நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தாலே ஷாப்பிங் திருவிழாக்களும், விற்பனைக் கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும். விழாக்காலத் தள்ளுபடி விற்பனைகளில் பொருள்களை வாங்குவது நம்முடைய சேமிப்பை அதிகப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டால் இருக்கின்ற சேமிப்பையும் கரைத்துவிடும். தள்ளுபடி விலையைப் பார்த்தவுடன் திட்டமிட்டதற்கும் அதிகமாகப் பொருள்களை வாங்குவது அல்லது தேவையில்லாத பொருள்களை வாங்குவது என நம்முடைய மனசு ஆட்டம் போட தொடங்கிவிடும். விழாக்காலத் தள்ளுபடி விற்பனையைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து நிபுணர்கள் கூறும் கருத்துக்களை இங்குப் பார்ப்போம்.
பொய்யான தள்ளுபடிகளை நம்பக்கூடாது :
தில்சாத் பில்லிமோரா, இயக்குநர், தில்சர் கன்சல்டன்ட்ஸ் (Dilzer Consultants)
"வாங்குவோர்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் (caveat emptor)" என்னும் பொன்மொழியை நுகர்வோர்கள் எப்பொழுதும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தள்ளுபடி என்ற பெயரில், விலையை ஏற்றி மீண்டும் இறக்கி நுகர்வோர்களை ஏமாற்றும் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "தள்ளுபடி விற்பனை" என்னும் அலங்காரப் பலகைகளைப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது.
உதாரணமாக, ஒரு விற்பனையாளர் ஒரு பொருளை அடக்க விலையுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவு இலாபத்துடன் விற்க வேண்டும் என்றால் அந்தப் பொருளுக்கு 1,11,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வைத்துக் கொள்வோம். தற்போது அந்த விற்பனையாளர் "விழாக்காலத் தள்ளுபடி 10% " எனப் பலகையைக் கடைக்கு வெளியே தொங்கவிட்டு, ஏற்கனவே குறிப்பிட்ட பொருளின் விலையை 1,24,000 எனக் குறிப்பிட்டு அதிலிருந்து 10% தள்ளுபடியாக 12,400 ரூபாய்க் கழித்தது போக அதே பொருளை வாடிக்கையாளருக்கு 1,11,600 ரூபாய்க்கு விற்கிறார் என்றால் இலாபம் அடைவது விற்பனையாளரா? வாடிக்கையாளரா? என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.
"தள்ளுபடி" என்னும் சொல்லுக்கு நுகர்வோர்கள் மயங்கி விடுகின்றனர். அந்த மயக்கத்தில் "விழாக்காலத் தள்ளுபடி" என்னும் பெயரில் விற்கப்படும் தரமற்ற பொருள்களை வாங்கி விடுகின்றனர். அதே போன்று தங்களுக்குத் தேவையில்லாத பொருள்களையும் தள்ளுபடி மோகத்தில் வாங்குகின்றனர்.
அடுத்ததாக நுகர்வோரை வீழ்த்துவதற்காக விரிக்கப்பட்டிருக்கும் சூழ்ச்சி வலை எதுவென்றால் பாட்டா விலை (Bata pricing) நிர்ணயம். அதாவது 999 ரூபாய், 499 ரூபாய் எனப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது. ஒரு பொருளின் விலை ரூபாய் 999 அல்லது 499 எனக் குறிப்பிடப் பட்டிருந்தால், அதனை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர், "பரவாயில்லை 1000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. அல்லது 500 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்தப் பொருளை வாங்கலாம்" என உளவியல் ரீதியாக அந்தப் பொருளை வாங்குவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். வாடிக்கையாளரின் இத்தகைய மனப்போக்கினை விற்பனையாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
என்ன வாங்கவேண்டும் எனபதில் தீர்மானமாக இருக்க வேண்டும் :
அருண் ராமமூர்த்தி, இயக்குநர், கிரடிட் சுதார் (Credit Sudhaar)
தள்ளுபடி விற்பனைகளும், வாடிக்கையாளரின் மனம் கவரும் டீலிங்குகளும் விழாக் காலங்களின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் தங்களுடைய புதுவகையான மார்க்கெட்டிங் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருள்களை எப்படியாவது நுகர்வோர்கள் வாங்குமாறு செய்து விடுகின்றனர். இதிலிருந்து நுகர்வோர்கள் தப்பிக்க வேண்டும் என்றால், தாங்கள் என்ன பொருளை வாங்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பிறகு எந்த நிலையிலும் அந்த முடிவிலிருந்து மாறக் கூடாது. பொதுவாக, விழாக் காலங்களில் அதிகமாகச் செலவு செய்வது மக்களின் இயல்பாக உள்ளது. கிரடிட் கார்டுகள் மற்றும் உடனடிக் கடன் வாய்ப்புகள் ஆகியவை நுகர்வோரின் மனதைத் தூண்டி அவர்களின் வசதிக்கு மீறிச் செலவு செய்ய வைக்கின்றன.
