'வரி', 'செஸ்' - இந்த இரண்டு வார்த்தைகளும் அடிக்கடி ஒன்றாய் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவை இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்னென்ன?
வரி மற்றும் செஸ்
தனி நபரின் வருமானத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவது வரியாகும். அந்த வரி தொகையின் மீது குறிப்பிட்ட சதவீதத்தில் விதிக்கப்படுவதே 'செஸ்' வரி. அதாவது 'செஸ்' என்பதை மேல் வரி அல்லது கூடுதல் வரி என்று புரிந்து கொள்ளலாம்.
வரி மட்டும்
வரியானது, நேரடி வரி, மறைமுக வரி என்று வகைப்படுத்தப்படுகிறது. தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து வரி வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு, வருமான வரி மற்றும் மாநகராட்சி வரி போன்ற முதன்மை வரிகளே உள்ளன.
திட்ட முன்னேற்றம்
அரசின் குறிப்பிட்ட திட்டங்களின் முன்னேற்றத்திற்காக, அத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் நோக்கில் 'செஸ்' வரி விதிக்கப்படுகிறது. தேவைக்கேற்றபடி, 'செஸ்' அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும். உதாரணமாக, முன்பு, இடைநிலை மற்றும் மேல்நிலை கல்விக்கென, கல்விக்கான 'செஸ்' விதிக்கப்பட்டு வந்தது.
பட்ஜெட் 2017-18
இது 2018-ம் ஆண்டுப் பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கல்விக்கான 'செஸ்' வரியாக மாற்றப்பட்டுள்ளது. இது, செலுத்தப்பட வேண்டிய வரியின் மீது நான்கு சதவீதமாக விதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் கல்விக்கான 'செஸ்' வரி மூலம் வரும் தொகை, இந்தியாவின் கிராமப்புற சுகாதாரப் பணி தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
நிதி சேர்ப்பு
தனி நபரிடமிருந்து வரி, 'செஸ்' என்ற இரு வேறு வழிகளில் வசூலிக்கப்படும் தொகை, கருவூலத்தில் அவற்றுக்கான பிரத்தியேக நிதியில் சேர்க்கப்படுகிறது. அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும் வருமானம், இந்திய அரசியலமைப்பின் 266 (1) பிரிவின்படி உருவாக்கப்பட்டுள்ள நிதியில் சேர்க்கப்படுகிறது. அங்கிருந்து அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குச் செலவிடப்படும்படி வழங்கப்படுகிறது.
சிறப்புத் திட்டத்திற்கான செலவு
மாறாக, 'செஸ்' மூலம் வரும் வருமானம், எந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்காகச் 'செஸ்' வசூலிக்கப்படுகிறதோ அதற்காக மட்டுமே செலவிடப்படும். உதாரணமாக, முன்பு கிருஷி கல்யாண், ஸ்வாச் பாரத் போன்ற திட்டங்களுக்காகச் 'செஸ்' விதிக்கப்பட்டது. இப்போதோ சுகாதாரம் மற்றும் கல்விக்கான 'செஸ்' வசூலிக்கப்படுகிறது.
வருமானம் ஈட்டும் வழிகள்
மொத்தத்தில் வரி, 'செஸ்' இரண்டுமே இந்திய அரசு, வருமானம் ஈட்டும் வழிகள்தாம். வரி மூலம் வரும் வருமானம், மக்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்து வரும் அரசின் செலவினங்களைச் சந்திக்க உதவுகிறது.