நாம் அனைவரும் எதற்காகப் பணத்தைச் சம்பாதிக்க விரும்புகின்றோம்? இந்தக் கேள்வியை நாம் அனைவரும் நம்மை நோக்கி கேட்டுக் கொள்கின்றோம். பணம் இருந்தால் நாம் விரும்பியதை வாங்கலாம். இந்தப் பதில் மிகச் சரி. நாம் விரும்பிய அனைத்தையும் வாங்க நமக்குப் பணம் தேவை. நமக்கு வரும் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றினால் ஒரு பிரச்சனையும் இல்லை. வருவாய் இல்லாத போதும் விருப்பத்தைத் தங்கு தடையின்றி நிறைவேற்ற முயன்றால் என்ன ஆகும்? ஒருவருக்குப் பிரச்சனை அங்குதான் ஆரம்பமாகும்.
எனவே ஒருவர் தன்னுடைய வருவாய்க்குத் தகுந்த படி பட்ஜெட் போட்டு செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் தன்னுடைய இஷ்டம் போல் செலவு செய்தால் அவருடைய நிதி நிலை மிகவும் மோசமாக மாறி விடும். எனவே ஒருவர் தான் செலவாளியா இல்லையா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறிந்த பிறகு, தன்னுடைய செலவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு உதவ ஐந்து அறிகுறிகளைப் பட்டிலலிட்டுள்ளோம். இந்தக் ஐந்து அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு செலவாளி. உங்களுடைய கை ஓட்டைக் கை. எனவே கீழே உள்ள அறிகுறிகளை ஒப்பிட்டு உங்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
கடன் அட்டையின் தொகையை முழுவதுமாகச் செலுத்த இயலாமல் போவது
நம்முடைய கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. முட்டையிடும் கோழிக்குத்தான் அதனுடைய வழி தெரியும். நீங்கள் ஒரு பொருளை ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்கும் பொழுது, செலவு கட்டுக்குள் இருக்கும். அதுவே கடன் அட்டை மூலம் வாங்கும் பொழுது நம்மை மீறி செலவு செய்து விடுவோம். பணப் பரிவர்த்தனையின் பரிசு இது. கிரிடெட் கார்ட் மூலம் வாங்கிய பொருளுக்குப் பணம் கட்ட இயலவில்லை எனில் அது உங்களுடைய அதிகம் செலவழிக்கும் பண்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டி விடும். இத்தகைய சூழலில் சிறிது பணத்தைக் கட்டி உங்களுடைய கடன் அட்டை செயலிழப்பதை தடுக்கலாம். எனினும் மீதியுள்ள பணத்திற்குக் கடன் அட்டை நிறுவனம் அதிக வட்டி விதிக்கும். இந்த வட்டி கூட்டு வட்டி ஆகும். அது அடுத்த மாத. சுழற்சியில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்களுடைய கடன் மதிப்பு அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். கடன் அட்டை நிறுவனம் உங்களுடைய சிபில் மதிப்பெண்ணிலும் கை வைத்து விடும்.
பில் தொகைகளை எப்போதும் தாமதமாகச் செலுத்துவது
பணம் பற்றாக்குறை காரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய பில் தொகைகளை மிகவும் தாமதமாகச் செலுத்துவது, .நீங்கள் வரவுக்கு மீறி அதிகம் செலவலிக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கும் மற்றொரு அறிகுறியாகும். செலவினங்களை எப்பொழுதும் பல்வேறு வகைகளாகப் பிரித்துப் பட்ஜெட் போட்டு அந்த எல்லைக்குள் செலவழிக்க வேண்டும். பில்லுக்குறிய பணத்தைச் செலுத்துகிறது என்பது ஒரு முக்கியமான செலவாகும். அதற்குரிய பணத்தை நீங்கள் உருவாக்கிய பட்ஜெட்டில் இருந்து செலுத்த இயலாமல் போனால், நீங்கள் வேறு எங்கோ தேவையில்லாமல் செலவு செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.
எனவே உங்களுடைய பல்வேறு செலவினங்களைப் பிரித்து அதற்கு எல்லைகள் நிர்ணயித்து அதற்குள் செலவழிப்பது ஒரு நல்ல பழக்கமாகும். இது உங்களுடைய செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உங்களுடைய ஓய்வூதிய நிதியை பயன்படுத்துவது.
