பயணம் என்பது இந்தியர்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் மரபாகும். அன்று இந்தியர்கள் புனித யாத்திரை மற்றும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டனர். பயணத்தின் நோக்கம் புனிதப் பயணமாக இருப்பினும் அதனுடைய அடிநாதம் வாழ்க்கைக்கான கல்வியை அடைவதாக இருக்கின்றது.
பயணத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மனிதர்கள், மற்றும் இடங்கள் நம்முடைய அறிவு மற்றும் ஞானத்தை விருத்தியடையச் செய்கின்றது. பயணத்தின் மூலம் நாம் சேகரிக்கும் அனுபவங்கள் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நம்முடன் துணைக்கு வரும். பயணம் என்பது எப்பொழுதும் எதிர்பாராத அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் என்றாலும், அதைச் சமாளிக்கும் வழிமுறைகளும் இணைந்ததே பயண அனுபவமாகும்.
உள்நாட்டுப் பயணத்தில் ஏற்படும் சில எதிர்பாராத சந்தர்ப்பங்களை நம்மால் சமாளிக்க முடிந்தாலும், வெளிநாட்டுப் பயணங்களில் ஏற்படும் எதிர்பாராத சந்தர்ப்பங்களைச் சந்திப்பது சற்றுக் கடினமானதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் தற்பொழுது இந்தியர்கள் புனிதப் பயணங்களுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இன்பச் சுற்றுலாக்களை அதிகம் மேற்கொள்கின்றனர். அதிலும் இந்தியர்களின் வெளிநாட்டுச் சுற்றுலா சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது. ஐ.நா. உலகச் சுற்றுலா அமைப்பு (UNWTO) 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து சுமார் 50 மில்லியன் மக்கள் வெளிநாட்டுச் சுற்றுலாவை மேற்கொள்ளுவார்கள் எனக் கணித்துள்ளது.
இந்தியர்கள் வெளிநாடு செல்வது அதிகரிப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்கள் செல்லும் சர்வதேச இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடுகையில் சுற்றுலா பயணிகள் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணத்தில் ஏற்படக் கூடிய எதிர்பாராத சிரமங்களைத் தவிர்ப்பதற்கு ஒரு விரிவான பயணக் காப்பீடு திட்டம் ஒவ்வொரு பயணிகளிடமும் கட்டாயமாக இருக்க வேண்டும். பயணக் காப்பீடானது கூடுதல் செலவு பிடிக்கும் விஷயம் எனச் சுற்றுலாப் பயணிகள் பலர் நினைக்கின்றனர். எனினும் உங்களுடைய பயணத்தின் பொழுது, நீங்கள் உங்களுடைய சரக்குகளை இழந்துவிட்டால், உங்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டால், அல்லது ஒரு விமானக் கடத்தல் போன்ற பயங்கரமான சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டால், உங்களுக்குக் காப்பீடு அவசியம் தேவைப்படும். உங்களுடைய வெளிநாட்டுப் பயணங்களுக்குக் காப்பீடு ஏன் அவசியம் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
மருத்துவ அவசரம்
சில கடுமையான நோய்களுக்கான மருத்துவச் செலவுகள் என்பது நீங்கள் எதிர்பாராத அளவிற்கு இருக்கக்கூடும். அதிலும் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கச் சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்படும் அவசர மருத்துவத் தேவை கடும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அதிலும் அந்த மருத்துவத் தேவைக்கு உங்களுக்குத் தேவைப்படும் பணம் உங்களுக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். இது போன்ற ஆபத்தான மற்றும் எதிர்பாராத தருணங்களை எதிர்கொள்ளப் பயணக் காப்பீடு உங்களுக்குக் கைகொடுக்கும். ஷங்கன் விசா போன்ற சில விசாக்களைப் பெற இந்த மருத்துவக் காப்பீடு கட்டாயம் என்றாலும், பல நாட்டு விசாக்களைப் பெற இந்த மருத்துவக் காப்பீடு கட்டாயமல்ல. வெளிநாடுகளில் மருத்துவச் செலவுகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகலாம். எனவே மருத்துவக் காப்பீடு என்பது புத்திசாலித்தனமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இருப்பினும், மருத்துவக் காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும். அதைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக, நீங்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது உங்களுக்கு ஏற்கனவே ஒரு நோய் இருந்தால், அதற்கான சிகிச்சையை உங்களால் வெளிநாட்டில் பெற இயலாது.
போக்குவரத்துத் துயரங்கள்
நீங்கள் கண்டிப்பாகப் பயணக்காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மிக முக்கியமான காரணி இதுவாகும். இன்றைய சூழலில் குறைந்த கட்டண விமானங்கள் மற்றும் நெரிசல் நிறைந்த விமானப் போக்குவரத்து அட்டவணைகளைக் கருத்தில் கொள்ளும் பொழுது விமானத் தாமதங்கள் மற்றும் விமான ரத்து ஆகியவை பொதுவான நிகழ்வுகளாக மாறிவிட்டன. இத்தகைய துயரங்களுக்கான இழப்பீட்டை நீங்கள் பெறும் பொருட்டு, அத்தகைய செலவை உள்ளடக்கிய ஒரு பயணக் காப்பீடு உங்களுக்கு மிகவும் அவசியம். ஒரு சில காப்பீடு திட்டங்கள் விமானப் பயணக்களுக்கு மட்டுமே பொருந்தும் எனினும், வேறு சில காப்பீடு திட்டங்கள் ரெயில் மற்றும் படகு தாமதங்கள் மற்றும் பயண ரத்து போன்றவற்றிற்கும் காப்பீடு அளிக்கின்றன.
