நாம் அதிகமாகச் செலுத்திய வருமானவரித் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பித்தால், பல காரணங்களால் அத்தொகை நம் கைக்கு வந்து சேரத் தாமதமாகிறது. பெரும்பாலும் தாமதத்திற்குக் காரணம் நம்முடைய விண்ணப்பித்தில் உள்ள குறைபாடுகளே ஆகும்.
2017 -2018 ஆம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய நேரம் நெருங்குகிறது. நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் நம்முடைய ஊதியத்திலிருந்து வருமான வரிப் பிடித்தம் செய்யும்பொழுது அதிகமான தொகை பிடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வருமானவரித் தொகையில் நம்முடைய சேமிப்புக்கான முதலீட்டுத் தொகையைக் கழிக்காமல் விட்டிருக்கலாம் இவ்விரு காரணங்களால் அதிகமாகப் பிடிக்கப்பட்ட வருமானவரித் தொகையை நாம் திருப்பப் பெற்றுக் கொள்ளலாம்.
வருமானவரி செலுத்துவோர் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்தபிறகு அதிகப்படியாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
நேர்மையாக விவரங்களை அளிக்க வேண்டும்
வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்பொழுது, பூர்த்திச் செய்யவேண்டிய தகவல்கள் அனைத்தையும் முறையாகவும் நேர்மையாகவும் பூர்த்திச் செய்திருந்தால், திரும்பப் பெறவேண்டிய தொகை ஏதேனும் இருப்பினும் அதனை விரைவாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு வருமான வரித்துறை முயற்சிகளை மேற்கொள்ளும்.
தவறுகள் தான் தாமதத்திற்கான காரணங்கள்
உலகம் முழுவதும் வரிசெலுத்துவோரில் பெரும்பாலானோர் தாங்கள் அதிகமாகச் செலுத்திய தொகை திரும்பக் கிடைக்கும் நல்ல நாளுக்காகக் காத்திருக்கின்றனர். தொகை திரும்பக் கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சியடைகின்றனர். இந்தியாவில் வருமானவரி செலுத்துவோர், தாங்கள் செலுத்திய அதிகமான தொகையைத் திரும்பப் பெறுவதற்கு வருமானவரி தாக்கல் செய்த நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வளவு காலதாமதம் ஆவதற்கு வருமானவரி செலுத்துவோர் செய்கின்ற தவறுகள்தான் காரணம்" என்கிறார் கௌசிக்.
பின்வருகின்ற நடைமுறைகளைப் பின்பற்றினால் அதிகப்படியாகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் காலதாமதமின்றி விரைவாகத் திரும்பப் பெறலாம் என்கிறார் இவர்.
தவறுகள் நேராத வகையில் கவனமாகத் தகவல்களை உள்ளிடவும்
நம்முடைய பெயரில் உள்ள எழுத்துக்களைத் தவறாகப் பதிவு செய்தல், வருமானவரிக் கணக்கிற்கான நிரந்தர எண்ணை (PAN) தவறாகப் பதிவு செய்தல், வீட்டு முகவரியைத் தவறாகக் குறிப்பிடல் போன்றவற்றின் காரணமாகத் தொகையைத் திரும்ப அனுப்புவதற்கு வருமானவரித் துறைக்குக் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே வருமானவரித் தாக்கல் செய்யும்பொழுது தேவையான தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை சோதித்த பிறகுதான் பதிவு செய்ய வேண்டும்.
வருமானவரி வரம்பிற்குள் வரும் தொகையையும், வரிவிலக்கிற்கு உட்பட்ட தொகையையும் சரியாகக் குறிப்பிட வேண்டும்.
