சொந்தமாக வீடு வாங்குதல் என்பது, ஒருவருடைய வாழ்வில் வருகின்ற முக்கியமான நிகழ்வு. இந்தியாவைப் பொறுத்தவரை, திருமணத்தைப் போல, முதல் குழந்தைப் பிறப்பைப் போல உணர்வு பூர்வமாகக் கொண்டாட வேண்டிய நிகழ்வாக இது அமைந்துள்ளது. பொருளாதார ரீதியாகவும், முதலீடு என்கின்ற அடிப்படையிலும் ஒரு புதிய வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் என்பது மிகுந்து கவனத்தோடும் விழிப்புணர்வோடும் அணுக வேண்டிய விசயமாகும்.
நிலையான மாதச்சம்பளம் பெறுபவர்கள் வீட்டுக்கான முதலீட்டிற்காக முன் கூட்டியே திட்டமிடுகின்றனர். வீடு கட்டுவதற்கான அல்லது வீடு வாங்குவதற்கான அடிப்படைச் செலவுகளுக்காகத் தங்களுடைய சேமிப்பினை ஒதுக்கி வைக்கின்றனர். வீடு வாங்குவதற்கு ஏற்ற அடிப்படைச் செலவுகளுக்கான பணம் சேர்ந்தவுடன் உரிய முறையில் விண்ணப்பித்து வங்கிக் கடன் மூலமாக வீடு வாங்கப்படுகிறது. வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி வீட்டுக் கடனுக்கான மாத தவணையாகச் செலுத்தப்படுகிறது.
மாத தவணை
வீட்டுக் கடனுக்கான மாத தவணை கட்டுதல் என்பது மிக முக்கியமான நிதிசார் பொறுப்பாகும். வீட்டுக் கடனுக்கான மாத தவணை செலுத்துவோர் வேறு எதிலும் முதலீடு செய்ய முடியாத அளவுக்கு நிதி நெறுக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது பொதுவான உண்மையாகும். மாதத் தவணையோடு சேர்ந்து வழக்கமான செலவுகளையும் நிறைவேற்றுவது சற்றுக் கடினமான செயலாகத்தான் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் விவேகத்தோடு சிந்தித்துச் செயல்பட்டால் செலவுகளைக் குறைத்து, வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையோடு பிறவற்றிலும் முதலீடு செய்யக் கூடிய வகையில் நிதி மேலாண்மை செய்ய முடியும்.
குறைந்த அளவிலான முதலீட்டை நீண்ட காலத்திற்குச் செய்து வந்தால் மிகுந்த பயன் பெறமுடியும். கடன் மூலமாக வீடு வாங்க முடிவு செய்த பிறகும், உங்களுடைய முதலீடுகளை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கியமான காரணங்கள் குறித்து இனி காண்போம்.
உங்களுடைய கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவும்
உங்களுடைய நிதியின் ஒரு சிறு பகுதியை நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது எப்பொழுதும் நன்மை தரும். மாதம் 3000 ரூபாய் என்கின்ற அளவில் முதலீடு செய்து வந்தால் ஒரு குறிப்பிட்ட கால முடிவில் சேருகின்ற பெரும் தொகை உங்களுடைய வீட்டுக் கடனின் ஒரு பகுதியை அடைக்க உதவும்.
ஊதிய உயர்வு அல்லது பிற வகையிலான அதிகப்படியான வருமானத்தை, குறைந்த ரிஸ்க் உள்ள, பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
முதன்மைக் கடன் தொகையை முன்கூட்டி செலுத்த உதவும்
குறைந்த அளவிலான தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனுக்கான முதன்மைத் தொகையை முன்கூட்டியே செலுத்தலாம். இதனால் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும். அதன் காரணமாக, மீதமுள்ள காலத்திற்கான மாதத் தவணைகளின் தொகையும் குறையும்.
வீடு வாங்குவதற்கு முன்னால் நம்முடைய நிதி நிலைமை குறித்துத் தீவிரமாக ஆராய வேண்டும். நம்முடைய வருமானம், செலவு ஆகியவற்றை எழுதிக் கணக்கிட வேண்டும். எதிர்காலச் செலவு, முதலீடு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வீடு வாங்க முடிவு செய்ய வேண்டும்.
எதிர்காலச் செலவுகளுக்கான நிதி
நம்முடைய மாத வருமானத்தைக் கொண்டு ஆறு மாதச் செலவுகளைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் நிதியை உருவாக்க வேண்டும். எதிர் காலச் செலவுகளுக்கான இந்த நிதி அவசர காலத்தில் நம்மைப் பாதுகாக்கும். இந்தப் பணத்தை வெறும் சேமிப்பாகக் கையில் வைத்திருப்பதைக் காட்டிலும் கடன் நிதியங்களில் (debt fund) முதலீடு செய்தால் அது பெருகுவதற்கு வாய்ப்பாக அமையும்.
ஓய்வுக்கால நிதி
எதிர்கால நோக்கிலான ஓய்வூதியத்திற்கான முதலீடு என்பது தவிர்க்க முடியாதது ஆகும். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஓய்வு பெற்றே ஆகவேண்டும். அப்பொழுது நமக்கென்று தனியான நிதி ஆதாரம் வேண்டும். எனவே, வீட்டுக் கடனைக் காரணம் காட்டி ஓய்வூதிய முதலீட்டைத் தவிர்க்கக் கூடாது. முறையாகத் திட்டமிட்டால், முன் கூட்டியே முதலீடு செய்தால் வீட்டையும் வாங்கலாம், ஓய்வுக்கால நிதிக்காகவும் முதலீடு செய்யலாம்.