மிக வேகமாக நகரும் இன்றைய உலகில், ஆமை வேகத்தில் உயரும் சம்பளமும், முயல் வேகத்தில் அதிகரிக்கும் செலவுகளும் பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. பொருளாதாரத்தைப் பற்றிய போதிய கல்வி அறிவு இல்லாத நம் இளைஞர்களின் நிலையோ அதைவிட மோசம்.
நிலையான மற்றும் பாதுகாப்பான நிதிநிலையுடன் கூடிய வாழ்க்கையை வாழ பொருளாதாரக் கல்வி அவசியமென இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நீங்களும் இந்த வகையைச் சேர்ந்தவர் எனில், நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நிதி நெருக்கடிகளின் பட்டியல் இதோ..
பொருளாதார அறிவின்மை
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, வேற்றுக்கிரகக் கருத்தாக இருந்த இது, இன்று உலகமெங்கும் தலையங்கங்களில் இடம்பெறுகிறது. தனிப்பட்ட பொருளாதாரம் என்பது அரிதாகவே பாடத்திட்டங்களில் இருப்பதால், கல்லூரியை விட்டு வெளியேறியுடன் வருமானம் ஈட்டும் இளைஞர்கள் இந்தப் பொருளாதார நிலையைச் சமாளிக்கத் தயாராக முடிவதில்லை.
பொருளாதார அறிவின்மை மோசமான பொருளாதாரத் திட்டமிடலுக்கு வழிவகுத்துச் செல்வத்தைக் குறைத்து, கடன் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் , ஓய்வூதிய திட்டங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பிரச்சனைகளைச் சரியான தனிப்பட்ட பொருளாதார மேலாண்மையின் மூலம் எளிதாகச் சமாளிக்கலாம். அதிர்ஷ்டவசமாக, பொருளாதார அறிவைப் பெற உள்ளார்ந்த திறமைகளின் தேவையின்றி எளிதாகக் கற்கலாம். தினமும் சிலநிமிடங்கள் ஒதுக்கினால் கூடப் போதுமானது.
கடன்
இன்றைய இளைஞர்களை அச்சுறுத்தும் பூதமாக நுகர்வோர் கடன் இருக்கிறது. நம்மிடம் இல்லாத ஒன்றின் மீது ஆசைப்பட்டு மனநிறைவு அடைவது இயற்கையானது. ஆனால், பெரும்பாலான மக்கள் தேவைக்கு அதிகமாகக் கடன் பெற்று வசதியான வாழ்வு வாழ விரும்புகின்றனர். இவையனைத்தும் சாதாரண, சமாளிக்கக்கூடிய சமாதானங்களில் தான் தொடங்குகிறது. ஆனாலும் யாரும் வேண்டுமென்றே விரும்பி கடன் வாங்குவதில்லை.
கடன் திட்டங்கள் பற்றிய தெளிவு இல்லாமை மற்றும் சரியான பொருளாதாரத் திட்டமிடல் இல்லாமை போன்றவை நம் கடனை, கொடுங்கனவாக மாற்றிவிடுகின்றன. மோசமாகச் செலவளிக்கும் பழக்கம், திடீர் பிரச்சனை மற்றும் திட்டமிடாத செலவுகள் நம்மைக் கடனில் மூழ்கடித்துவிடுகின்றன. இதனால் இளைஞர்கள் தங்கள் நிலைகண்டு சங்கடப்படுகின்றனர். இது, நிபுணர்களின் உதவியைப் பெறுவதைத் தடுப்பதோடு பதற்றமடையவும் செய்கிறது.
கடன் என்பது நிலையான சாபம் இல்லை. கீழே குறிப்பிட்டுள்ள "M.A.P.S"
என்னும் தந்திரத்தை பின்பற்றினால் கடன் என்னும் புதைகுழியிலிருந்து எளிதில் மீண்டு விடலாம்.
M - Mindset (மனநிலை)
கடன் இல்லா வாழ்வை வாழ வேண்டும் என்ற நேர்மறையான சிந்தனையும், குறிக்கோளும் தான் முதல்படி.
