வர்த்தகம் செய்வதில் முடிவெடுக்கும்போது, பெரும்பாலான முதலீட்டாளர்கள் பகுத்தறிவுள்ளவர்களாக இருப்பதில்லை. எல்லோராலும் எல்லா நேரத்திலும் சரியான மற்றும் திறமையான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. மாறாக, வர்த்தகர்கள் தங்கள் முடிவுகளை உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கின்றனர். இதனால் பல நேரங்களின் அவர்களின் முடிவால் மிகப் பெரிய இழப்பு நேரிடுகிறது, குறிப்பாகப் பங்கு சந்தை போன்ற வர்த்தகத்தில். முதலீட்டாளர் ஒரு முடிவெடுப்பதில் கடந்து வரக்கூடிய உணர்ச்சிகளின் குறிப்பிட்ட வரம்பை வரையறுக்கிறது வர்த்தக உளவியல்.
முதலீட்டாளர் உணர்ச்சிகளின் 14 நிலைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
நேர்மறை எண்ணம்
பங்குச் சந்தையில் நுழைவதற்கு முன், எல்லா முதலீட்டாளர்களுக்கும் இருக்கும் ஒரு முதன்மை உணர்வு இந்த நேர்மறை எண்ணம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் மற்றும் அவர்களுக்கு இழப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை ஆகியவை சந்தையில் நுழைந்து பங்குகளை வாங்க அவர்களை ஊக்குவிக்கின்றன.
உற்சாகம்
உங்கள் கருத்துக்கள் மற்றும் முடிவுகளை லாபகரமாக நிரூபிக்க ஆரம்பிக்கும்போது, உற்சாகம் பெற ஆரம்பித்து, பங்குச் சந்தையில் நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்தால், உங்கள் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதைச் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள் . இந்த எண்ணம் மேலும் உங்களைப் பங்கு சந்தையில் முதலீடு செய்யத் தூண்டுகிறது.
த்ரில்
உங்கள் முதலீடுகள் வெற்றியைத் தொடும்போது ஒரு வித சிலிர்ப்பு உண்டாகிறது. நீங்கள் இவ்வளவு பெரிய லாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்று கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களை நீங்களே பெருமையாகப் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு உணர்வு தோன்றும். இதுவே அதீத நம்பிக்கையின் முதல் படியாகும்.
பரவசம்
விரைவான மற்றும் எளிதான இலாபங்களைச் செய்த பிறகு, நீங்கள் ஒரு நிதி வழிகாட்டியைப் போல உணர்கிறீர்கள், உங்கள் முதலீட்டு முடிவுகளில் உள்ள அபாயங்களை அலட்சியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் செய்யும் எல்லா வர்த்தகமும், லாபத்தை நோக்கி மட்டுமே செல்லும் என்று கண்மூடித்தனமாக நம்பத் தொடங்குகிறீர்கள்.
பதட்டம்
சந்தைச் சூழ்நிலை முதன் முதலாக உங்களுக்கு எதிராக அமையும் தருணத்தில் உங்களுக்கு ஏற்படும் உணர்வு பதட்டம். தற்போது வரை நீங்கள் நடத்திய எல்லா வர்த்தகத்திலும் லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு இழப்பு ஏற்படும்போது உங்கள் உள்ளம் குழப்பம் அடைகிறது. முதலீட்டாளர்கள் தங்களை நீண்டகால முதலீட்டாளர்களாக அடையாளம் காட்டுவதற்கும் எதிர்காலச் சந்தையில் மீண்டும் ஒரு ஏற்றம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கும் பிரதான காரணம் இந்த உணர்வு ஆகும்.
மறுப்பு
நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின்னும் சந்தை சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையாத நேரத்தில் உங்களுக்குத் தோன்றும் , உணர்வு தான் இது. நீங்கள் தவறான தேர்வைச் செய்து விட்டதால் உங்கள் பங்கை இன்று விற்று இழப்பை சந்திக்க நேர்ந்ததாக நீங்கள் கருதுவீர்கள். ஆனாலும், சந்தைச் சூழ்நிலை மாறி, உங்கள் முதலீடுகளுக்கு லாபத்தைக் கொடுக்கும் என்ற ஒரு சின்ன மனவோட்டம் உங்களுக்குள் இருக்கும்.
