பல்வேறு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால், அவர் தனக்குத் தானே வைத்தியம் பார்த்துக் கொள்வாரா? அல்லது மற்றொரு மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்த்துக் கொள்வாரா? என்ன கட்டுரையின் தலைப்பிற்கும் ஆரம்ப வாக்கியத்திற்கும் சம்பந்தேமேயில்லை என யோசிக்கின்றீர்களா? அடுத்து வரும் வரியைப் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
நாம் அனைவரும் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக் காப்பீடு செய்கின்றோம். அதே போல் காப்பீடு நிறுவனங்களும் தனக்கு ஏற்படக் கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிக்கக் காப்பீடு செய்கின்றன. அது என்ன எதிர்பாராத சூழ்நிலை. இதை ஒரு சிறிய உதாரணம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணம்
ஒரு பேரழிவு ஏற்படுகின்றது என நினைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பேரழிவு நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் காப்பீடு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் காப்பீடு நிறுவனம் இழப்பீடு அளிக்க வேண்டும். அது ஒரு மிகப் பெரிய தொகையாகும். இதை அந்தக் காப்பீடு நிறுவனம் எவ்வாறு சமாளிக்கும். அதற்குத் தேவையான நிதி எங்கிருந்து அந்தக் காப்பீடு நிறுவனத்திற்குக் கிடைக்கும். இதற்கான பதில் தான் மறுகாப்பீடு.
மறுகாப்பீடு
எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து நமது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நாம் எவ்வாறு காப்பீடு செய்கின்றோமே அதே போன்று, காப்பீட்டு நிறுவனங்களும் பல வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்பொழுது அந்த நிறுவனம் மிகப் பெரிய இழப்பீடு தொகையை வழங்குவதற்காகத் தங்களுடைய நிறுவனங்களையும் காப்பீடு செய்கின்றன.
மறுகாப்பீட்டு வரையறை
ஒரு காப்பீட்டு நிறுவனம் மற்றொரு காப்பீடு நிறுவனத்திலிருந்து (மறுகாப்பீட்டாளர்) தன்னுடைய இழப்புகளைக் குறைக்கும் பொருட்டு ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வாங்கினால், அது மறுகாப்பீடு எனப்படுகிறது.
காப்பீடு செய்துள்ள நிறுவனம் வசூலித்த பிரீமியம் தொகை இழப்பீடு வழங்குவதற்குப் போதுமானதாக இல்லையெனில், மறுகாப்பீடு செய்துள்ள நிறுவனத்திடமிருந்து தொகையை வசூலித்து, இழப்பீட்டை ஈடு செய்யும். இத்தகைய சூழலில் மறுகாப்பீடு மட்டுமே காப்பீடு நிறுவனத்தைக் காப்பாற்றும்.
இந்த மறு காப்பீடு மட்டுமே ஒரு காப்பீட்டு நிறுவனத்தைத் திவாலாகாமல் காப்பாற்றும்.
எதற்காக மறுகாப்பீடு செய்ய வேண்டும்?
மறு காப்பீட்டிற்கான மிக முக்கியக் காரணம் பேரிடர் மேலாண்மை ஆகும். உண்மையில் காப்பீட்டு என்பது ஒரு வணிகமாகும். ஒரு நிறுவனம் வழங்கியுள்ள மொத்த காப்பீடு மதிப்பிற்கும், அது கொடுத்துள்ள இழப்பீடுகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அந்தக் காப்பீடு நிறுவனம் லாபத்தில் இயங்கும்.
இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது, ஒரு காப்பீடு நிறுவனம் உறுதியளித்துள்ள காப்பீடு தொகைக்கும் அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும்.
மொத்த ப்ரீமியத் தொகை
ஒரு நிதியாண்டில் காப்பீடு நிறுவனம் வசூலித்த மொத்த ப்ரீமியத் தொகையானது அந்த நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து க்ளைய்ம்களையும் சரி செய்ய உதவுகின்றது.
ஆனால், ஒரு மோசமான ஆண்டில், ஒரு எதிர்பாராத நிகழ்வுகளினால் ஏற்படும் பல்வேறு க்ளைய்ம்களினால் அந்தக் காப்பீடு நிறுவனத்திற்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் அந்தக் காப்பீடு நிறுவனம் வசூலித்த ப்ரீமியத் தொகை அந்த நிறுவனம் வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை விட மிகவும் குறைவாக இருக்கும்.
