ஜாய்ண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு வங்கிக் கணக்குகளைப் பொதுவாகத் திருமணமான ஜோடிகள், நெருங்கிய உறவினர்கள், தொழில் கூட்டாளிகள், நெருக்கமானவர்கள் அல்லது பணத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் தனிநபர்கள் மத்தியில் துவங்குகின்றனர்.
இவ்வகைக் கணக்குகளில், கணக்கை துவங்கும்போது ஒப்புக்கொண்ட படி, அதில் உள்ள அனைத்து தரப்பினரும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அங்கீகாரம் மற்றும் அதிகாரம் பெற்றவர்கள். கூட்டு வங்கி கணக்கை வைத்திருக்கும் போது அதன் அனைத்து கணக்குதரார்களுக்கும் இடையே நம்பிக்கை மிக முக்கியம். நிகழ்காலத்தில் இந்தக் கூட்டு கணக்குகளால் சந்திக்கும் சில ஆபத்துக்களைப் பற்றி இங்கே காணலாம்.
1) விவாகரத்தின் போது பிரச்சனை
கூட்டுக் கணக்குகள் விவாகரத்தின் போது பிரச்சனையாக வெடிக்கக் கூடியது.ஏனெனில் இதில் உள்ள பணத்தை இரு நபர்களுக்கு இடையே பிரிப்பது கடினமாக இருக்கலாம். சிலருக்கு தங்களின் வருவாய் மற்றும் செலவுகள் பற்றிய தகவலை பகிர்ந்துகொள்வது பிரச்சனையாக இருப்பதால், தனியுரிமையை இழுக்க நேரிடும்.
2) மோதல்
வங்கிகணக்குகளைப் பகிர்ந்துகொள்வது மோதலுக்கு வழிவகுக்கும். உடன் வசிப்பவர், வாழ்க்கைத்துணை, தொழில் கூட்டாளிகள் என யாராக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் எழும் என்பதால், பகிரும் வங்கிகணக்குகள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அனைத்து கணக்குதாரர்களும் எந்த நேரத்திலும் மற்றொருவரின் அனுமதியின்றிச் சரிசமமாகக் கணக்கை பயன்படுத்த முடியும், பணம் எடுக்க முடியும், பணம் போட முடியும், தகவல்களைத் திருத்த அல்லது பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்பதால் பிரச்சனை எழ வாய்ப்புள்ளது.
3) வரி விதிப்புகள்
வரிவிதிப்பு என வரும் போது, வட்டி வருவாயை முதல் கணக்குதாரர் தாக்கல் செய்ய வேண்டும். இருவரும் சம்பளதாரர்களாக இருந்தால், வரி விதிப்புகள் முதல் கணக்குதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
நீங்கள் முதல் கணக்குதாரராக இருந்து, இரண்டாம் கணக்குதாரரான உங்கள் வாழ்க்கைத் துணை வருவாய் ஏதும் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு மட்டுமே வரிவிதிப்புகள் பொருந்தும். அந்தச் சூழ்நிலையில் வருமானம் இல்லாதவர்கள் அல்லது வரிவரம்பிற்குக் கீழ் உள்ளவர் முதல் கணக்கு கணக்குதாரராக இருக்க வேண்டும்.
4) நிதி தனியுரிமை குறைவு
இதுபோன்ற கூட்டு கணக்குகளின் பாதுகாப்பு என்பது, உங்கள் உறவின் பாதுகாப்பை அதிகம் சார்ந்துள்ளது.நீங்கள் ஒரு கூட்டுக் கணக்கைத் துவங்கினால், உங்கள் கூட்டாளியுடன் அனைத்து நிதி சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமில்லாமல் , பணத்தையும் அணுக அனுமதிக்கிறீர்கள்.
மேலும் இருவரும், மற்றொருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார், எவ்வளவு மற்றும் எதில் செலவழிக்கிறார், நிதி பழக்கவழக்கங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். இது உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலும், நிதி தனியுரிமை வேண்டுமெனில் தனிக் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும் அல்லது தனி மற்றும் கூட்டு கணக்குகளைத் தனித்தனியே பராமரிக்கலாம்.
உறவுமுறை சரியில்லாமல் இருந்து இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உங்களைப் பற்றிய அனைத்து நிதி ரகசியங்களும் கூட்டாளிக்கும் தெரிந்திருக்கும் என்பதால், நிதி சார்ந்த பிரச்சனைகள் எழலாம்.
பங்குதாரர்கள் இருவரும் தனித்தனியாகப் பிரிய முடிவெடுத்து, கூட்டு வங்கிக் கணக்கு இருவரின் பெயரிலும் இருந்தால், அந்தக் கணக்கை மூடலாமா அல்லது என்ன செய்யலாம் என்பதை இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் செய்யவேண்டும். கணக்கை மூட முடிவு செய்தால், வங்கியைத் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மேலும் நேரடி கடன் அல்லது நிலுவை உத்தரவுகள் இருந்தால் அவற்றை நீக்கலாம் அல்லது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
கூட்டுக் கணக்குதாரர்களில் ஒருவர் இறந்துவிட்டால், கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றொரு கணக்குதாரருக்கு சென்று விடும், பின்னர் அவர் மட்டுமே தனியாக வங்கிக் கணக்கை கையாளலாம்.
5) கடன் வரலாற்றில் தாக்கம்
கணக்குதாரர் மோசமான கடன் வரலாற்றை வைத்திருந்தால், அது அவரின் கூட்டாளிக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கூட்டுக்கணக்கை வைத்திருப்பது பொதுவாத நல்ல யோசனையாக இருந்தாலும், கூட்டாளியால் உங்களின் அனுமதியின்றிப் பணத்தை எடுக்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.இந்தக் காரணத்தால் தான் திருமணமான ஜோடிகளுக்குக் கூட்டுக் கணக்குகள் பொருத்தமானதாக இருக்காது.