A- Action (செயல்)
நமது உறுதியான, முதன்மையான செயல்பாடுகளே கடன் இல்லா வருங்காலத்தின் திறவுகோல்.
P-Plan (திட்டமிடல்)
ஒருங்கிணைப்பு இல்லாத முயற்சிகள் என்றும் வெற்றியைத் தராது. எனவே, திட்டமிட்டுச் செயல்படவேண்டும்.
S-Support (ஆதரவு)
எப்படியோ, எதிர்பாரா சூழ்நிலையில் கடன் வாங்கிவிட்டோம். இதில் அவமானப்பட ஒன்றுமில்லை. உங்கள் நெருக்கமானவர்களிடம் அறிவுரையும் அரவணைப்பும் பெறுங்கள். மிக மோசமான
சூழ்நிலையெனில் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
நிலையில்லா பொருளாதாரம் (Financial Fragility)
குறைந்த காலக்கெடுவில் ரூ50000 புரட்டவேண்டுமென்றால், உங்களால் என்ன செய்யமுடியும் என எண்ணியிருக்கிறீர்களா? அல்லது, எதிர்பாரா விபத்தில் சேதமடைந்த வாகனத்தைச் சரிசெய்ய என்ன செய்வீர்கள்? இதுபோல அவசரக்காலத்தில் உதவப் பணம் இல்லையென்றால், நீங்கள் நிலையில்லா, எளிதில் சேதமடையும் பொருளாதாரத்தில் உள்ளீர்கள்!
பொருளாதாரத்தைப் பற்றிய உங்களின் குறுகிய பார்வை, பணமில்லாமல் தவிக்கவிட்டு பொருளாதார நிலையின்மையை உருவாக்கும். இது போன்ற பிரச்சனைகளும், திடீர் பணத் தேவையும் உங்களைக் கடனில் தள்ளிவிடும்.
அவசரதேவைக்காகச் சிறிது பணத்தைச் சேமிப்பது எப்போதும் நல்லது. மாதாமாதம் சேமிக்கும் இத்தொகை உங்கள் எதிர்கால நிதிநிலையைப் பாதுகாக்கும். குறைந்தகால வளர்ச்சிக்குப் பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள் (mutual fund investment) உதவும். நீண்ட கால வளர்ச்சிக்கு, நிரந்தர வைப்புநிதி திட்டங்கள் உதவும்.
அதிகரிக்கும் செலவினங்கள்
"நங்கெல்லாம் அந்தகாலத்தில் 50 பைசா தான் பள்ளிக்குக் கொண்டுபோவோம்" என இப்போதும் பல பெற்றோர்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றிக் கூறுவார்கள். ஆனால், இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கும் அன்றாடச் செலவுகளைக் கண்டு இளைஞர்கள் தவிக்கின்றனர். உலகளவில் அதிகரித்துவரும் பணவீக்கமும், மாறாத சம்பள விகிதமும், வட்டிவிகிதமும், வீட்டுப் பட்ஜெட்டில் துண்டு விழ வைத்து அதிர்ச்சியளிக்கிறது.
வேலைக்காக இடம்பெயர்வதால், பொருளாதாரச் சுமை கூடி, சேமிப்பை நசுக்குகிறது. அதிக வருவாய் அல்லது பல்வேறு வருமானங்களும், சரியான முதலீடும் இருந்தால் உதவியாக இருக்கும்.
மோசமான முதலீடு
முதலீடே செய்யாததைக் காட்டிலும் தவறான முதலீடு என்பது மிகவும் மோசமானது. இக்கால இளைஞர்கள் , செவிவழி தகவல்களைக் கூட நம்பி முதலீடு செய்து ஏமாந்துவிடுகிறார்கள். சரியான சமயத்தில், உங்கள் குறிக்கோளை நோக்கி முதலீடு செய்து லாபமீட்டுங்கள்.
இளைஞர்கள், மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து எப்பாடுபட்டாவது மீண்டு வந்துவிட்டால், ஒளிமயமான பொருளாதார எதிர்காலம் காத்திருக்கும்.