வரியைக் கணக்கிடும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வருமானவரி வரம்பிற்குள் வரும் தொகையையும், வருமானவரி விலக்கிற்கு உட்பட்ட தொகையையும் மிகச் சரியாகக் கணக்கிட வேண்டும். கழிப்பதற்குப் பதிலாகக் கூட்டுவதும், கூட்டுவதற்குப் பதிலாகக் கழிப்பதுமான தவறுகள், அதிகப்படியாகச் செலுத்தப்பட்ட நம்முடைய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு மிகுந்த காலதாமதத்தை ஏற்படுத்திவிடும். இணையம் மூலமாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் பொழுது மென்பொருள் வழியிலான செயலியின் கணக்கீடுகள் சரியாக இருக்கின்றனவா எனச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
உரிய வகையில் ITR – V படிவத்தைத் தாக்கல் செய்தல்
வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் நடைமுறைகளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து வைத்திராத காரணத்தினால் ITR - V படிவத்தைத் தாமதமாகத் தாக்கல் செய்கிறோம் அல்லது தாக்கல் செய்யத் தவறுகிறோம். ITR-V படிவம் உரிய வடிவில் உரிய நேரத்தில் தாக்கல் செய்தபிறகும் பிடித்த வரிப்பணம் திரும்பப் பெறத் தாமதம் ஏற்பட்டால், வருமானவரித் துறையின் இணையதளத்தின் மூலமாக மையப்படுத்தப்பட்ட நடைமுறை செயல் மையத்தைத் (CPC) தொடர்பு கொண்டு, தாமதத்திற்கான காரணத்தை அறிந்து கொண்டு தீர்வு காணலாம்.
சரியான வருமானவரிப் படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வருமானத்துக்கான மூலம், இழப்புகள், வருமானவரி செலுத்துவோரின் தகுதிநிலை ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு வகையான வருமானவரிப் படிவங்களைப் பயன்படுத்த வேண்டும். தவறான படிவங்களில் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தால் தாக்கல் செய்யவேண்டிய தேவையான தகவல்கள் விடுபட வாய்ப்புண்டு. அதன் காரணமாகவும் பணம் திரும்பப் பெறுவதற்குத் தாமதமாகலாம்.
தவிர்க வேண்டியவை
கடைசி நிமிடத்தில் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நேரத்தில் நீங்கள் கணக்கைத் தாக்கல் செய்தால் உங்களுக்குத் திரும்ப வரவேண்டிய தொகையும் தாமதமாகத்தான் கிடைக்கும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக எவ்வளவு விரைவாகக் கணக்கைத் தாக்கல் செய்கிறோமோ அவ்வளவு விரைவாக நமக்குத் திரும்ப வரவேண்டிய தொகையும் வந்தடையும்.
சட்டப்பூர்வமான இணைப்புகளை இணைக்கத் தவறுதல்
சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்குப் பெறவேண்டுமென்றால் அதற்குரிய இணைப்புகளையும் படிவங்களையும் சேர்க்க வேண்டும். உதாரணமாக, 89ஆவது பிரிவின் கீழ், நிலுவைத் தொகை பெற்றதன் அடிப்படையிலான வரிவிலக்கிற்கு 10E படிவத்தையும், பிரிவு 80CG ஆவது பிரிவின் கீழ் வாடகைக்கான வரித்தள்ளுபடி பெற 10BA படிவத்தையும், வணிகத்தில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான
வங்கிக்கணக்குத் தொடர்பான தகவல்களைச் சரியாகப் பதிவிடவும்
வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் பொழுது, அதிகப்படியாகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வரவு வைப்பதற்கான வங்கிக் கணக்குக் குறித்த தகவல்களை மிகச் சரியாகப் பதிவிடவேண்டும். கணக்கு எண், வங்கியின் கிளை, IFC குறியீடு போன்றவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும். இந்திய வங்கிகளைச் சேர்ந்த கணக்கு எண்ணை கொடுப்பது விரும்பத்தக்கது.
16A படிவத்தில் உள்ள தகவல்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும்
பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரித் தொகைக்கும் படிவம் 16 அல்லது படிவம் 16A -ல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. 26A படிவத்தையும் இதனோடு ஒப்பிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் வேறுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இறுதி நாளுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமானவரிக் கணக்கினை, வரையறுக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்னதாகத் தாக்கல் செய்வது நல்லது. இது நமக்கான தொகை விரைவாகத் திரும்பக் கிடைப்பதற்கு உதவும்.
மூத்த குடிமக்கள் இணையம் வழி தாக்கல் செய்வது நல்லது
மூத்த குடிமக்கள் இணையம் வழியாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய தொகை இருந்தால், அவர்களும் இணையம் வழியாகத் தாக்கல் செய்தால் பிடித்தம் செய்யப்பட்ட அதிகப்படியான தொகை விரைவாகக் கிடைப்பதற்கான நடைமுறைகள் எளிதாகும்.