை முகமை நிறுவனமான டிரான்ஸ்யூனியன் சிபில் மதிப்பெண்களைப் பராமரித்து வருகிறது.
நம்மில் பலருக்கு இந்த மதிப்பெண்களை எப்படி அதிகப்படுத்தி, கடன் பெறுவது என்று தெரிவதில்லை. இப்போது தெரிந்து கொள்வோம்.. சிபில் மதிப்பெண்களை அதிகரித்து எதிர்காலத்தில் கடன் பெறும் ஆலோசனைகள்...
கடன் தகவல் அறிக்கை
சிஐஆர் எனப்படும் கடன் தகவல் அறிக்கையில் உங்களது அனைத்துக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களும் இடம்பெற்றிருக்கும். இந்தப் புள்ளி விபரங்களைச் சிபில் ஆய்வு செய்து உங்களது நிதி தொடர்பான நடத்தை மற்றும் ஒழுக்கம் குறித்த தகவல்களை அளிக்கும்.
உங்களது தற்போதைய நடத்தை தான் எதிர்காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திறனை நிர்ணயம் செய்கிறது. இந்த அறிக்கை மாதந்தோறும் வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது.
மதிப்பெண் வரம்பு
சிபில் மதிப்பெண் வரம்பு 300 முதல் 900 புள்ளிகளுக்கு இருக்கும். இதில் 300 புள்ளிகள் என்பது கீழ்நிலையாகும். 700 முதல் 900 புள்ளிகள் என்பது நல்ல மதிப்பெண்களாகக் கருதப்படுகிறது.
சிபில் மதிப்பெண்களைப் பாதிக்கும் அம்சங்கள் எவை?
கடன் மற்றும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) தொகையை உரிய முறையில் திருப்பிச் செலுத்துவது நேர்மறையான அம்சங்களை உருவாக்கும். இதில் ஏதும் தவறுதல் இருந்தால் அது எதிர்மறையான அம்சங்களாகக் கணக்கிடப்படுகிறது.
கடன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பம் எதுவும் நிலுவையில் இல்லாத நிலையில், நடப்பில் உள்ள கடன் மற்றும் கிரெடிட் கார்டுகள் சாதகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
சிபில் மதிப்பெண்ணை எப்படித் தெரிந்து கொள்வது?
https://www.cibil.com. என்ற இணையதள முகவரியில் உங்களது சிபில் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். சிபில் மதிப்பெண் பெற, சிஐஆர் கோரும் விண்ணப்பம், அடையாள அட்டை, முகவரி அடையாள ஆவணம் அவசியம். இதற்குக் குறைந்தபட்சம் ரூ. 550 கட்டணம் வசூலிக்கப்படும்.
சிஐஆர்.ல் உள்ள பிழைகளைக் கண்டறிதல் எப்படி?
சிபில் மதிப்பெண்கள் தவறாகக் கணக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முடிக்கப்பட்ட உங்களது ஒரு வங்கி கணக்குச் செயல்பாட்டில் இருப்பதாகச் சிபில் கணக்கீட்டில் காட்டும். அல்லது வங்கிகள் மேற்கொண்ட தவறான பதிவுகள் மூலம் தொழில்நுட்ப பிழைகள் ஏற்படும்.
இது போன்ற பிழைகள் கண்டறியப்பட்டால் சிபிலின் ஆன்லைன் குறைதீர் அமைப்பைத் தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு நிலுவைளை சரி செய்ய வேண்டும்
நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவதன் மூலம் சிபில் மதிப்பெண் அதிகரிக்கும். வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியின் போது நிலுவை தொகை செலுத்த முடியாமல் போகலாம்.
நிதி நிலைமை சீரான பின் இந்த நிலுவையைச் செலுத்திவிட வேண்டும். நிலுவை தொகையைப் புறக்கணிக்காமல் செலுத்திவிடுவது நல்லது.
30 சதவீத கடன் பயன்பாடு பராமரித்தல்
அனைத்து விஷயங்களுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள கடன் உச்சவரம்பில் 30 சதவீதம் வரை பயன்படுத்துவதே சிறந்தது. அதிகப் பயன்பாடு அல்லது குறைவான பயன்பாடு மதிப்பெண்களைப் பாதிக்கும்.
அதிகம் பயன்படுத்தினால் அது நிதி ஆதாரத்தின் பலவீனத்தைக் காட்டும். குறைவான பயன்பாடு வங்கியின் தேவையின்மையைக் காட்டும்.
புதிய கடன் வாங்க கூடாது
ஏற்கனவே உள்ள கடன் நிலுவையைப் பைசல் செய்யாமல் புதிய கடன் பெறக் கூடாது. பழைய கிரெடிட் கார்டுகளைச் செயலிழக்க செய்ய வேண்டும். ஒரே கிரெடிட் கார்டை நீண்ட நாட்களுக்குச் சரியான முறையில் பணம் செலுத்திப் பராமரித்து வருவது நல்ல அறிகுறியைக் காட்டும்.
நன்றாகச் செலவு செய்யும் பழக்கம் சாதகமான கிரெடிட் கார்டு பயன்பாடு வரலாற்றைக் காட்டும். புதிய கிரெடிட் கார்டு வாங்க நேரிட்டால், பழைய கார்டு பயன்பாட்டை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.
மாதாந்திர தவணைகள்
கார் அல்லது வீடு வாங்கி அதை மாதாந்திர தவணைகளில் (இஎம்ஐ) சரியான தேதியில் செலுத்துபவரை வியாபாரிகள் புறக்கணிக்கமாட்டார்கள். இவர்கள் கடன் வழங்க அனுமதி பெறும் வாய்ப்புகள் அதிகம்.
கடன் உச்சவரம்பை அதிகரித்தல்
உங்களது கிரெடிட் மதிப்பெண் உயரும்போது நிதி ஒழுக்கம் மீதான நம்பிக்கை அதிகரித்து, வங்கிகள் உங்களுக்கான கடன் உச்சவரம்பை உயர்த்தும். இந்தச் சலுகை தேவையில்லை என்றாலும், நீங்கள் ஒப்புக்கொண்டால் கூடுதல் செலவு செய்ய நேரிடும்.
கடன் உச்சவரம்பு அதிகரிப்பு என்பது சிபில் மதிப்பெண்ணை உயர்த்த உதவும்.