இன்று நமது மியூச்சுவல் பண்ட் சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல முறையில் லாபம் தருவதாக அமைந்துள்ளது. ஏனெனில் புதிய வளர்ந்து வரும் முதலீட்டாளர்கள் எங்கு எவ்வாறு தங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். ஆனால் சில சமயங்களில் தரகர்களைத் தொடர்பு கொண்டும் சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
உங்களுக்கு இக்கட்டத்தில் வழிகாட்ட யாரும் இல்லாவிட்டாலும், இணையதளம் மூலம் மியூச்சுவல் பண்டில் நீங்கள் முதலீடு செய்யலாம். அது எவ்வாறு என்று பார்ப்போம்.
பரஸ்பர நிதிக்கு (மியூச்சுவல் பண்ட்) இணையதளம் மூலமாக எவ்வாறு முதலீடு செய்வது?
1) ஏ.எம்.சி (AMC) இணையதளங்கள்
பல மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இணையம் மூலமாகத் தங்கள் மியூச்சுவல் ஃபண்டு ஆலோசனை சேவையை வழங்குகின்றன. அவை கூடுதலாக எந்தக் கட்டணமும் இதற்க்கு பெறுவதில்லை என்பதால், இது சிக்கனமான வழியாக உள்ளது.
எனினும் அவற்றின் மூலம் முதலீடு செய்ய, தொடக்கத்தில் சேகரிப்பு மையத்திலோ முதலீட்டு நிறுவனத்திலோ விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது போன்ற சில கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதற்கான படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து, கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்திச் செய்து, PAN மற்றும் KYC நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் PIN மற்றும் போலியோ (folio) எண் கிடைத்தவுடன், எல்லாப் பணப் பரிமாற்றங்களையும் இணையத்திலேயே செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறை ஒரு முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போதும் இந்த வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
2) தனிப்பட்ட வலைத்தளங்கள்
Fundsupermart, FundsIndia போன்ற வலைத்தளங்கள் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த வலைத்தளங்களில் கூடுதல் கட்டணமின்றிப் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்யலாம். நம் பேரில் இலவசமாக ஒரு கணக்கு துவக்கி, குவிந்து கிடக்கும் திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
பங்குகளை வாங்குவதும் சுலபமே. சில அடிப்படை விவரங்களைப் பூர்த்திச் செய்து PAN மற்றும் KYC நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறு தொகை செலுத்தியோ இலவசமாகவோ அவற்றை அச்சிட்டு பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் KYC இணக்கம் ஆக்ட்டிவேட் செய்யப்படாமல் இருந்தால், இந்த இணையதளங்கள் உங்களது வேறு சில படிவங்களை உறுதிப்படுத்தி உங்கள் கணக்கை செயல்படுத்தும்.
சிரமம் இல்லாமல் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளப் பல இணையதளங்கள் தற்போது வங்கிகளுடனும் நிதி நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து உதவுகின்றன. இதனைத் தாண்டி பல இலவச சேவைகள், சிறந்த திட்டங்கள் போன்றவற்றைப் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.
3) தரகு சேவை மூலம் இணையத்தில் முதலீடு செய்வது
நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் சில தரகர்கள் தங்கள் இணையதளத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். இந்த வசதியை BSE மற்றும் NSE உடன் கூட்டு சேர்ந்த சில பிரசித்திபெற்ற தரகர்களால் மட்டுமே தர இயலும்.
இந்தச் சேவையைப் பெற, அந்த இணையதளத்தில் கணக்கு துவக்கி, திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, பணப் பரிமாற்றம் செய்தால் போதும். அவற்றை ஆக்செஸ் செய்ய இயலாத போது, தரகர்களைத் தொடர்பு கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
நமக்கு வேண்டிய திட்டங்களை ஆராய்ந்து தெரிவு செய்வது தவிரக் கூடுதலாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் பணப் பரிமாற்றம் போன்ற எல்லாமே தன்னிச்சையாக நடைபெறுகிறது.
பல தரகர்கள் இந்தச் சேவையை இலவசமாக வழங்குகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் ஒரு சிறு தொகையை வசூலிக்கின்றனர். ஆனால் இதுவும் தரகருக்கு தரகர் மாறுபடுகின்றது.
முடிவில்..
நீங்கள் இணையம் மூலமாக மியூச்சுவல் பண்டில் எளிதாக முதலீடு செய்யலாம். ஆனால் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன் ஒவ்வொரு நிபந்தனையையும் கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.