'எலிவளையானாலும் தனிவளை வேண்டும்' என்பார்கள். ஆம், நம் நாட்டில் சொந்தவீடு என்று ஒன்று இருந்தால் பிறவிபலனை அடைந்தமாதிரி. இந்த அவசர உலகில் நாள் முழுதும் உழைத்துக் களைத்து வந்தாலும் நமக்கு ஆறுதலைத் தருவது நம் வீடு தானே. ஆனால், இன்றைக்கு உள்ள விலைவாசி, ரியல் எஸ்டேட் துறையின் உச்சபட்ச வளர்ச்சியினால் சொந்தவீடு என்பது பலருக்கும் கானல்நீர் தான். அதிலும் நம் ஒட்டுமொத்த சேமிப்பையும் கொட்டி வீடோ நிலமோ வாங்குவது என்பதும் நல்லதல்ல.
இதற்குத் தான் வங்கிகளும், வீட்டு நிதி நிறுவனங்களும் பல்வேறு கடன் திட்டங்களை வைத்துள்ளன. அதற்கேற்றாற் போல் வீட்டுக்கடனுக்கான தேவையும், மக்களின் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக அதிகமாகி வருகிறது. ஆகவே, வங்கிகளும் பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் எனப் பலதரப்பட்ட மக்களுக்காகப் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிதி நிறுவனங்கள் வீடு வாங்குவதற்கு மட்டுமல்லாது வேறு பல தேவைகளுக்கும் கடன் திட்டங்களை வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக நிலங்கள் வாங்கக்கூடக் கடன் திட்டங்கள் உள்ளன. சில பிரத்யோகமான வீட்டுக்கடன் திட்டங்களை இங்கே காணலாம்.
நிலம் வாங்குவதற்கான கடன் திட்டம்
பல்வேறு வங்கிகள் நிலம் வாங்குவதற்கான கடன் திட்டங்களை வைத்துள்ளன. நிலம் வாங்குவது என்பது பலருக்கும் எளிதான வழி, ஏனெனில் நம் நிதி நிலைமை எப்போது கைகொடுக்கிறதோ அப்போது வீடு கட்டலாம். நிலத்தின் மதிப்பில் 85% வரை கடனாக வழங்க ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் தயாராக இருக்கின்றன.
வீடு வாங்க கடன் திட்டங்கள்
இது நமக்கு ஏற்கனவே பரிட்சையமான கடன் திட்டம் தான். இதில் புதிதாகக் கட்டப்பட்ட அல்லது பழைய வீட்டை கூட வாங்க இயலும். வீட்டின் மொத்த மதிப்பில் 85 சதவீதத்தை 9.85% முதல் 11.25% என்ற நிலையான அல்லது மாறக்கூடிய வட்டிவீதத்தில் பல்வேறு வங்கிகள் கடனாகத் தருகின்றன.
புதிய வீடு கட்டுவதற்கான வங்கி கடன் திட்டங்கள்
ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குவதைக் காட்டிலும், நம் விருப்பத்திற்கு ஏற்ப வீடு கட்டுபவர்களுக்கெனப் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டம். இதைப் பெறுவதற்கான வழிமுறை மற்ற கடன் திட்டங்களில் மாறுபட்டது. ஏனெனில் நிலத்தின் மதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்வர் மற்றம் அந்த நிலம் வாங்கிய ஓராண்டுக்குள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடன் தொகை வீடு கட்டுமானத்திற்கான உத்தேச செலவை கருத்தில் கொண்டு பல அல்லது ஒரே தவணையாகக் கொடுக்கப்படும். இவ்வகைத் திட்டங்களைப் பரோடா வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
வீடு விரிவாக்கத்திற்கான கடன் திட்டங்கள்
உங்கள் வீட்டில் பால்கனியோ அல்லது இன்னொரு படுக்கை அறையோ கட்டவேண்டுமா? கவலை வேண்டாம். அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்களும் உள்ளன. எச்டிஎப்சி வீடு விரிவாக்கக் கடன் திட்டம், பரோடா வங்கியின் வீடு புதுப்பித்தல் திட்டம் போன்றவை இத்திட்டத்தில் சில.