திவாலாக்குவதில் இருந்து தப்பிக்க வழி..
அந்தச் சமயத்தில் காப்பீடு நிறுவனத்தினால் இழப்பீடு தொகையை வழங்க இயலாது. இது கண்டிப்பாகக் காப்பீடு நிறுவனத்தைத் திவாலாக்கி விடும். அந்த நிறுவனத்தின் நிகரச் சொத்து மதிப்பு அனைத்தும் இழப்பீடு தொகையை வழங்க மட்டுமே உதவும். அதன் பின்னர் அந்தக் காப்பீடு நிறுவனத்தினால் தொடர்ச்சியாக இயங்க இயலாது. எனவே இத்தகைய சமயத்தில் மறு காப்பீடு உதவிக்கு வருகின்றது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், மறுகாப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கான காப்பீட்டுத் திட்டமாகும்..
நன்மைகள் மட்டுமே
மறு காப்பீடு என்பது அந்தக் காப்பீடு நிறுவனத்திற்குக் கண்டிப்பாக வருமானத்தையே தரும்.
ஒரு காப்பீடு நிறுவனம் செலுத்திய மறுகாப்பீட்டு ப்ரீமியத்திற்கு வரிச் சலுகைகளும் உண்டு. மறுகாப்பீடு நிறுவனத்தின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் காரணமாகக் காப்பீடு நிறுவனத்திற்கும் கூடுதல் நன்மையே கிடைக்கின்றது.
மறுகாப்பீடு எவ்வாறு வேலை செய்கிறது?
காப்பீட்டு நிறுவனம் மறுகாப்பீட்டு நிறுவனத்திற்கு ப்ரீமியம் கட்டணத்தைச் செலுத்தும். காப்பீடு நிறுவனத்தின் சில வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனத்தினால் இழப்பீடு தொகை வழங்க இயலாத பொழுது, மறுகாப்பீடு நிறுவனம் காப்பீடு நிறுவனத்தின் உதவிக்கு வருகின்றது. மறுகாப்பீடு நிறுவனம் சில வாடிக்கையாளர்களின் இழப்பீடு தொகையை வழங்கும்.
மறுகாப்பீடு நிறுவனம்
மறுகாப்பீடு நிறுவனம் என்பது மறுகாப்பீடு வர்த்தகத்தில் மட்டுமே ப்ரத்யேகமாக ஈடுபடும் ஒரு வர்த்தக நிறுவனமாக இருக்கலாம். அல்லது மறுகாப்பீடு நிறுவனம் பிற காப்பீடு நிறுவனங்களைப் போன்று காப்பீடு வர்த்தகத்தில் ஈடுபடும் பிரிதொரு காப்பீடு நிறுவனமாகவும் இருக்கலாம். வழக்கமான காப்பீடு வர்த்தகத்தில் ஈடுபடுவதுடன் மறுகாப்பீட்டில் ஈடுபட்டுப் பிற காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை இந்த மறுகாப்பீடு நிறுவனம் குறைக்கின்றது.
படிமுறை மறுகாப்பீடு:
இந்த வகையில் ஒவ்வொரு காப்பீட்டு கொள்கையும் தனித்தனியாக அலசப்பட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் அந்தக் காப்பீடு திட்டத்திற்கான வர்த்தக அபாயங்கள் வரையறுக்கப்படும் அதற்கு மறுகாப்பீடு நிறுவனங்களால் பாதுகாப்பு அளிக்கப்படும். இத்தகைய காப்பீடு என்பது பொதுவாக அதிக இழப்பீடு மதிப்புடைய காப்பீடு திட்டங்களுக்கு எடுக்கப்படுகின்றது. ஏனெனில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இழப்பீடு தொகையானது காப்பீடு நிறுவனம் மற்றும் மறு காப்பீடு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றது. இழப்பீடு தொகையை ஒரே காப்பீடு நிறுவனத்தினால் வழங்க இயலாது.
ஒப்பந்தம் மறுபரிசீலனை
இங்கே காப்பீட்டு நிறுவனம் மற்றும் மறுகாப்பீட்டாளர் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறது. இதில், ஒரு குறிப்பிடப்பட்ட வர்க்கத்தின் கீழ் விவாதிக்கப்படும் காப்பீடு திட்டங்கள் மறு காப்பீட்டின் கீழ் வருகின்றது. இது காப்பீடு நிறுவனத்தினால் கட்டாயமாக எடுக்கப்படும் காப்பீடு ஆகும்.