பணமதிப்பு நீக்கம், பணவீக்க ஏற்ற இறக்கம், சீனப் பொருட்களின் போட்டி ஆகிய தடைகளைத் தாண்டி சி்று தொழில்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத் தொழில்கள் இயங்க வேண்டுமென்றால் அவற்றுக்கு உதவிக்கரம் தேவையாக உள்ளது. உடனடி உதவியாக முதலீட்டுக்கான கடன் உதவி தேவையாக உள்ளது. கடன் பெற முயற்சிப்பிற்கு முன், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் ஸ்டார்ட் அப் தொழில்களுக்கும் வழங்கப்படும் கடன்களுக்கான வேறுபாடுகள் குறித்து அறிந்து கொள்வது நல்லது.
முதலீடு
சிறு தொழில்கள் என்பது 25 இலட்ச ரூபாய் முதலீட்டிலிருந்து 5 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுடன் தொடங்கப்படும் தொழில்களைக் குறிக்கும். நடுத்தரத் தொழில்கள் என்பது 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுடன் தொடங்கப்படும் தொழில்களைக் குறிக்கும். உற்பத்தித் துறை அல்லது சேவைத்துறை இரண்டுக்குமே இந்த வரையறை பொருந்தும். பாரம்பரியமாகச் செய்து வரும் வணிகம் சார்ந்த தொழில்களும் இதில் அடங்கும்.
இந்த வரையறைகளை, 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுச் சட்டத்தின் (MSMED ACT- 2016) மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஸ்டார்ட் அப் இந்தியா
"ஸ்டார்ட் அப் இந்தியா" திட்டம் இந்தியத் தொழில்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாகத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் மற்றும் பிற உதவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவதற்காக, எவை "ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள்" என்பது குறித்துத் தெளிவான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு தொழில் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கும் மிகாமல் இருக்க வேண்டும், இந்நிறுவனத்தின் மொத்த நிகர இலாபம் 25 கோடிக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. மேலும் இத்தொழில் நிறுவனம், புதுமையான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லக் கூடியதாகவும் அல்லது தற்போது உள்ள உற்பத்தி மற்றும் சேவையினை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யும் தொழில் நிறுவனங்களைத்தான் ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் என்கிறோம்.
கடன் பெறுவதில் உள்ள வேறுபாடுகள்
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கடன்கள், புதியதாகத் தொழில்களைத் தொடங்குவதற்கும் அல்லது ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழில்களின் விரிவாக்கத்திற்காகக் கடன்பெற வேண்டுமென்றால், அத்தொழில் நிலையான வளர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும். தொழிலின் வழியாக மத்திய மாநில அரசுகளுக்குச் செலுத்திய வரிகள் தொடர்பான ஆவணங்களை வங்கியின் ஆய்வுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.
எவ்வளவு கடன் அளிக்கப்படும்?
இத்தொழில்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும். ஒரு ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் இத்தகைய கடன்களுக்கு 18% முதல் 24% வரை வட்டி விகிதங்களை விதிக்கின்றன. கடனுக்கான வட்டி விகிதம் தொழில் நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் தொழில் தொடங்கினால் அவர்களுக்கான வட்டிவிகிதம் மிகவும் குறைவானதாக இருக்கும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, அந்நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் செயல் முதலீட்டுக் கடனாகவும் வணிகத்திற்கான காலமுறை கடனாகவும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிறுவனம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என வகுக்கப்பட்ட வரையறைகளைப் பூர்த்திச் செய்திருக்க வேண்டும். இந்நிறுவனங்கள் தங்கள் தொழிலின் மூலம் குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டியிருக்க வேண்டும். கடனுறுதிக்காக, உற்பத்தி சாதனங்கள் மற்றும் இயந்திரங்களைக் காண்பிக்கலாம். கடனைத் திரும்பச் செலுத்துவதை உறுதி செய்வதற்காக, தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது இயக்குநரின் தனிப்பட்ட உத்திரவாதத்தைக் வங்கிகள் கேட்கக்கூடும்.
பற்று முறைக் கடன் (Line of Credit)
பற்று முறைக் கடன் என்பது ஸ்டார்ட் அப் தொழில்களுக்காக வழங்கப்படுகின்ற கடன் முறைகளுள் ஒன்று. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கிரடிட்கார்டு போன்ற வசதியைக் கொண்டது. நம்முடைய தொழில் நிறுவனம் நல்ல கிரடிட் மதிப்புகளைப் பெற்றிருந்தால் இம்முறையில் கடன் பெறுவது எளிது. கடன்தொகைக்கான வரம்பும் அதிக அளவாக நிர்ணயம் செய்யப்படும். இம்முறையில் பெறும் கடன்களுக்கு முதல் 9 - 15 மாதங்களுக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை. இந்த வட்டியில்லாக் காலம் கடன்கள் மீதான செலவுகளைக் குறைக்க உதவும். இக்கடன் வசதியைப் பெறுவதற்கு நம்முடைய கடன்கள் தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும். இவ்வகைக் கடன்களுக்குக் கடனுறுதி உத்திரவாதம் தேவையில்லை.
வட்டிக்கான சலுகைக்காலம் முடிவடைந்த பிறகு கடனுக்கான வட்டியைச் செலுத்த வேண்டும். இதற்கான வட்டிவிகிதம் 8% முதல் 20% வரை இருக்கும். வாங்கிய தொகைக்கு மட்டும் வட்டி கட்டினால் போதும். நம்முடைய கடன் வரம்பு முழுமைக்கும் வட்டி கட்ட வேண்டிய தேவையில்லை. உதாரணமாக, உங்களுக்கு இவ்வகைக் கடன் பெறுவதற்கு உச்சவரம்பாக 10 இலட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் இத்திட்டத்தின் கீழ் 2 இலட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தால், இந்தக் கடன் தொகைக்கு மட்டும் வட்டி கட்டினால் போதுமானது.