அதிகமாகச் சாப்பிடுவது எவ்வாறு உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்குமோ அதைப் போலத்தான் அதிகமாகச் செலவு செய்வதும் ஒருவருடைய பொருளாதார நிலைமையைச் சீர் குலைத்து விடும். குறைக்கப்பட்ட விலையில் பொருள்கள் விற்பதாக வரும் விளம்பரங்கள் நுகர்வோரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் தன்னுடைய சக்திக்கும் மீறி, கடன் வாங்கி அல்லது கிரடிட் கார்டைப் பயன்படுத்தி லிமிட்டையும் தாண்டி செலவும் செய்யும் நிலைக்கு நுகர்வோர்கள் தள்ளப்படுகின்றனர். பின்னர்க் கடனை முறையாகத் திரும்பச் செலுத்த இயலாமல் தவிக்கின்றனர்.
செலவுகளை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் :
பிஜீ டொமினிக், தலைமைச் செயல் அதிகாரி ஃபைனல் மைல் கன்சல்டிங் (Final Mile Consulting)
பொதுவாகவே மனித மனம், பரிசுகளையும் சலுகைகளையும் விரும்புவது இயல்பு. எனவேதான், விழாக் காலங்களில் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு என வரும் பொழுது நிதானமாக யோசிக்காமல் ஷாப்பிங் செய்ய வேகமாகக் கடைக்குக் கிளப்பி விடுகிறோம்.
தள்ளுபடி, விலை குறைப்பு, இலவசம் போன்ற சொற்களைக் கேட்டவுடன் நுகர்வோரின் மனது உற்சாகம் கொள்கிறது. எனவே தங்களுக்குத் தேவையில்லாத பொருள்களையும் வாங்குகிறோம் என்பதையும் மறந்து தள்ளுபடி என்னும் போர்வையில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம். தீபாவளித் திருநாளின் போது குறைக்கப்பட்ட விலைகளில் பொருள்கள் விற்கப்படும் என்னும் நம்பிக்கை நுகர்வோரிடம் குடி கொண்டுள்ளது. நுகர்வோரின் இத்தகைய மனநிலையை விற்பனை நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நுகர்வோர் இரண்டு விசயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். முதலவதாக முன் கூட்டியே திட்டமிட்ட பட்ஜெட்டையும் மீறி செலவு செய்யக் கூடாது. பொருள்களின் விலை எவ்வளவு குறைவாக இருந்தாலும், திட்டமிட்டதையும் மீறி செலவு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக எதை வாங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு மயங்கி, திட்டமிட்ட பொருள்களைத் தவிர வேறு எதையும் வாங்கக் கூடாது.
கவர்ச்சிகரமான விற்பனைத் திட்டங்களில் மயங்கக் கூடாது :
பகார் நக்வி, இயக்குநர், வாஜிர் அட்வைசர்ஸ் (Wazir Advisors)
"மெகா சேல்" என்பது ஒவ்வொரு வருடமும் தவறாமல் நிகழும் விற்பனை நிகழ்வாக மாறிவிட்டது. பல வாடிக்கையாளர்கள் இந்த மெகா விற்பனை எப்பொழுது வரும் எனக் காத்திருக்கின்றனர். இந்த விற்பனைகளில் சில உண்மையான தள்ளுபடி விற்பனைகளும் உண்டு. இவை நுகர்வோருக்குப் பெரிதும் பயன் தரக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதனைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது நுகர்வோரின் கையில்தான் உள்ளது. மெகா விற்பனை, தள்ளுபடி விலை என்கின்ற வார்த்தைகளில் மூழ்கி என்ன வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த தேவையான பொருளை வாங்குவதை விட்டு, விலை குறைவான பொருளை வாங்க வேண்டும் என்கின்ற மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். முடிவு, தேவையற்ற பொருளை வாங்கி விடுகிறோம். அதன் காரணமாகவே அதிகம் பயன்பாடு இல்லாத பொருளை வாங்கி விடுகிறோம். சுலப மாத தவணை (EMIs), கிரடிட் கார்டு, எளிமையான கடன் வசதி என நுகர்வோரின் மனதைத் தடுமாறச் செய்யும் அறிவிப்புகள் அவர்களைக் கடன்காரர்களாக மாற்றி விடுகின்றன.
வீடு தேடி வரும் பொருள்கள், எண்ணற்ற வகையிலான விதம் விதமான பிராண்டுகள், மனதை மயக்கும் தள்ளுபடிகள், எளிமையாகக் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தும் வசதி ஆகியவை நுகர்வோர் மனதில் பொருள்களை வாங்கும் எண்ணத்தைத் தீவிரமாகத் தூண்டி விடுகின்றன. நுகர்வோரும் எந்த வாய்ப்புகளையும் தவறவிடக் கூடாது என நினைகின்றனர். உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் புதிது புதிதாகப் பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு வந்து நுகர்வோரின் தேடலையும் நுகர்வு எண்ணத்தையும் அதிகப் படுத்துகின்றனர்.
பொருள்களின் தரம், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விலை குறைப்பு, சலுகைகள் ஆகியவற்றின் மீது நுகர்வோரின் கவனம் குவிகின்றது. விலை குறைப்புச் செய்யாத தரமான நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. விலை குறைப்பு செய்யும் நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருள்களின் தரத்தை இழந்து விடுகின்றனர்.