உடமைகள் இழப்பு
உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் வெளிநாட்டில் தொலைத்து விட்டால், நீங்கள் கண்டிப்பாக அந்த நாட்டில் இ.ந்தியப் பாஸ்போட்டை பெற வேண்டும். அதற்குரிய பணத்தை அந்த நாட்டுச் செலவாணியில் மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டும். ஒரு வேளை உங்களுடைய பயணம் காப்பீடு செய்யப்பட்டால், இந்தச் செலவுகள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், உங்களுடைய பேக்கேஜ் தொலைந்துபோனாலோ அல்லது தாமதமாகிவிட்டாலோ நீங்கள் எந்த விதமான மாற்று ஆடைகளும் இல்லாமல் அவதிப் பட்டாலோ, ஒரு சில காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு உதவி செய்யும். ஒரு வேளை உங்களுடைய இழப்பு நிரந்தரமாக இருந்தால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.
அவசரகால வெளியேற்றச் செலவுகள்
இயற்கைப் பேரழிவுகளில் தொலைதூர இடங்களிலிருந்து வெளியேறும் பொழுது அதனுடன் இணைந்த மருத்துவச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில், அரசியல் ஸ்திரமின்மையின் போது நீங்கள் அவசரமாக வெளியேற வேண்டியிருந்தால், அதற்கும் இந்தக் காப்பீட்டில் இடமுண்டு. ஆனால் போர் அல்லது தீவிரவாத தாக்குதல் போன்ற சந்தர்ப்பங்கள் காரணமாக நீங்கள் வெளியேற வேண்டியிருந்தால், அதற்கு இந்தக் காப்பீடு திட்டத்தில் இடம் கிடையாது.
மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்
அடிப்படை உரிமைகள்
பயணக்காப்பீட்டிற்கான காப்பீட்டாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் ஒரு சில அடிப்படை உரிமைகளைச் சரிபார்க்க வேண்டும். அதற்குப் பின்வரும் சில குறிப்புகளை மனதில் பதிய வைத்துக் கொள்ளவும்:
குடும்பத்துடன் பயணம் செய்தல்
நீங்கள் குடும்பத்துடன் பயணம் செய்தால், ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் காப்பீடு அவசியம். தனித்தனியாகக் காப்பீடு செய்வதை விட அனைவருக்கும் மொத்தமாகக் குழுக்காப்பீடு செய்து விடலாம்.
சாகச விளையாட்டு
சாகச விளையாட்டு, குளிர்கால விளையாட்டு மற்றும் 'ஆபத்தான செயல்பாடுகள்' போன்றவை பொதுவாக இந்தக் காப்பீடு திட்டத்தின் கீழ் வருவதில்லை. இதற்கான காப்பீட்டைப் பெற நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆபத்தான நாடுகளுக்குச் செல்லுபோது பயணக் காப்பீடு கிடையாது?
ஒரு சில நாடுகளை இந்திய அரசாங்கம் மிகவும் ஆபத்தான பகுதி என வரையறுத்து வைத்துள்ளது. ஒரு வேளை அத்தகைய நாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டால் உங்களுக்குப் பயணக் காப்பீடு கிடைக்காது. அத்தகைய பயணக் காப்பீடு விண்ணப்பங்களைக் காப்பீடு நிறுவனங்கள் நிராகரித்து விடும்.
பணம் இல்லா சேவை
மருத்துவ மற்றும் வெளியேற்ற செலவுகள் பணம் இல்லா சேவையின் கீழ் வராது. அத்தகைய செலவுகளுக்கான பில்களை நீங்கள் இந்தியா வந்த பின்னர்ச் சமர்ப்பித்த பின்னர் அதற்கு உரிய பணம் உங்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.
விலக்கு
காப்பீட்டாளரின் கவரேஜில் எநதெந்த விமானங்கள் மற்றும் ரயில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பதை எப்போதும் சரிபார்க்கவும்.
ஆன்லைனில் ஒப்பிடுக
ஆன்லைன் பயண ஆபரேட்டர்கள் உங்கள் டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளுடன் காப்பீடுகளுக்கான செலவுகளையும் இணைத்து விடுவர். எனினும் அனைத்தும் ஒரு அளவுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கும். உங்களுடைய அனைத்து தேவைகளையும் இந்தக் காப்பீடு ஈடு செய்யாது. எனவே உங்கள் பயணத்திற்கான சிறந்த காப்பீடு திட்டம் ஒன்றை தேர்வு செய்யும் முன் எப்போதும் உங்கள் விருப்பங்களை ஆன்லைனில் ஒப்பிடுக.