ஜனவரி மாதத்திற்கான சிபிஐ பணவீக்கம், எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொருளாதாரக் குறிப்பீடானது, பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் இயங்கும் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரச் சந்தை போன்றவற்றைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது. மேலும், வட்டி விகிதங்கள், ஜிடிபி போன்ற இதர பொருளாதாரக் காரணிகளும் பங்குச் சந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், வருவாய் மற்றும் லாபங்களின் அடிப்படையிலான அந்நிறுவனத்தின் எதிர்காலப் பண வரவின் மீது தான் உண்மையில் நாம் பணயம் வைக்கிறோம். பொருளாதாரக் கோட்பாடுகளின் படி, பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களைக் கணக்கில் கொண்டே ஒரு நிறுவனத்தின் எதிர்கால வரவுகளின் தற்போதைய மதிப்புக் கணக்கிடப்படுகிறது.
வட்டி விகிதங்கள் உயரும் பட்சத்தில், வங்கியின் வட்டி விகிதங்களும் உயரும். அத்தகைய சூழலில் இது போன்ற எதிர்காலப் பண வரவுகளின் மதிப்பு சரியும். இதன் மூலம், பங்குகளின் விலை மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டும் நேர்மாறான உறவுமுறை கொண்டிருப்பதைக் காணலாம்.
மேலும், இதனை உயர்ந்து கொண்டிருக்கும் கடன் பத்திர வரவுடனும் தொடர்புப்படுத்திப் பார்க்கும்போது, கடனீட்டுத் திட்டங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும்.
பணவீக்கமானது பங்குகளின் விலையை அதிகரிக்கும் என்றொரு கோட்பாடு கூறுகிறது.
இந்த இரண்டாவது கோட்பாட்டின்படி, பணவீக்கம் ஏறுமுகமாக இருக்கும் போது, நிறுவனங்கள் தத்தம் நுகர்வோரிடமிருந்து அதிக விலை வசூலிக்கலாம். இதன் விளைவாக, எதிர்காலப் பண வரவுகளின் தற்போதைய மதிப்பு அதிகரிக்கும்; அதனால் பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறான சூழலில், பணவீக்கம் சரியும் பட்சத்தில் இக்கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு அனுகூலங்களும் கிடைக்காமல் போய்விடக்கூடும்.
உண்மையில் பணவீக்கத்தினால் பங்குகளின் விலை சரிவடைந்து பாதிப்புக்குள்ளாகும் என்பதே நிதர்சனம்.
பங்குச் சந்தைகளில் லாபம் ஈட்டித் தரக்கூடிய சாத்தியக்கூறுகள்
பங்குச் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகள் பற்றிப் பன்னெடுங்காலமாக உலவி வரும் ஒரு கூற்றின் படி பணவீக்கத்தை முறியடிக்கக்கூடிய அளவு போதுமான ரிட்டர்ன்களை அவை வழங்கியாக வேண்டும். மேலும், சிட்டி இன்வெஸ்ட்மெண்ட் ரிஸர்ச் நிறுவனம் முன்னர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, ஈக்விட்டிகளிலிருந்து லாபம் கிடைக்க வேண்டுமானால் பணவீக்கமானது கட்டுக்குள் இருக்க வேண்டும், அதாவது மிக அதிகமாகவோ அல்லது வெகு குறைவாகவோ இருக்கக்கூடாது. பணவீக்கம் இறங்குமுகமாக இருக்கும் அதே நேரத்தில் மதிப்பீடுகள் நியாயமாக இருக்க வேண்டியதும் அவசியம். ஸ்டாக் ரிட்டர்ன்கள், லிக்விடிட்டி மற்றும் இதர ஃபண்டமென்டுகளைப் பொறுத்தே இருக்கும்.