உங்களுக்கு ஒரு அவசரநிலை ஏற்படுகின்றது. என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சூழலை சமாளிக்க உங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே நீங்கள் உங்களுடைய ஓய்வூதியக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துச் செலவழிக்கும் நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றீர்கள். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் செய்யும் தேர்வு, நீண்ட கால நோக்கில் உங்களுடைய நிதி நிலைமையைப் பாதிக்கும். உங்களுடைய ஓய்வூதிய நிதி என்பது எக்காரணம் கொண்டும் தொடப்படாமல் இருக்க வேண்டும் மேலும் அது மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட வேண்டும். எனவே நீங்கள் உங்களுடைய ஓய்வு கால நிதி முதலீடுகளைத் திரும்பப் பெறுகிறீர்களானால், அதனுடைய நோக்கத்தை நிறைவேற்ற விடாமல் தடை செய்கின்றீர்கள். மேலும் ஓய்வு நிதியானது தொடர்ச்சியாகச் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதிலிருந்து நிதியை எடுப்பது உங்களுடைய சேமிப்பை கடுமையாகப் பாதிக்கும். இந்த ஒரு செய்கை பழக்கமாக மாறுமானால் அதனுடைய விளைவு மிக மோசமாக இருக்கும். ஏனெனில் இது உங்களுடைய செலவுகளைக் கட்டுப்படுத்தும் கலையை நீங்கள் உணரவில்லை என்பதை இது வெளிக்காட்டும்.
உயர் வட்டி விகித குறுகிய காலக் கடன்களைப் பயன்படுத்துதல்
நாம் அனைவரும் இதைக் கடந்து வந்திருப்போம். பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் தருவதாக நமக்குப் பல்வேறு தொலைப்பேசி அழைப்புகள் வந்திருக்கும். இது ஒரு தூண்டில் போன்றது. அவசரக் காலத்தில் இந்தத் தூண்டிலில் போய் மாட்டிக் கொண்டால் இதிலிருந்து வெளி வருவது மிகவும் கடினம். ஏனெனில் இந்தக் கடன்களுக்கு மிக அதிக வட்டி விதிக்கப்படுகின்றது. உங்களால் இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலும். எனினும் அதிக வட்டி விகித கடன்கள் உங்களுடைய நிதி நிலையில் ஏகப்பட்ட பாதிப்புகளை உருவாக்கி விடும். எனவே உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன், தனி நபர் கடன் போன்ற தூண்டில்களில் சிக்காமல் இருப்பது எப்போதும் நல்லது.
குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்குதல்
உறவுகளிடம் பணப் பரிவர்த்தனையில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. இது உறவுகளை முறித்து விடும். உறவுகளை உருவாக்குவதற்கும் நண்பர்களைப் பேணிக்காப்பதற்கும் முயற்சி தேவை. இதில் பணம் சம்பந்தப்பட்டால், சூழ்நிலைகள் வேறு விதமாக மாறும். எனவே, எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர்களிடமிருந்தும் குடும்ப உறவுகளிடமிருந்தும் ஒருபொழுதும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே உங்களுடைய கடினமான நேரத்தில் உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து கடன் வாங்கி, காலப்போக்கில் அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அந்த உறவு முறிந்து விடும். மேலும், உங்களுடைய குடும்ப உறவுகளிடம் இருந்து நீங்கள் கடன் வாங்கினால், உறவினர்களிடையே உங்களுடைய பெயர் மற்றும் புகழ் எவ்வாறு பரப்பப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?
எச்சரிக்கை!
மேலே உள்ள இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது எல்லாவற்றையோ நீங்கள் உங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தால், நீங்கள் எச்சரிக்கையாகி, உங்களுடைய செலவு பழக்கங்களைக் கவனிக்க வேண்டும். சரியான முடிவுகளைத் தக்க நேரத்தில் எடுத்து நிதிச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே இந்தப் பழக்கங்களில் ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாக இருந்தால், உங்களைத் திருத்திக் கொண்டு, உங்கள் நிதி நிலைமையைப் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பக் கொண்டு வரவும்.