கிரடிட் கார்டை முறையாகப் பயன்படுத்தினால் அதன் மூலமாகப் பல நன்மைகள் கிடைக்கும். அவசரக்காலத்திற்கென வரையறுக்கப்பட்ட கடன் தொகை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்பப் பரிசுப் புள்ளிகள் எனக் கிரடிட் கார்டு கையில் இருந்தால் மச்சான் துணையோடு மலையேறுவதைப் போல ஒரு பாதுகாப்புதான். அதே சமயத்தில் கிரடிட் கார்டை உரிய வகையில் பயன்படுத்தாமல் கவனக்குறைவாக இருந்தால் வீதிக்கு வந்த வம்பை வீட்டுக்கு அழைத்து வந்ததுபோலச் சிக்கல்தான். பயன்பாட்டுக் கட்டணங்கள், அபராத கட்டணங்கள், கடனுக்கான வட்டி என வங்கிகள் கத்தியைத் தீட்டுவதற்கு நம்முடைய கிரடிட்கார்டுதான் சாணைக்கல்லாக இருக்கும்.
கிரடிட் கார்டை தேவைக்கு ஏற்ப முறையாகப் பயன்படுத்தினால் இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். கிரடிட் கார்டு பயன்பாட்டின் மீது விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அறிந்து கொண்டால் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.
1. சோ்க்கைக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம்
பெரும்பாலான நிறுவனங்கள் கிரடிட் கார்டு வழங்குவதற்கு எவ்விதக் கட்டணங்களும் வசூலிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு ஆண்டுக் கட்டணங்களில் இருந்தும் விலக்கும் அளிக்கும். சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் விலக்கு அளித்து விட்டு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணங்களை விதிக்கும். சில நேரங்களில், வங்கிகள் குறிப்பிடும் வரையறைக்குள் செலவு செய்தால் இது போன்ற கட்டணங்களில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படலாம்.
2. வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்
பொதுவாக வங்கிகள், நம்முடைய கிரடிட் கார்டைப் பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை எவ்வித வட்டியும் வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் நம்முடைய கணக்கிலிருந்து நாம் செய்த அதிகப்படியான செலவுத் தொகையை வங்கிக்கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும். சில பிரிமியம் கிரடிட் கார்டுகளை எங்கே உபயோகித்தாலும் எப்பொழுது உபயோகித்தாலும் நிதிசார் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
3. பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்
கிரடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிம்மில் நாம் பணம் எடுத்துக் கொள்ளலாம். அவசரத் தேவைக்கு மட்டுமே இவ்வாய்ப்பைப் பயன்படுத்துவது நல்லது. கிரடிட் கார்டைப் பயன்படுத்தி நாம் வாங்கும் பொருளுக்கான கடன் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டித் தொகை வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், இப்படியான வட்டிவிலக்கிற்கு உட்பட்ட காலத்தில் நாம் கிரடிட் கார்டைப் பளன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும். ஏதேனும் அவசரத் தேவைக்குக் கிரடிட் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுத்தால், எவ்வளவு விரைவாகத் திரும்பச் செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்பச் செலுத்தி விட்டால் வட்டி அதிகமாவதைத் தவிர்க்கலாம்.
4.அதிகப்படியான செலவுகளுக்கான கட்டணங்கள்
உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ உங்களுக்கு அபராத கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக, உங்களுடைய கிரடிட் கார்டைப் பயன்படுத்தி ஒரு லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கையில், நீங்கள் ஒரு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருந்தால் நீங்கள் செலவு செய்த அதிகப்படியான தொகைக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித வட்டி அபராதமாக விதிக்கப்படும். எனவே கிரடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்யும் செலவுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். கிரடிட் கார்டைப் பயன்படுத்தி ஒரு பெரும் தொகைக்குப் பொருளை வாங்கும் பொழுது பற்றாக்குறையாக உள்ள தொகையை உங்கள் கிரடிட் கார்டு கணக்கிற்கு வங்கியில் டெபாசிட் செய்துவிடுவது நல்லது.
5.காலத் தாமதத்திற்கான கட்டணம்
கிரடிட் கார்டு மீதான காலத் தாமதக் கட்டணம் நமக்குப் பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவதாக, கடன் பெறுவதற்கான நம்முடைய கிரடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இரண்டாவதாக நாம் ஒவ்வொரு முறை தாமதமாகப் பணத்தைச் செலுத்தும் போதும் அதற்குரிய அபராத கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சில வங்கிகள் தாமதக் கட்டணத்தை நிலையான விகிதத்தில் வசூலிக்கின்றன. சில வங்கிகள், செலுத்த வேண்டிய தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. உங்களுடைய கிரடிட் கார்டு தொகைக்கான மின்னணு பணப் பரிவர்த்தனை (ECS) ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அதற்காகவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒரு வேலை கிரடிட் கார்டின் வழியாகச் செலவு செய்த முழுத் தொகையையும் திரும்பச் செலுத்தமுடியாவிட்டால், குறைந்த அளவு தொகையாவது செலுத்த வேண்டும். அதன் மூலம் அபராத கட்டணத்தைத் தவிர்க்கலாம்.
6. அயல்நாட்டுப் பரிவர்த்தனைக்கான கட்டணம்
கிரடிட் கார்டைப் பயன்படுத்தி இணையம் வழியாகவோ அல்லது விற்பனை மையம் வழியாகவோ அயல்நாட்டுப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் அதற்கெனத் தனியான கட்டணம் விதிக்கப்படும். வங்கிகளைப் பொறுத்து 1.5 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் விதிக்கப்படும். கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அயல்நாடுகளில் பணம் எடுத்தாலும் தனியாகக் கட்டணம் விதிக்கப்படும். எனவே இது போன்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், அயல்நாடுளுக்குச் செல்லும்போது கிரடிட் கார்டைத் தவிர்த்து போதுமான பணம் அல்லது டிராவல் கார்டை எடுத்துச் செல்லுவது நல்லது.
7.தொகைப் பரிமாற்றத்திற்கான கட்டணம்
ஒரு கிரடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரடிட் கார்டு மூலமாகச் செலுத்தும் பொழுது அதற்கெனத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். உயர் மதிப்புக் கொண்ட கிரடிட் கார்டுகளுக்கு இத்தகைய கடடணம் விதிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் மாற்றம் செய்யும் தொகைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கட்டணம் விதிக்கப்படும். கடன் தொகைக்காக ஒரு கிரடிட் கார்டில் இருந்து இன்னொரு கிரடிட் கார்டுக்குப் பணப்பரிமாற்றம் செய்வது கூடுதல் செலவை இழுத்துவிடும். எனவே கிரடிட் கார்டு மீதான கடன் தொகையை உரிய காலத்திற்குள் செலுத்துவதுதான் சிறந்தது.