பயம்
சந்தை நிலைமை சற்றும் ஏறாத போது, உங்கள் முதலீடுகளுக்கு லாபம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லாத நிலை ஏற்படும் போது, பயம் ஏற்பட்டு நீங்கள் வருந்தத் தொடங்குவீர்கள். இத்தகைய உணர்வு, ஒரு முதலீட்டாளருக்கு அவநம்பிக்கையைக் கொடுத்துச் சந்தையில் இருந்து வெளியேறும் உணர்வைத் தருகிறது.
நம்பிக்கையற்ற நிலை
உங்களுக்கு நடப்பவற்றை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. உங்கள் மேல் ஒரு நம்பிக்கையற்ற நிலை உண்டாகி, எல்லோரிடமும் யோசனை கேட்கத் தொடங்குவீர்கள். பங்குச் சந்தையில் உங்கள் பணத்தை இழக்க மனமில்லாமல், மீண்டும் லாபம் சம்பாதிக்கும் பல வழியைத் தேடுவீர்கள்.
பீதி
ஒவ்வொரு முயற்சியும் தோற்றுப் போவதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாத ஒரு பீதியான ஒரு நிலை உண்டாகிறது. முதலீட்டாளர்கள் அவர்களுடைய அறிவைக் கேள்விக்குள்ளாக்குவதற்கும், முதலீடு செய்வதற்கு முன்னர் முதலீட்டைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி தேவை என்பதை உணர்த்துவதும் இந்த உணர்வு தான்.
சரணாகதி
இந்தக் கட்டத்தில் நீங்கள் தவறான முதலீட்டு முடிவை எடுத்திருக்கிறீர்கள், உங்கள் முதலீட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது என்பதை உணர்வீர்கள். மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க முதலீட்டாளராகிய நீங்கள் உங்கள் பங்குகளை விற்கத் தொடங்குவீர்கள்.
விரக்தி
உங்கள் முதலீடுகளில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால், நீங்கள் சந்தையிலிருந்து வெளியேற முடிவு செய்வீர்கள். எந்த நிறுவனப் பங்குகளையும் வாங்கக் கூடாது என்று உறுதியாக இருப்பீர்கள். பின்னாட்களில் வரும் மிகப்பெரிய லாப வாய்ப்புகள் கொண்ட நல்ல வர்த்தக வாய்ப்புகளை இழக்க நேர்வதற்கு, இந்த உணர்வு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
மனச்சோர்வு
பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய நல்ல வாய்ப்பைத் தவற விட்டதை நீங்கள் அறிந்து கொள்ளும்போது, உங்கள் முட்டாள்தனத்தை நினைத்து மிகுந்த மனவழுத்தம் கொள்வீர்கள். கவனமாக இருந்தால், இந்த வர்த்தகம் பெரும் லாபத்தைத் தரும் என்பதை இந்தச் சூழ்நிலை உங்களுக்குப் புரிய வைக்கிறது.
நம்பிக்கை
மீண்டும் பழைய பொலிவுக்கு உங்கள் பங்குச் சந்தை திரும்பும்போது நம்பிக்கையுடன் மீண்டும் லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இது முதலீட்டாளரை மிகவும் கவனமாகவும், இறுதியில் லாபங்களுக்கு வழிவகுக்கும் உணர்வையும் தருகிறது..
நிவாரணம்
மீண்டும் லாபம் ஈட்டத் தொடங்கியவுடன், உங்கள் மனம் சற்று அமைதி அடைகிறது. போதுமான கவனத்தை வர்த்தகத்தில் செலுத்துவதால் நல்ல லாபம் கிடைக்கிறது என்று உணர்ந்து கொள்ளத் தொடங்குவீர்கள். இந்த உணர்வு, முதலீட்டாளருக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து மறுபடி பங்கு சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
நம் உணர்ச்சிகளை முழுமையாகத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான் என்றாலும், நமது முடிவுகளைப் பாதிக்கும் உணர்வுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது, இழப்புகளைத் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல வழியாக இருக்கலாம். இறுதியில், நீங்கள் ஒரு அறிவார்ந்த மற்றும் வெற்றிகரமான முதலீட்டாளர் என்றாகிவிடுவீர்கள்.