வீடு மாற்றுவதற்கான கடன் திட்டம்
உங்களுக்கு ஏற்கெனவே வீட்டுக்கடன் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த வீட்டை விற்று வேறு வீடு வாங்க வேண்டுமா? கவலை வேண்டாம்.. இப்போதைய வீட்டுக்கடனை புதிய வீட்டின் பேரில் மாற்றும் வசதி இந்தத் திட்டத்தில் உள்ளது. மிகவும் வசதியான திட்டமாக இருந்தாலும் இது கொஞ்சம் விலையுயர்ந்த திட்டமே!
வீடு மேம்படுத்துதல் கடன் திட்டம்
உங்கள் வீட்டில் பெயிண்ட் அடித்தல், மின் அமைப்புகளைச் சீரமைத்தல் , தண்ணீர்தொட்டி கட்டுதல் போன்ற சிறு வேலைகளுக்குப் பணம் இல்லாமல் தவிக்கிறீர்களா? இதுபோன்ற வீட்டை மறுசீரமைக்கும் பணிகளுக்கு யூனியன் வங்கி, விஜயா வங்கி, ஐசிஐசிஐ வங்கிகள் மேம்படுத்தப்பட்ட வீட்டுக்கடன் திட்டங்களை வைத்துள்ளன.
பேலன்ஸ் டிரேன்ஸ்வர் கடன் திட்டம்
நம் மொபைல் எண்ணை ஒரு நிறுவனத்திருந்து மற்றொன்றிற்கு மாற்றுவது போல வீட்டுக்கடனையும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றலாம். இதன் மூலம் மீதமிருக்கும் கடன்தொகையைக் குறைந்த வட்டி, சிறந்த சேவைகளுக்காக வேறு வங்கிக்கு மாற்றி அங்கு மீத தவணைகளைக் கட்டலாம்.
என்ஆர்ஐ வீட்டுக்கடன் திட்டம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் , இங்கு வீடு வாங்குவதற்காகப் பிரத்யோகமாக வடிவமைப்பட்ட இந்தத் திட்டம், மற்ற கடன் திட்ட வழிமுறைகளில் இருந்து மாறுபட்டது. பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்ந கடன்திட்டத்தை வைத்துள்ளன.
ஃபிரிஜ்டு லோன்
ஏற்கனவே வீடு வைத்துள்ளவர்கள் புதிதாகச் சொத்து வாங்க குறுகிய காலக் கடன் வழங்க இந்தத் திட்டம் உதவும். பழைய வீட்டின் மீது கடன் கிடைக்கும் வரை புதிதாக வாங்கும் வீட்டை 2 வருடம்வரை அடமானம் வைக்கும் திட்டம் இது. விஜயா வங்கி, எச்டிஎப்சி வங்கிகள் இவ்வகைத் திட்டங்களைக் கொண்டுள்ளன.
பத்திரப்பதிவு கடன் திட்டங்கள்
புதிய சொத்துகள் வாங்கும் போது அதன் பத்திரப்பதிவு கட்டணங்களுக்கும் கடன் திட்டங்கள் உள்ளன.
வீடுவாங்கும் போது வீட்டுக்கடன் என்பது அத்தியாவசியம் ஆகிவிட்டதால், நமக்குத் தேவையான சிறந்த கடன் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். சுலபமான வழிமுறைகள், குறைந்த வட்டி விகிதம் கொண்ட வங்கியைத் தேர்வுசெய்து , நமக்குத் தேவையான தவணை முறைகளை ஈஎம்ஐ கால்குலேட்டர் மூலம் கணித்து நன்கு திட்டமிட்டு நம் சொந்த வீடு கனவை நிறைவேற்ற வேண்டும்.